மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யும் மத்திய பட்ஜெட் அறிக்கையை அனைத்து தரப்பினரும் பல காரணங்களுக்காக எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
ஆனால் இந்தியாவில் தற்போது உற்பத்தி மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு ஏற்ப போக்குவரத்துத் துறையும், லாஜிஸ்டிக்ஸ் துறையும் பெரிய அளவில் மேம்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதேபோல் லாஜிஸ்டிக்ஸ் துறையில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் இந்தியாவில் இருக்கும் வேலைவாய்ப்பு பிரச்சனையைச் சரி செய்ய முடியும் என ஏற்கனவே பட்ஜெட் 2023 அறிக்கை குறித்த எதிர்பார்ப்பில் பார்த்திருந்தோம்.
இந்த நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யும் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் ரயில்வே துறைக்கான அறிவிப்புகள் என்னென்ன இருக்கும்..?
இந்திய ரயில்வே
2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இந்திய ரயில்வே துறைக்குக் கிட்டத்தட்ட 1.9 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு மூலம் இந்திய ரயில்வே துறை நவீனமயமாகும்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி தலைமையிலான அரசு வந்தே பாரத் ரயில் திட்டத்திற்கு ஒரு பெரிய அளவிலான நிதி ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதி ஒதுக்கீடு மூலம் இந்திய ரயில்வே துறையில் கூடுதலாக 500 செமி ஹைய் ஸ்பீடு ரயில்கள் மற்றும் 35 ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்கள் சேர்க்கப்பட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
வந்தே பாரத் ரயில்
மத்திய அரசு இரண்டு காரணங்களுக்காக வந்தே பாரத் ரயில் திட்டத்தை வலியுறுத்துகிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் அனைத்து ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களை வந்தே பாரத் மூலம் மாற்றி ரயில் சேவையின் சராசரி வேகம் 180km/h ஆக உயர்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.
வந்தே பாரத் ரயில் ஏற்றுமதி
இரண்டாவதாக, வந்தே பாரத் ரயில் திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம் 2025-26க்குள் ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இந்த ரயில்களை ஏற்றுமதி செய்ய நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது.
புதிய திட்டங்கள்
இந்தப் பட்ஜெட் அறிக்கையில் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு திட்டத்தின் விரிவாக்கம் தவிர, புதிதாக வடிவமைக்கப்பட்ட 4,000 ஆட்டோமொபைல் கேரியர் கோச்சு-கள் மற்றும் 58,000 வேகன்களும் வரவிருக்கும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு அடுத்த 3 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும்.
ஹைட்ரஜன் ரயில்கள்
இதேவேளையில் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டார்ஜிலிங், நீலகிரி, கல்கா-சிம்லா மற்றும் காங்க்ரா பள்ளத்தாக்கு ஆகிய எட்டு பாரம்பரியமிக்க வழித்தடங்களில் ஹைட்ரஜன் எரிவாயுவில் இயங்கும் ரயில்களை இயக்குவதற்கான திட்டத்தை ஏற்கனவே வெளியிட்டார். இந்தத் திட்டமும், இதற்கான நிதி ஒதுக்கீடும் பட்ஜெட்-ல் இடம்பெற வாய்ப்பு அதிகம்.
இந்திய மலை ரயில்கள்
ஹரியானாவில் சோனிபட்-ஜிந்த் பிரிவில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்றும், வடக்கு ரயில்வே வொர்க்ஷாப்-ல் இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில் முன்மாதிரிகளை உருவாக்கப்படுகிறது. இந்த ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும் போது இந்திய மலைகளில் பயன்படுத்தும் ரயில்கள் பூஜ்ஜிய கார்பன் உமிழும் தன்மை பெறும்.