இந்திய சந்தையை இந்த ஆண்டுப் பல விஷயங்கள் பாதித்த நிலையில் முக்கியத் தலைவர்களின் மரணம் இந்திய வர்த்தகச் சந்தையில் பெரும் வெற்றிடத்தை உருவாக்கியது.
ஒவ்வொரு வருடமும் சில தலைவர்களின் மரணம் வர்த்தகச் சந்தையைப் பாதித்தாலும், இந்த வருடம் இதன் மதிப்பு சற்று அதிகம் என்றே சொல்லலாம். பல இளம் தலைமுறை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதல் பல மூத்த தலைவர்கள் வரையில் பல முக்கியமானவர்கள் காலமானார்கள்.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
இந்தியாவின் "பிக் புல்" "வாரன் பஃபே" என்று அழைக்கப்படும் மூத்த பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஆகஸ்ட் 14 அன்று காலமானார். பங்கு முதலீட்டின் மூலம் நாட்டின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஜுன்ஜுன்வாலாவின் மறைவு அவரின் முதலீட்டில் புதிதாகத் தொடங்கப்பட்ட விமான நிறுவனமான ஆகாசா ஏர் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி கேள்விக்குறியாகியுள்ளது.
சைரஸ் மிஸ்திரி
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான சைரஸ் மிஸ்திரி செப்டம்பர் 4ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் கார் விபத்தில் உயிரிழந்தார், அவருக்கு வயது 54. குஜராத் மாநிலம் உத்வாடாவில் இருந்து மும்பைக்குச் சைரஸ் மிஸ்திரி பயணம் செய்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது.
மிஸ்திரியின் மரணம் டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்குவது தொடர்பான ஐந்தாண்டு காலச் சட்டப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
பல்லோன்ஜி மிஸ்திரி
சைரஸ் மிஸ்திரி-யின் மறைவுக்குச் சில மாதங்களுக்கு முன்பு தான் அவருடைய தந்தை பல்லோன்ஜி மிஸ்திரி மறைந்தார். பல்லோன்ஜி மிஸ்திரி ஜூன் 28 அன்று உடல் நல குறைவால் காலமானார். அவர் இந்தியாவின் பணக்கார நிறுவனங்களில் ஒன்றின் தலைவராக இருந்தார். பல்லோன்ஜி மிஸ்திரி-யின் SP குழுமம், டாடா குழுமத்தில் 18.37 சதவீத பங்குகளுடன் மிகப்பெரிய பங்குதாரராக உள்ளது.
ஜாம்ஷெட் ஜிஜி இரானி
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரான ஜேஜே இரானி தனது 86வது வயதில் நவம்பர் மாதம் காலமானார். இந்தியாவின் ஸ்டீல் மேன் என்று அழைக்கப்படும் இரானி, டாடா ஸ்டீலை சர்வதேச சந்தையில் போட்டியிடக் கூடிய குறைந்த விலை, உயர்தர ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமாக மாற்றுவதில் அதிகப்படியான கவனம் செலுத்தினார்.
ராகுல் பஜாஜ்
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகப் பஜாஜ் குழுமத்தின் தலைவராக இருந்த ராகுல் பஜாஜ் பிப்ரவரி 12 அன்று காலமானார். அவரது பதவிக் காலத்தில், நிறுவனம் அதன் டர்ன்ஓவர் 7.2 கோடி ரூபாயில் இருந்து 12,000 கோடி ரூபாயாக உயர்ந்தது. உலகின் டாப் 500 பில்லியனர்களில் ஒருவராக இருந்த அவர், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் போன்ற பல பதவிகளை வகித்தவர் ராகுல் பஜாஜ்.
விக்ரம் கிர்லோஸ்கர்
நவம்பர் 30 அன்று டொயோட்டா கிர்லோஸ்கர் துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கரின் மறைவுடன் இந்திய ஆட்டோமொபைல் உலகில் மற்றொரு வெற்றிடம் உருவானது. 1990களின் பிற்பகுதியில் ஜப்பான் நாட்டின் டொயோட்டா மோட்டார் கார்ப் நிறுவனத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவதில் அவர் முக்கியமானவர் விக்ரம் கிர்லோஸ்கர்.
விக்ரம் கிர்லோஸ்கர் டொயோட்டா குழுமத்துடன் இணைந்து கர்நாடகாவில் ஒரு முக்கிய ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலையை உருவாக்கினார்.
சுனில் காந்தி ராய்
கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட பியர்லெஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநரான எஸ்.கே.ராய், மே 9 அன்று 78 வயதில் காலமானார். இக்குழுமத்தின் கீழ் ரியல் எஸ்டேட், சுகாதாரம், விருந்தோம்பல் மற்றும் நிதிச் சேவைகள் ஆகியவை அடங்கும்.
துளசி தந்தி
சுஸ்லான் எனர்ஜியின் நிறுவனர் துளசி தந்தி, இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் முன்னோடிகளில் ஒருவர். அக்டோபர் 1 அன்று அவரது மறைவு, சமீபத்தில் கடனை மறுசீரமைத்த சுஸ்லான் எனர்ஜியை ஒரு கடினமான நிலைக்குத் தள்ளியது.
விஜி நாயர்
ஏற்றுமதி சார்ந்த நியூட்ராசூட்டிகல்ஸ் நிறுவனமான Sami-Sabinsa தலைமை நிர்வாக அதிகாரி VG நாயர் ஜூலை 6 அன்று காலமானார்.
சோஷில் குமார் ஜெயின்
Panacea Biotec (முன்பு இதன் பெயர் Panacea Drugs) நிறுவனர் சோஷில் குமார் ஜெயின் அக்டோபர் 7ஆம் தேதி, 89 வயதில் காலமானார். Panacea Biotec இந்தியாவின் முன்னணி தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும்.
அரீஸ் கம்பட்டா
ரஸ்னா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அரீஸ் கம்பட்டா நவம்பர் 19 அன்று தனது 85வது வயதில் காலமானார். அவரது தலைமையின் கீழ், கோகோ கோலா பெப்சி போன்றவற்றுக்கு ரஸ்னா சில காலம் கடும் போட்டியைக் கொடுத்தார்.