ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது வாழ்க்கையின் ஒரு கனவாக இருந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த கனவை சிலர் கஷ்டப்பட்டு பணத்தை சேமித்து வாங்கி விடுகின்றனர். ஒரு சிலர் வங்கியில் கடன் வாங்கி சொந்த வீடு வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் சொந்த வீடு வாங்குவதற்கு தற்போது சரியான காலம் என்று தகவல் வெளிவந்துள்ளதால் சொந்த வீடு கனவில் இருப்பவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த வீடு கனவு
பொதுவாக சொந்த வீடு வாங்குபவர்களுக்கு மழைக்காலம் சிறந்த காலம் என்று கூறப்படுவதுண்டு. மழைக் காலத்தில்தான் ஒரு வீட்டின் உண்மையான நிலைமை தெரிய வரும். மழைக்காலத்தில் தான் கட்டிடங்களில் ஏற்படும் கசிவுகள், தண்ணீர் பிரச்சனைகள் மற்றும் கட்டிடத்தின் அடியில் இருக்கும் உள் கட்டமைப்பு ஆகியவை வெளிப்படையாக தெரிய வரும். எனவே சொந்த வீடு வாங்கும் போது இது போன்ற அம்சங்களை கவனித்து வாங்க வேண்டும் என்றால் கோடை காலத்தை விட மழை காலத்தில் தான் ஆய்வு செய்ய வசதியாக இருக்கும்.
மழைக்காலம்
ஒரு சொத்தின் முழுமையான நிலையை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால் மழைக்காலத்தில் அந்த வீடு எந்த அளவுக்கு நன்றாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்த வீடும் நன்றாக இருக்கும் என்பது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வீட்டை சுற்றி தண்ணீர் அதிகம் தேங்குகிறதா, அதிக மழை அல்லது வெள்ளம் வந்தால் வீட்டின் நிலைமை என்ன ஆகும் என்பதை ஆய்வு செய்து வீடு வாங்குவதற்கு மழைக் காலம் தான் சரியான காலம்.
பராமரிப்பு
மேலும் வீட்டின் உரிமையாளர்கள் பல்வேறு காரணங்களால் வீட்டை பராமரிப்பு இல்லாமல் வைத்திருக்க வாய்ப்பு உள்ளது. பராமரிப்பு இல்லாத வீட்டை வாங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள், அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என்பதை வீடு வாங்கும் முன் யோசிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் ஆகும்.
வட்டி விகிதம்
மேலும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் தற்போது அதிகரித்து வருவதால் வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்குபவர்கள் ஒரு இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறார்கள். அதுபோல் ஏற்கனவே வீடு வாங்கியவர்களுக்கு தவணை தொகையை அதிகரித்திருப்பதன் காரணமாக ஒருசில்ர தற்போது வீட்டை விற்க வேண்டிய நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வீட்டுக்கடன்
வீடுகள் விலை தற்போது குறையவில்லை என்றாலும் வீட்டை விற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த மே மாதத்தில் 90 புள்ளிகள் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தவணைத்தொகை அதிகமானதால் ஒருசிலர் வீட்டுக் கடனை செலுத்த முடியாமல் வீடுகளை விற்பதாகவும் அவர்களுடைய அவசர தேவையை பயன்படுத்திக்கொண்டு பலர் அந்த வீடுகளை வாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
விலை உயர்வு
மேலும் புதிய வீடுகளின் விலை தற்போது உயர்ந்து வருவதாக பில்டர்கள் கூறுகின்றனர். தொழிலாளர்களின் சம்பளம், மூலப்பொருட்களின் விலை உயர்வு குறிப்பாக செங்கல், சிமெண்ட் மற்றும் இரும்பு விலை உயர்வு ஆகியவை காரணமாக வீடுகள் விலை உயரும் என அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ரியல் எஸ்டேட்
வீடுகளின் விற்பனை மந்தமாக இருந்தாலும் வீடுகளை தள்ளுபடி விலைக்கு விற்க முடியாத நிலையில் இருப்பதாக ரியல் எஸ்டேட் அதிபர்கள் உள்ளனர். வட்டி விகிதங்கள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் தவணை முறையில் வீடு வாங்குவதிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
தவணைக்காலம்
10 முதல் 20 ஆண்டுகள் தவணை காலத்தில் வீடு வாங்குபவர்கள் இந்த 20 ஆண்டுகளில் எவ்வளவு சதவீதம் வட்டி விகிதம் உயர வாய்ப்பிருக்கிறது என்பதை கணித்து அதற்கேற்றவாறு தொகையை தங்களால் இருபது வருடங்களுக்கு கட்ட முடியுமா என்பதை ஆய்வு செய்து வீடு வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக உங்களது நிகர வருவாயில் 40 முதல் 50 சதவீதத்துக்கு மேல் வீட்டின் தவணைத்தொகை இருக்க கூடாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.