இந்தியாவில் நடப்பு ஆண்டில் ஏற்கனவே பல முறை வாகன உற்பத்தியாளர்கள், தங்களது வாகனங்களின் விலையை சில முறை அதிகரித்துள்ளனர். இந்த நிலையில் புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில் தற்போது பற்பல வாகன நிறுவனங்களும் தங்களது வாகன விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளன.
ஆக 2023ல் பல்வேறு வாகனங்களின் விலையும் நடப்பு ஆண்டினை காட்டிலும் விலை உயர்ந்ததாக மாறியிருக்கலாம்.
ஆக வாகனம் வாங்க திட்டமிடுபவர்களுக்கு இது சரியான தருணம் எனலாம். இது ஜனவரி முதல் வாகனங்களின் மாடல்களை பொறுத்து விலையானது அதிகரிக்கலாம்.
மூலதன செலவு அதிகரிப்பு
தொடர்ந்து சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், மூலதன பொருட்கள் விலையானது கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வாகன உற்பத்தி விலையும் அதிகரித்துள்ளது. இது மேற்கொண்டு விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
புதிய விதிகள்
மேலும் 2023 ஏப்ரல் முதல் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக பயணிகள் வாகனங்கள், ஆட்டோமேட்டிக் சோதனை நிலையங்கள் வாயிலாக பரிசோதிக்கப்பட்டு தகுதிச் சான்றிதழ் (Fitness Certificate) பெறப்பட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அம்சமானது படிப்படியாக அனைத்து வாகனங்களுக்கும் கொண்டு வரப்படலாம் என தெரிகின்றது.
விலையை அதிகரிக்கும் நிறுவனங்கள்
இதற்கிடையில் தான் மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், மெடிசிஸ் பென்ஸ் , ஆடி, ரெனால்ட், கியா இந்தியா, எம்ஜி மோட்டார்ஸ், என பல நிறுவனங்களும் விலை அதிகரிப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் துணைத் தலைவர் குணால் பெஹ்ல் பிடிஐ-க்கு அளித்த பேட்டியில், மூலப் பொருட்களின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக ஜனவரி 23 முதல் விலை திருத்தம் செய்யப்பட உள்ளது. இந்த திருத்தமானது 30,000 ரூபாய் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கார்களின் மாடலுக்கு ஏற்ப இருக்கும் என கூறியுள்ளார்.
ஹோண்டா & ஹூண்டாய்
ஜப்பானின் பிரபலமான கார் தயாரிப்பாளரான ஹோண்டா தனது வாகன விலையை, வாகனங்களின் மாடலுக்கு ஏற்ப 30,000 ரூபாய் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளது.
இதே ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது வாகனங்களின் விலையானது அதன் மாடல்களை பொறுத்து விலை அதிகரிப்பு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜனவரி 2023ல் இருந்து விலை அதிகரிப்பு இருக்கலாம் என தெரிகிறது.
ஜீப் இந்தியா & மாருதி சுசூகி
ஜீப் எஸ்யுவி ரக கார்கள் விலையானது 2 - 4% வரையில் அதிகரிக்கலாம் என தெரிகிறது.
மாருதி சுசூகி நிறுவனம் அதன் செலவினங்கள் அதிகரிப்பின் மத்தியில், நடப்பு ஆண்டிலேயே ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் வாகன விலைகள் அதிகரித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது 2023ம் தொடரலாமென எதிர்பார்க்கப்படுகிறது. செலவினை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக, பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் & கியா இந்தியா
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ், தன் ICE மற்றும் மின் வாகனங்கள் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
இதே கியா இந்தியா நிறுவனம் ஜனவரி 2023 முதல் அதன் வாகனங்கள் விலையை 50,000 ரூபாய் வரையில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் & எம்ஜி மோட்டார்ஸ், ஆடி கார்
சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதன் வாகன விலையை 5% வரையில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
இதே எம் ஜி மோட்டார் நிறுவனமும் அதன் எஸ் யு வி ரக வாகனங்களுக்கு விலையினை 90,000 ரூபாய் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடி இந்தியா நிறுவனம் அதன் சொகுசு கார்களின் விலையினை 1.7% வரையில் ஜனவரி 2023 முதல் அதிகரிக்கலாம் என தெரிகிறது.