இந்திய அரசு தொடுத்த வரி நிலுவை வழக்கில் தனியார் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி-க்குத் தீர்ப்பு வந்த நிலையில், நடுவர் தீர்ப்பாயம் நஷ்ட ஈடாக 1.2 பில்லியன் டாலர் மற்றும் 6 வருட வழக்கு காலத்திற்கான வட்டி தொகையையும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகக் கெய்ர்ன் எனர்ஜி வெளிநாடுகளில் இருக்கும் இந்திய அரசுக்குச் சொந்தமாகச் சொத்துக்களை முடக்க அமெரிக்கா உட்படப் பல நாடுகளில் மேல்முறையீடு செய்து நஷ்டஈடு தொகையை விரைவாக முடிக்க வேண்டும் என இந்திய அரசைப் பயமுறுத்தி வருகிறது.
கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திற்குச் சுமார் 1.72 பில்லியன் டாலர் அளவிலான தொகையை இந்திய அரசு அளிக்க வேண்டும், இந்தத் தொகையைக் கைப்பற்றுவதற்காக உலகம் முழுவதும் இருக்கும் இந்திய அரசுக்குச் சொந்தமான சொத்துக்களைக் கணக்கிட்டும் கண்டறிந்தும் வருகிறது.
இதன் படி கெய்ர்ன் எனர்ஜி இதுவரை சுமார் 70 பில்லியன் டாலர் அளவிலான சொத்துக்களைக் கண்டறிந்துள்ளது.
இந்நிலையில் கெய்ர்ன் எனர்ஜி தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் தனது கிடைக்கவேண்டிய 1.2 பில்லியன் டாலர் மற்றும் வட்டி தொகைக்காக இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளது. கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்திய அரசுக்கு பெரும் சுமையாக மாறி வருகிறது.
ஏர் இந்தியா விமானங்கள் மட்டும் அல்லாமல், ஷிப்பிங் கார்பரேஷன் ஆப் இந்தியா, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் ஆயில் மற்றும் கேஸ் கார்கோ வாகனங்கள் எனப் பல சொத்துக்களைக் கண்டறிந்துள்ளது கெய்ர்ன் எனர்ஜி.