மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான நிதியமைச்சகம் மற்றும் பட்ஜெட் தயாரிப்பு குழு உறுப்பினர்கள் பல வாரங்களாகத் தொழில் அமைப்புகள் மற்றும் நிதி நிபுணர்களுடன் ஆலோசனை செய்த பிறகு, 2023-24 பட்ஜெட் தயாரிப்பு பணிகளைத் தொடங்கியுள்ளது.
இந்தப் பட்ஜெட் பிரதமர் மோடி தலைமையிலான 2வது ஆட்சி காலத்தின் கடைசி முழுப் பட்ஜெட் என்பதால் அரசியல் ரீதியாகவும் இந்தப் பட்ஜெட் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
இதேவேளையில் 2023ல் உலக நாடுகள் அனைத்தும் ரெசிஷனுக்குள் நுழையும் எனக் கணிக்கப்பட்டு உள்ள நிலையில் மத்திய அரசின் இந்தப் பட்ஜெட் அறிக்கை மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வயிற்றுத் தொற்றுக் காரணமாக டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) தனியார் வார்டில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பட்ஜெட் பணிகள் தொய்வடைய வாய்ப்புகள் உள்ளது.
தனிநபர்
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை அதிகரித்துள்ள மக்கள் செலவு செய்வதைப் பெரிய அளவில் குறைத்துள்ள காரணத்தால் தனிநபருக்கான சலுகைகள் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் அரசின் மூலதனச் செலவினங்களுக்கு ஒரு பெரிய உந்துதலைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தகத் துறை
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 ஆம் ஆண்டில் வரி வசூலில் சிறப்பான வளர்ச்சி அடைந்த நிலையில் கூடுதல் செலவினங்களுக்கு நிதியளிக்க முடியும் என்று நம்புகிறார். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022-23 ஆம் ஆண்டின் முதல் பாதியில் (ஏப்ரல்-செப்டம்பர்) மொத்த வரி வருவாய் வசூல் 18% அதிகரித்துள்ளது.
எதிர்பார்ப்புகள் - தேவைகள் என்ன..?
இதனால் இந்தப் பட்ஜெட் தனிநபருக்கும் சரி, வர்த்தகத் துறைக்கும் சரி சாதகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசு வெளியிட உள்ள 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் முக்கிய எதிர்பார்ப்புகள் என்னென்ன..? சந்தைக்கான தேவைகள் என்ன..?
ஹெல்த் இன்சூரன்ஸ்
கொரோனா தொற்றுக்குப் பின்பு இந்தியாவில் ஹெல்த் இன்சூரன்ஸ் எந்த அளவிற்கு முக்கியம் என அனைவரும் உணர்ந்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் தங்களின் குடும்பத்தைக் காப்பாற்ற அதிகளவிலான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் வருமான வரிச் சட்டத்தில் 80டி பிரிவில் தற்போது ஹெல்த் இன்சூரன்ஸ்-க்கு 25000 ரூபாய் மட்டுமே வரிச் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது, இதை 1 லட்சம் ரூபாய் வரையில் அதிகரிக்க வேண்டும் எனப் பல தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
80சி பிரிவு
கடந்த 9 வருடமாக 80சி பிரிவில் 1.5 லட்சம் ரூபாய் அளவிலான தொகைக்கு மட்டுமே வருமான வரிச் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் standard deduction பிரிவில் 50000 மட்டுமே ஜீரோ வரிச் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 80சி பிரிவில் அளிக்கப்படும் வரி சலுகையை 2.5 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்த வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதேபோல் புதிய வருமான வரித் திட்டத்தில் தற்போது ஜீரோ வரி விதிப்பு 2.5 லட்சம் ரூபாய் வரையில் அளிக்கப்படும் நிலையில், இதை 5 லட்சம் வரையில் அதிகரிக்க வேண்டும் எனத் திட்டத்தை அரசே ஆலோசனை செய்து வருகிறது.
கேப்பிடல் கெயின்ஸ் டாக்ஸ்
தற்போது கேப்பிடல் கெயின்ஸ் டாக்ஸ் ஒவ்வொரு முதலீட்டுக்கும், முதலீட்டாளர்களுக்கும் ஏற்றவாறு வரி விதிப்புகள் மாறுபட்டு உள்ளது. இதை யூனிபார்ம் ஆக அனைத்துத் தரப்பு முதலீட்டுக்கும் காலம், வரி விதிப்பை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முக்கியமானதாக உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் எப்படிப் பல குழப்பங்கள் இருந்ததோ அதேபோலத் தான் தற்போது கேப்பிடல் கெயின்ஸ் வரி பிரிவிலும் உள்ளது.
டர்ம் பிளான்
லைப் இன்சூரன்ஸ் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் முக்கிய முதலீட்டுத் திட்டமாக இருக்கும் நிலையில், மத்திய அரசு வருமான வரிச் சட்டத்தில் லைப் இன்சூரன்ஸ் வரி சலுகைக்குத் தனிப் பிரிவை உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. அதாவது 80சி பிரிவில் பெரும்பாலான மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் லைப் இன்சூரன்ஸ் தொகையைத் தனி வருமான வரிப் பிரிவில் சலுகை அளிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
பென்ஷன் திட்டங்கள்
லைப் இன்சூரன்ஸ் முதலீட்டுக்கு வரிச் சலுகை அளிக்கப்படுவது போல் பென்ஷன் திட்டங்களுக்கும் அதிகப்படியான வரிச் சலுகைகள் அளிக்கப்படுவதன் மூலம் இத்துறையில் கூடுதல் முதலீட்டை பெற முடியும் என்பது மட்டும் அல்லாமல் மக்களின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதால் இந்தக் கோரிக்கையை முக்கியமானதாக மத்திய அரசிடம் இத்துறை அதிகாரிகள் வைத்துள்ளனர். இது மட்டும் நடந்தால் இந்தியாவில் அடுத்தப் பெரிய முதலீட்டுத் துறையாக இது மாறும்.
ஹோம் லோன்
வட்டி விகிதம் அதிகரித்துள்ளதால் சொந்த வீடு வாங்க திட்டமிடுவோர்-க்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. இந்த நிலையில் இச்சுமையைக் குறைக்கத் தற்போது பிரிவு 24 கீழ் 2 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வீட்டுக்கடன் வட்டி தொகை பேமெண்ட்-க்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. இதை 5 லட்சம் வரையில் அதிகரிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.