பழைய கார்களை விற்பனை செய்து வரும் கார்ஸ்24 நிறுவனம், அதன் 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
இது வழக்கம்போல் நடைபெறும் ஒரு செயல் தான். வணிகம் எப்போதும் போல வெற்றிகரமாக நடந்து கொண்டுள்ளதாகவும், இது ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் ஒரு அறிவிப்பு தான் என தெரிவித்துள்ளது.
இது ஊழியர்களின் செயல் திறன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளது.
பணி நீக்கம்
மேலும் இந்த நடவடிக்கைக்கு பின்பு எந்த செலவு குறைப்பு நடவடிக்கையும் காரணமாக இல்லை என்றும் கார்ஸ் 24 நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நிறுவனத்தில் தற்போது சுமார் 9000 ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் கிட்டதட்ட 6.6 சதவீதம் பேர் தற்போது வேலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வளர்ச்சிக்கான நடவடிக்கை
இது வலுவான வளர்ச்சியில் கவனம் செலுத்தும் சூழலை ஏற்படுத்துவதற்காக ஒரு நடவடிக்கை எனவும் கூறியுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு உயர்தரமான அனுபவத்தினை வழங்குவது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. வாடிக்கையாளர்கள் தான் எங்களின் முதுகெலும்பாக இருக்கிறார்கள். அவர்கள் தான் எங்கள் வளர்ச்சிக்கு உதவுகின்றனர்.
பணியமர்த்தல்
இந்தியா, மத்திய கிழக்கு, ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவின் பிற உலகளாவிய சந்தைகளில், எங்களது வணிகம் வளர்ந்து வருகின்றது. ஆக திறமையான குழுவினை உருவாக்க, சரியான திறமையான பணியாளர்களை பணியமர்த்துகிறோம் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. முந்தைய ஆண்டில் நாங்கள் 8000 பேரை பணியமர்த்தினோம். ஏப்ரல் மாதத்தில் 127 பேரை பணியமர்த்தினோம் என்றும் தெரிவித்துள்ளது.
நிதி திரட்டல்
இதற்கிடையில் வணிகத்தினை மேம்படுத்த கடந்த ஆண்டில் டிசம்பர் மாதத்தில் நிறுவனம் 400 மில்லியன் டாலர்களை திரட்டியது. இதில் 300 மில்லியன் டாலர் ஜி ஈக்விட்டி மூலமும், 100 மில்லியன் டாலர் கடன் பத்திரம் மூலம் நிதி திரட்டியது குறிப்பிடத்தக்கது.
விரிவாக்கம்
கடந்த ஆண்டிலேயே நல்ல வளர்ச்சியினை கண்ட இந்த பழைய கார் விற்பனை நிறுவனம், இந்தியாவில் மட்டும் அல்ல, உலகளவில் அதன் சேவையை விரிவாக்கம் செய்து வருகின்றது. இந்தியாவில் புதிய ஏழு புதுபித்தல் மையங்களையும் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மொத்தத்தில் கார்ஸ் 24 நிறுவனம் வளர்ச்சிக்கான அடுத்தடுத்த நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.