டெல்லி: கொரோனாவுக்கு பின் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள வாகன துறையிலும் பற்பல எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது. குறிப்பாக பழைய வாகனங்கள் அகற்றுவது குறித்து சலுகை அறிவிப்புகள் வருமா? இதன் மூலம் வாகன துறையை மேம்படுத்த அறிவிப்பு இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஆட்டோமொபைல் துறையினர் மத்தியில் இருந்து வந்தது.
அந்த வகையில் நாட்டில் மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை அகற்ற மத்திய மாநில அரசுகள் சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.
வரி குறைப்பு
மற்றொரு மிகப்பெரிய அறிவிப்பு லித்தியம் அயன் பேட்டரி இறக்குமதிக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. இதுவும் வாகன துறையினருக்கு ஆறுதல் அளிக்கும் எனலாம்.
இந்த பேட்டரிகள் பொதுவாக மீண்டும் மீண்டும் மின்னேற்றம் செய்து கொள்ளலாம். இதில் லித்தியம் அயன் பேட்டரி என்பது எடை குறைந்த எளிதில் எடுத்து செல்லச் செல்லத்தக்க ஆற்றல் மிக்க ஒரு பேட்டரியாகும்.
வாகன உற்பத்தியாளர்களுக்கு பலன்
இந்த லித்தியம் அயன் பேட்டரிகள் பொதுவாக ஸ்மார்ட்போன் முதல் மின்சார கார்கள் வரையில் பல இடங்களில் பயன்படுத்தப்படுகின்றது. இந்த பேட்டரியை மின்சார வாகனங்களில் பயன்படுத்தும் போது மைலேஜ் அதிகம் கிடைப்பதாகவும் கூறப்படுகின்றது. அப்படியிருக்கும்பட்சத்தில், இந்த குறைப்புக்கு பிறகு இவற்றின் இறக்குமதி அதிகரிக்கும். மின்சார வாகனங்களுக்கான செலவும் குறையும் எனலாம். இது மின்சார கார்களுக்கான விலையினை கட்டுக்குள் வைக்கவும், உற்பத்தியினை பெருக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.
தேவையை அதிகரிக்கலாம்
இதேபோல மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை மாற்ற நிதியுதவி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பழைய வாகனங்களை மாற்றி, புதிய வாகனங்களை வாங்க தூண்டும் என்பதால், இது வாகனங்களுக்கான தேவையினை ஊக்குவிக்கும்.
பட்ஜெட் 2021ல் என்ன அறிவிப்பு
கடந்த பட்ஜெட் 2021ல் வாகன அழிப்பு திட்டம் பற்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். தனி நபர் வாகனங்களுக்கு 20 வருடங்கள் கழித்தும், வர்த்தக வாகனங்கள் 15 ஆண்டுகள் கழித்தும் ஸ்கிராப்பிங் செய்யும் திட்டம் விரைவில் அமலுக்கு கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த திட்டமானது அமலுக்கு வரும்போது, வாகனத்துறைக்கு பெரிய ஊக்கத்தினை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது ஒட்டுமொத்த வாகனத்துறையை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.எனினும் இது சரியாக செயல்பாட்டுக்கு வரவில்லை என்றே கூறலாம்.
நிதின் கட்கரி அறிவிப்பு
இந்த நிலையில் தான் இதனை ஊக்குவிக்கும் விதமாக இந்த ஸ்கிராப் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஆம்புலன்ஸ் உள்பட அனைத்தும் சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் மத்திய மற்றும் மா நில அரசுகளின் வாகனங்கள் ஏப்ரல் 1, 2023 முதல் அழிக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.