பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 2வது ஆட்சி காலத்தின் கடைசி முழுப் பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
எங்குத் திரும்பினாலும் பணிநீக்கம், விலைவாசி உயர்வு, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி சரிவு, உள்நாட்டில் டிமாண்ட் சிரிவு எனப் பல பிரச்சனைக்கு மத்தியில் புதிதாக வீட்டு விலை, வீட்டு வாடகை உயர்வு ஆகியவை நுகர்வோர் பணவீக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தயாராகியுள்ளது.
இந்த அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சகம் 2023 - 24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யுமா என்ற கேள்வி மக்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் மத்தியில் பெரும் கேள்வியாக இருக்கும் நிலையில் இந்தப் பட்ஜெட் அறிக்கையைத் தயாரிக்கும் A Team-ல் யாரெல்லாம் இருக்கிறார்கள்.
நிர்மலா சீதாராமன்
உலகளாவில் ரெசிஷன் அச்சம் அதிகமாக இருக்கும் நிலையில் இந்தியாவில் ஜூன் மாதம் ரெசிஷன் வரும் என மத்திய MSME துறை அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துள்ள வேளையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான பட்ஜெட் குழு அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்-ஐ தீவிரமாகத் தயாரித்து வருகிறது.
பட்ஜெட் A Team
இந்த நிலையில் பட்ஜெட் தயாரிப்புக் குழுவில் யாரெல்லாம் இருக்கிறார்கள், இவர்கள் ஏன் ரொம்ப ஸ்பெஷல் என்ற முழு விபரத்தையும் இப்போது பார்ப்போம்.
டிவி சோமநாதன்
டிவி சோமநாதன் இவர் மத்திய நிதி மற்றும் செலவின துறை செயலாளர்
தமிழ்நாடு கேடர் கீழ் 1987 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியும், பட்ஜெட் தயாரிப்பில் பல ஆண்டுக் காலம் அனுபவமுள்ள முக்கியத் தலைவராக டிவி சோமநாதன் திகழ்கிறார். மத்திய நிதிச் செயலாளராக இருந்து பட்ஜெட் தயாரிப்பை முன்னின்று நடத்துகிறார்.
நிதிச் செலவினங்களின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் மேம்படுத்தும் பணிகளைச் சரியான முறையில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். உலகளவில் பொருளாதார நிச்சயமற்ற தன்மையில் சோமநாதனின் பணி மிகவும் சிக்கலாக்க உள்ளது.
சஞ்சய் மல்ஹோத்ரா
சஞ்சய் மல்ஹோத்ரா இவர் மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஆவார்.
ராஜஸ்தான் கேடர் 1990 பேட்ச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் மல்ஹோத்ரா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வருவாய்த் துறையில் பணியில் சேர்ந்தார். இந்தப் பட்ஜெட்-ல் அவருக்கு ஒரு கடினமான பணி உள்ளது என்று சொன்னால் மிகையில்லை.
இந்தியாவில் நிலவும் அதிகப்படியான பணவீக்கத்தின் மத்தியில், தேர்தல்களுக்குக் கூடுதல் செலவினங்களுக்கு நிதியளிக்க வேண்டிய சூழ்நிலையில் வருவாய அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் அனைத்து தரப்பினரிடத்திலும் வரி சலுகைக்காகக் கோரிக்கை எழுந்து வருகிறது.
சஞ்சய் மல்ஹோத்ரா ஐஐடி கான்பூர் முன்னாள் மாணவர் ஆவார், இந்தப் பட்ஜெட் அறிக்கையில் வரி முறைப்படுத்தல் மற்றும் நேரடி வரி விதிப்பு முறைகளை எளிமைப்படுத்துவதில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வி அனந்த நாகேஸ்வரன்
அனந்த நாகேஸ்வரன் இவர் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆவார்.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (PMEAC) முன்னாள் உறுப்பினரான வி அனந்த நாகேஸ்வரன், 2023 -24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் திட்டம் தயாரிப்பதற்கான சில வாரங்களுக்கு முன்பு தான் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இவர் உலகின் பல முன்னணி நிதி நிறுவனத்தில் பணியாற்றியுள்ளதால் சர்வதேச சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப இந்தியாவில் தனியார் முதலீட்டை ஈர்ப்பதில் அனந்த நாகேஸ்வரனின் இன்புட் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
துஹின் காந்தா பாண்டே
துஹின் காந்தா பாண்டே இவர் மத்திய முதலீட்டுத் மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை (DIPAM) துறையின் செயலாளர் ஆவார்.
ஒடிசா கேடர் 1987 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான துஹின் காந்தா பாண்டே, ஏர் இந்தியாவின் தனியார்மயமாக்கல் மற்றும் லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் (எல்ஐசி) ஐபிஓ போன்ற மத்திய அரசுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் தனியார்மயமாக்கல் திட்டத்தைச் செயல்படுத்துகிறார்.
இந்தப் புதிய நிதியாண்டில் ஐடிபிஐ வங்கியின் பங்கு விற்பனை, பிற அரசு சொத்துக்கள் மற்றும் நிறுவனங்களின் விற்பனை, நீண்ட காலக் குத்தகை எனப் பல விஷயங்கள் உள்ளது.
அஜய் சேத்
அஜய் சேத் இவர் பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலாளர் ஆவார்.
கர்நாடக கேடர் 1987 ஐஏஎஸ் பேட்ச் அதிகாரியான அஜய் சேத், ஏப்ரல் 2021 இல் பொருளாதார விவகாரச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்தியாவின் ஜி 20 தலைமை பதவியில், மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் முயற்சிகள் எடுக்கும் அதே வேளையில் பொருளாதாரத்தை வளர்ச்சி தூண்டுதல்களுக்காகப் பட்ஜெட்டில் அஜய் சேத் பங்கு முக்கியமானது.
விவேக் ஜோஷி
விவேக் ஜோஷி இவர் நிதி சேவைகள் துறையின் செயலாளர் ஆவார்.
ஹரியானா கேடர் 1989 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான விவேக் ஜோஷி, மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிதி நிறுவனங்களின் சீர்திருத்தங்கள், வங்கிகள் வாயிலாக வர்த்தகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டு முயற்சிகள் ஆகியவைற்றை இந்தப் பட்ஜெட்டில் முன்வைப்பார் எந எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுத்துறை வங்கிகள் கடந்த ஒரு ஆண்டில் சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளன, அரசு நடத்தும் 12 வங்கிகள் செப்டம்பர் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாப அளவு 50% அதிகரித்து 25,685 கோடி ரூபாயாக உள்ளது.
வரவிருக்கும் பட்ஜெட் அறிக்கையில் தனியார்மயமாக்கலுக்கு வழி வகுக்கும் வங்கித் திருத்த சட்டத்தையும் அறிவிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. டிஜிட்டல் மயமாக்கல் மூலம் நிதி உள்ளடக்கம் திட்டங்கள் வரவிருக்கும் பட்ஜெட்டில் மத்திய அரசு முக்கியக் கவனம் செலுத்தும்.