இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பாஸ்ட் புட் நிறுவனமான பர்கர் கிங் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிட தயாராகியுள்ளது. இந்தக் கொரோனா காலத்தில் மக்களுக்குச் சிறந்த முதலீட்டுத் தளமாக மாறிய ஐபிஓ-வில் அடுத்தடுத்த நிறுவனங்கள் பட்டியலிடத் தயாராகி வரும் நிலையில் பர்கர் கிங் இளம் முதலீட்டாளர்களைப் பெரிய அளவில் ஈர்த்துள்ளது.
பர்கர் கிங் இந்தியா நிறுவனம் 10 ரூபாய் முகமதிப்புக் கொண்ட பங்குகளை 59 முதல் 60 ரூபாய்க்கு வருகிற டிசம்பர் 2ஆம் தேதி இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிட உள்ளது. இந்த ஐபிஓ திட்டத்தின் மூலம் பர்கர் கிங் சுமார் 810 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டுள்ளது.
இந்தப் பங்கு விற்பனை மூலம் இந்தியாவில் பர்கர் கிங் தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியும்.
13.5 கோடி பங்குகள்
இந்த ஐபிஓ திட்டத்தில் பர்கர் கிங் சுமார் 13.5 கோடி பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. இதில் 7.5 கோடி பங்குகள் புதிதாக விற்பனை செய்யப்படுகிறது, இதன் மூலம் 450 கோடி ரூபாயும், பர்கர் கிங்-ன் ப்ரோமோட்டர் நிறுவனமான QSR ஏசியா பிடிஇ நிறுவனம் 6 கோடி பங்குகளை அப்பர் பேண்ட் அதாவது அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்து சுமார் 360 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்க்க உள்ளது.
உலகின் 2வது பெரிய நிறுவனம்
பர்கர் கிங் உலகளவில் அதிக ரெஸ்டாரன்ட்களை வைத்துள்ள பாஸ்ட் புட் நிறுவனங்களில் 2வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா மற்றும் உலகின் 100 நாடுகளில் வர்த்தகம் செய்யும் பர்கர் கிங் சுமார் 18,000 ரெஸ்டாரன்ட்களை வைத்து உலகமும் முழுவதும் வர்த்தகம் செய்து வருகிறது.
700 ரெஸ்டாரன்ட்
பர்கர் கிங்-ன் மாஸ்டர் பிரான்சைஸ் மற்றும் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இந்தியாவில் வருகிற டிசம்பர் 31, 2026க்குள் 700 ரெஸ்டாரன்ட்களைத் திறக்க வேண்டும் என்பதால் இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
வருமானம்
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பர்கர் கிங் 2017ஆம் நிதியாண்டில் 230 கோடி ரூபாய் மட்டுமே வருமானம் பெற்ற நிலையில் 2019ஆம் நிதியான்டில் 633 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது. இதே காலகட்டத்தில்
இந்நிறுவனத்தின் நஷ்ட அளவு 72 கோடியில் இருந்து 38 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
202 ரெஸ்டாரன்ட்
இந்தியாவில் 2014ல் துவங்கப்பட்ட பர்கர் கிங் இந்தியா முழுவதும் வேகமாக வளர வேண்டும் எனக் கடுமையான முயற்சிகளைச் செய்து வரும் நிலையில், பர்கர் கிங் இந்தியா மற்றும் அதன் பிரான்சைஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் 16 மாவட்டங்களில் சுமார் 47 நகரங்களில் 202 ரெஸ்டாரன்ட்களை வைத்து வர்த்தகம் செய்து வருகிறது.
பங்கீடு
பர்கர் கிங் தற்போது விற்பனை செய்யும் 13.5 கோடி பங்குகளில் 10 சதவீதம் மட்டுமே ரீடைல் முதலீட்டாளர்களுக்குப் பர்கர் கிங் ஒதுக்கீடு செய்துள்ளது. 15 சதவீத பங்குகளை நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும், 75 சதவீதம் நிறுவன முதலீட்டாளர்களுக்கும் பர்கர் கிங் ஒதுக்கீடு செய்துள்ளது.
250 பங்குகள்
ரீடைல் முதலீட்டாளர்கள் டிசம்பர் 2ஆம் தேதி ஐபிஓ-வில் ஒரு லாட்டுக்கு 250 பங்குகளை வாங்க முடியும். இதேபோல் எத்தனை 250 பங்குகளை வேண்டுமானாலும் வாங்க முடியும் என்பதும் புதிய முதலீட்டாளர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அதிகப்படியாக ஒரு ரீடைல் முதலீட்டாளர் உச்ச விலையில் 3,250 பங்குகளை வாங்க முடியும்.