டெல்லி: ரூபே கார்டுகள், யுபிஐ பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க வங்கிகளுக்கு 2600 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், ரூபே டெபிட் கார்டு மற்றும் குறைந்த மதிப்புள்ள BHIM UPI சேவைகளை ஊக்குவிப்பதற்காக இந்த திட்டத்திற்கு 2022 - 23ம் நிதியாண்டில் 2600 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வங்கிகளுக்கு ஊக்கத் தொகை
இதன் மூலம் வங்கிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் மேற்கண்ட சேவைகளை இன்னும் வங்கிகள் மேம்படுத்த முடியும். இது வங்கித் துறையினை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவும்.
இந்த ஊக்குவிப்பு சலுகையானது இதோடு முடிந்து விடவில்லை. வரவிருக்கும் பட்ஜெட் 2023ல் இன்னும் பலவித அறிவிப்புகள் வங்கி துறை சார்ந்து, குறிப்பாக யுபிஐ பரிவர்த்தனை, ரூபே கார்டுகள் சார்ந்து வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்மலா சீதாராமன்
இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பட்ஜெட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் தொடரும் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே அரசு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன் காரணமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனையும் 59% அதிகரித்துள்ளது. இதே யுபிஐ பரிவர்த்தனை 106% அதிகரித்துள்ளது. இந்த விகிதம் மேற்கொண்டு அதிகரிக்கவும் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது. இது மேற்கோண்டு இந்தியாவினை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.
முதல் குளோபல் பின்டெக் நாடு
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி இந்தூரில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், இந்தியா விரைவில் முதல் குளோபல் பின்டெக் நாடாக உருவெடுக்கும் என கூறினார். தற்போது அதனை மெய்பிக்கும் விதமாகவே இந்த அறிவிப்பும் வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக பற்பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பானது டிஜிட்டல் பரிவர்த்தனையை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் எனலாம்.
சர்வதேச அளவில் பயன்பாடு
விரைவில் என் ஆர் ஐ-களும் தங்களது சர்வதேச மொபைல் நம்பரை பயன்படுத்தி யுபிஐ பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும் என NPCI சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 30ம் தேதிக்குள் இதற்கான நடவடிக்கைக்கு தயாராக வைத்துக் கொள்ளுமாறு யுபிஐ வாடிக்கையாளர்களை NPCI கேட்டுக் கொண்டுள்ளது. இந்த சேவையானது அந்தந்த நாடுகளின் மொபைல் நம்பரை வைத்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
10 நாடுகளில் முதல் கட்ட சேவை
முதல்கட்டமாக இந்த சேவையானது சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் உள்ளிட்ட 10 நாடுகளில் வாழும் இந்தியர்கள், ரூபாயில் பரிவர்த்தனை செய்து கொள்ள என் ஆர் இ அல்லது என் ஆர் ஓ கணக்கினை தொடங்க வேண்டும். இதனுடன் மொபைல் எண்ணையும் இணைக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.