முழுமையாக கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில், முதல் முறையாக இந்தியாவில் கொரோனாவுக்கு பிறகு பட்ஜெட் 2023 தாக்கல் செய்யப்படவுள்ளது. அதோடு ஆளும் மத்திய அரசின் முழுமையான கடைசி பட்ஜெட் இது என்பதால், இது பெருத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் ரியல் எஸ்டேட் துறையில் பல முக்கிய எதிர்பார்ப்புகள் உள்ளது. ஏற்கனவே பல முக்கிய மெட்ரோ நகரங்களில் ரியல் எஸ்டேட் வணிகமானது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எனினும் தற்போது பற்பல பிரச்சனைகள் ரியல் எஸ்டேட் துறையில் நிலவி வருகின்றது.
தேவையானது அதிகரிக்கலாம்
எனினும் அடுத்த சில மாதங்களில் மீண்டும் தேவையனது மீண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஆய்வறிக்கையின் படி, ரியல் எஸ்டேட் துறையில் இந்தியாவின் முக்கிய 8 நகரங்களில் 15% வளர்ச்சியானது இருந்தது. இது 2023ம் ஆண்டில் இதே போன்றதொரு வளர்ச்சி இருக்கலாம் என்ற எதிர்பார்க்கின்றது.
வரி சலுகை அளிக்கலாம்
இதற்கிடையில் வரவிருக்கும் பட்ஜெட் 2023ல் சிறிய அளவிலான வீட்டுக் கடன்களுக்கு வரி சலுகை அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கும் குறைந்த வட்டி விகிதம், கட்டணங்கள் குறைப்பு உள்ளிட்ட பலவற்றை செயல்படுத்தலாம். இது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியானால், அது நலிவடைந்தோருக்கு பெரும் ஆறுதலாக அமையலாம்.
வரி விலக்கு
தற்போது வீட்டுக் கடன்களுக்கான வரி விலக்கு 1.5 லட்சம் ரூபாயாக அளிக்கப்படுகின்றது. இது 4 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும். இது தவிர வருமான வரி சட்டம் 1961, பிரிவு 24ன் கீழ் அளிக்கப்படும் விலக்கு வரம்பினையும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. தற்போது 24வது பிரிவின் படி வீட்டுக் கடன் திரும்ப செலுத்தும் வட்டிக்கு 2 லட்சம் ரூபாய் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகின்றது. இந்த வரி விலக்கை 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
வீடு வாங்குபவர்களுக்கு பயன் அளிக்கலாம்
ஏற்கனவே வட்டி விகிதமும் அதிகமாக உள்ள சூழலில் இது பெரும் ஆறுதலை அளிக்கலாம். இது வீடு விற்பனையை அதிகரிக்க தூண்டலாம். குறிப்பாக நடுத்தர மக்களுக்கும், கீழ்தட்டு மக்களுக்கும் மிக பயனுள்ள ஒன்றாக அமையலாம்.
மூலதன வரியில் இருந்து விலக்கு
வருமான வரி சட்டத்தின் கீழ் 54வது பிரிவின் கீழ், ஒரு வீட்டை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் புதிய அல்லது கட்டுமானத்தில் உள்ள வீட்டை வாங்க பயன்படுத்தலாம். இதன் மூலம் நீண்டகால மூலதன ஆதாய வரியில் இருந்து விலக்கு கோரலாம். எவ்வாறயினும் கட்டுமானத்தில் உள்ள சொத்தின் விஷயத்தில் , விற்பனை செய்யப்பட்ட நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் கட்டுமானம் செய்து முடித்தாக மட்டும் விலக்கு கோர முடியும்.
முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு
முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு 80இஇ-ன் கீழ் வரிச்சலுகை அளிக்கப்படுகின்றது. இந்த பிரிவின் கீழ் 50,000 ரூபாய் வரிச்சலுகையாக பெறலாம். ஆக இந்த வரி விலக்கினை பட்ஜெட்டில் 1 லட்சம் ரூபாயாக உயர்ததி வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது.
பசுமை கட்டிடங்களை ஊக்குவிக்கணும்
மற்றொரு தரப்பினர் முத்திரை கட்டணங்களை குறைக்க வேண்டும். பசுமை கட்டிடங்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். அதற்கான சலுகைகளை பில்டர்களுக்கும், வீடு கட்டுவோருக்கும், வாங்குவோருக்கும் அரசு ஊக்குவிக்கலாம், குறிப்பாக ரியல் எஸ்டேட் துறை சார்ந்த ஸ்டார்ட் அப்களை இத்துறையை மீட்டெடுக்க ஊக்குவிக்கலாம்.