இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் சொந்தமான இணையதளங்கள் இருக்கின்றன என்பதும் அதன் மூலம் பண பரிமாற்றங்களை வாடிக்கையாளர்கள் செய்துகொள்ளும் வசதிகள் உள்ளன என்பதும் தெரிந்ததே.
அதேபோல் மொபைல் செயலி மூலம் பண பரிமாற்றம் செய்துகொள்ள அனைத்து வங்கிகளும் செயலிகளும் வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கனரா வங்கி தற்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி குறித்து தற்போது பார்ப்போம்.
கனரா வங்கி
கனரா வங்கியில் உள்ள அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் செய்து கொள்ளலாம் என்ற வகையில் Canara ai1 என்ற புதிய மொபைல் செயலியை கனரா வங்கி நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Canara ai1 செயலி
பொதுத்துறை வங்கிகளில் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகளை அவ்வப்போது செய்து வருகிறது. அந்த வகையில் வங்கி வாடிக்கையாளர்கள் பண பரிமாற்றம் செய்வதற்கு வசதியாக Canara ai1 eன்ற புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை மூலம் வீட்டிலிருந்து கொண்டோ அல்லது பயணம் செய்யும்போதோ தங்களது வங்கிக் கணக்கில் இருந்து பணம் செலுத்துதல், காசோலைப் புத்தகங்கள் கோரிக்கை வைப்பது உள்பட பல்வேறு வசதிகளை பெற்றுக் கொள்ளலாம்.
மொபைல் பேங்கிங் சூப்பர் செயலி
கனரா வங்கியின் மொபைல் பேங்கிங் சூப்பர் செயலியான இதில் 250க்கும் மேற்பட்ட அம்சங்கள் இருப்பதாகவும் இவை வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்றும் கனரா வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பணப்பரிமாற்றம்
இந்த செயலி குறித்து கனரா வங்கியின் எம்டி மற்றும் சி.இ.ஓ பிரபாகர் அவர்கள் கூறிய இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு வாடிக்கையாளர்கள் அனைவரும் அனைத்து நேரங்களிலும் அனைத்து இடங்களிலும் இருந்து கொண்டு மின்னணு பரிவர்த்தனைகள் மூலம் இந்த செயலி மூலம் பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
விரல் நுனியில் வங்கிச்சேவை
தங்களது விரல்நுனியில் வங்கி சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற்று பயனடைய வேண்டும் என்பதற்காகவே இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவும் இதில் உள்ள அம்சங்கள் சிறப்பானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லைட்டிங் வசதி
மேலும் இந்த செயலியில் நம்முடைய தேவைக்கு ஏற்ப லைட்டிங் வசதிகள் செய்து இருப்பதால் இரவு நேரத்தில் இதை பயன்படுத்தினாலும் கண் எரிச்சல் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த வசதி காரணமாக மொபைல் போனில் பேட்டரியை சேமிக்க முடியும்.
விமான, ரயில் டிக்கெட்டுக்கள்
Canara ai1 செயலி மூலம் விமான டிக்கெட், பேருந்து டிக்கெட், ரயில் டிக்கெட், ஷாப்பிங் செய்தல் வங்கி கணக்கில் பணம் செலுத்துதல், இஎம்ஐ செலுத்துதல், மியூட்சுவல் ஃபண்ட் இன்சூரன்ஸ் ஆகியவற்றின் பணம் செலுத்துதல் என பல வசதிகள் ஊள்ளன. அதேபோல் பிஎஃப் கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு, கிஸான் விகாஸ் பத்திரம், சுகன்யா சம்ரிதி கணக்குகள் போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்களும் இந்த செயலி மூலம் வாடிக்கையாளர்களுக்கு கனரா வங்கி வழங்குகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 மில்லியன் டவுன்லோடு
இந்த செயலை சமீபத்தில்தான் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது 3 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இந்த செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்தி வருவதாகவும் கனரா வங்கி தெரிவித்துள்ளது. மேலும் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு தொலைந்து விட்டால் அதை பிளாக் செய்வது, அன்லாக் செய்வது, இன்டர்நெட் பேங்கிங், யுபிஐ, டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தும் வசதியும் இந்த செயலியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.