இந்தியாவில் யாராக வேண்டுமானாலும் பிறந்து வாழ்ந்து விட முடியும். ஆனால் ஒரு வியாபாரியாக பிறந்து, வளர்ந்து, தன் ஊழியர்களுக்கு எல்லாம் போதுமான சம்பளம் போனஸ் எல்லாம் கொடுத்து விட்டு, தானும் லாபம் கண்டு வாழும் வாழ்க்கை இருக்கிறதே... ரொம்ப கஷ்டம் பாஸ்.
ஒரு வியாபாரிக்கு எப்போது, யாரிடம் இருந்து, என்ன மாதிரியான அழுத்தங்கள், நிர்பந்தங்கள் வரும் எனச் சொல்ல முடியாது. இப்போது அப்படி ஒரு நிர்பந்தம் தான், நம் இந்திய வியாபாரிகளுக்கு வந்து இருக்கிறது.
இன்னும் சில மணி நேரங்களில் ஐயா அப்துல் கலாமின் 2020-ம் ஆண்டு தொடங்கப் போகிறது. அதற்குள் மத்திய நேரடி வரி வாரியம், வியாபாரிகள் கழுத்தில் ஒரு கத்தி வைத்து இருக்கிறது.
புதிய சட்டம்
இந்திய வருமான வரிச் சட்டத்தின் கிழ் 271DB என ஒரு புதிய பிரிவைக் கொண்டு வந்து இருக்கிறார்களாம். இந்த சட்டத்தின் படி, வியாபாரிகள் எலெக்ட்ரானிக் பேமெண்ட் வசதிகளை, தங்கள் வாடிக்கையாளர்களுக்குச் செய்து கொடுக்கவில்லை என்றால், நாள் ஒன்றுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்க வழி வகை செய்து இருக்கிறது.
எலெக்ட்ரானிக் பணப் பரிமாற்றம்
ஆண்டுக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல், விற்பனை டேர்ன் ஓவர் இருக்கும் வியாபாரிகள், கட்டாயம் எலெக்ட்ரானிக் பணப் பரிமாற்ற வசதிகளை வழங்க வேண்டும். இதற்கு அதிகபட்ச காலக் கெடுவே வரும் 31 ஜனவரி 2020 தானாம். இதை மீறினால், நாள் ஒன்றுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுமாம்.
விளக்கம்
வரும் 31 ஜனவரி 2020-க்குள், மேலே சொன்ன வியாபாரிகள் (ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் டேர்ன் ஓவர் பார்ப்பவர்கள்) எலெக்ட்ரானிக் பணப் பரிமாற்ற வசதிகளை, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, வழங்கத் தொடங்க வேண்டும். உதாரணத்துக்கு ஒரு வியாபாரி, வரும் 14 பிப்ரவரி 2020-வரை எலெக்ட்ரானிக் பணப் பரிமாற்ற வசதிகளைக் கொடுக்கவில்லை என்பதைக் கண்டு பிடித்தால், ரூ.5,000 * 14 (நாள்) = 70,000 ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டி இருக்கும்.
நோ கட்டணம்
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், எலெக்ட்ரானிக் பணப் பரிமாற்ற சேவைகளை வழங்குவதால், கூடுதல் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது எனவும் சொல்லி இருக்கிறார்கள். இது நாள் வரை எலெக்ட்ரானிக் பணப் பரிமாற்றங்கள் வழியாக, வியாபாரிகள் பணத்தை வசூலிப்பதற்கு வங்கிகள், வியாபாரிகளிடம் கட்டணத்தை வசூலித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் செலுத்துவார்கள்
இனி எலெக்ட்ரானிக்ஸ் பணப் பரிமாற்றத்துக்கு, வங்கிகள் வியாபாரிகளிடம் (MDR - Merchant Discount Rate) கட்டணங்களை வசூலிக்கக் கூடாது. அதே போல வியாபாரிகளும் வாடிக்கையாளர்களிடம் இந்த கட்டணத்தை வசூலிக்கக் கூடாது எனச் சொன்ன பின், யார் தான் இந்த செலவை ஏற்றுக் கொள்வார்கள் என கேள்வி எழுந்தது. அதற்கு வங்கிகளும், ஆர்பிஐ-யும் இந்த செலவுத் தொகையை ஏற்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
எவை எல்லாம்
Debit card powered by RuPay,
Unified Payments Interface (UPI),
BHIM-UPI
Unified Payments Interface Quick Response Code (UPI QR Code),
BHIM-UPI QR Code
போன்றவைகளை, நேரடி வரி வாரியம் பரிந்துரைத்து இருக்கின்றன. ஆனால் இதைத் தவிர மற்ற எலெக்ட்ரானிக்ஸ் பணப் பரிமாற்றங்களையும் பயன்படுத்தலாமாம்.
ஏமாற்றினாலும் அபராதம்
பெயருக்கு ஸ்வைப் இயந்திரங்களை வாங்கி வைத்துக் கொண்டு, ரிப்பேர் ஆகிவிட்டது என பொய் சொல்வது அல்லது உண்மையாகவே ரிப்பேர் ஆன இயந்திரங்களை வைத்து அதிகாரிகளை ஏமாற்றுவதை எல்லாம், கண்டு பிடித்தால் கூட பிப்ரவரி 01, 2020 முதல் கணக்கிட்டு அபராதம் விதிக்கப்படுமாம். எனவே வியாபாரிகளே உஷாராக இருங்கள். இனிய 2020 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.