இந்தியாவில் போட்டித்தன்மைக்கு எதிரான நடைமுறைகளைப் பின்பற்றிய காரணத்தால் உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமான கூகுள் மீது விதிக்கப்பட்ட அபராதங்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தத் தவறியுள்ளது கூகுள்.
இந்த நிலையில் இந்திய போட்டி ஆணையம் (CCI) கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் செலுத்த கோரி நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இதைக் கூகுள் நிறுவனம் பெற்றுள்ளது.
சமீபத்தில் உலகளவில் பல முன்னணி கன்ஸ்யூமர் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் சேவைகள், தயாரிப்புகள் மீது விதிமீறல், மோனோபோலி தன்மை, போட்டித்தன்மைக்கு எதிரான நடைமுறை பின்பற்றியது தொடர்பாக அமெரிக்கா, ஐரோப்பா, இந்திய அரசு அமைப்புகள் கடுமையான எச்சரிக்கையும், விதிமுறைகளையும் விதித்து வருகிறது.
கூகுள் நிறுவனம்
கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்போன்களுக்கான அதன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மோனோபோலியாக இருப்பதையும், அதை வைத்துப் பல விஷயங்களில் விதிமீறல்களையும் செய்வதைக் கண்டிக்கும் வகையில் கண்காணிப்பு அமைப்பான இந்திய போட்டி ஆணையம் (CCI) தீர்ப்புக்கு எதிராகக் கூகுள் கடந்த வாரம் மேல்முறையீடு செய்ததை அடுத்துத் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்திய போட்டி ஆணையம்
இந்திய போட்டி ஆணையம் (CCI) இரண்டு வழக்குகளில் அபராதம் விதிக்கத் தீர்ப்பு அளித்த நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை தலைமை வகிக்கும் கூகுள் இரண்டு வழக்குகளின் மீதும் மேல்முறையீடு செய்தது.
நீதிமன்றம் தீர்ப்பு
இந்தத் தடை விண்ணப்பத்தின் மீது நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரே அபராதம் செலுத்தப்படும் எனத் தெரிகிறது. இந்த நிலையில் அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்புவது இயல்பான நடைமுறை எனவும் பணம் செலுத்த 30 நாட்கள் காலக்கெடு உள்ளது என்றும் தெரிகிறது.
அபராதம்
இந்திய அரசின் கட்டுப்பாட்டு அமைப்பான இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) அக்டோபர் மாதம் ஓரே வாரத்தில் 2வது முறையாகக் கூகுள் சேவைகள் மீது அபராதம் விதித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தான் கடந்த வாரம் சுந்தர் பிச்சை திடீர் பயணமாக இந்தியா வந்து பிரதமர் மோடி உட்படப் பலரைச் சந்தித்தார்.
கூகுள் ப்ளே ஸ்டோர்
கூகுள் நிறுவனத்தின் மொபைல் செயலிகளின் கூடாரமான கூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கைகள் தொடர்பாக அதன் ஆதிக்க நிலையைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி 936.44 கோடி ரூபாய் அபராதம் விதித்தது இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ).
ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டம்
இதற்கு முன்பு அதே வாரத்தில் அக்டோபர் 20 ஆம் தேதி கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அதன் ஆதிக்க நிலையைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக 1,337.76 கோடி ரூபாய் அபராதம் விதித்தது இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ).
கூகுள் மேல்முறையீடு
இவ்விரு வழக்கு மற்றும் தீர்ப்பின் மீது தான் தற்போது கூகுள் மேல்முறையீடு செய்துள்ளது, இந்த மேல்முறையீட்டின் விசாரணை முடிந்த பின்பு தான் கூகுள் அபராதம் செலுத்துமா அல்லாது அபராதத்தில் இருந்து தப்புமான என்பது தெரியும். மேலும் இரு வழக்குகள் மீதான ஆய்வு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.