இன்று 22 ஜூலை 2020 புதன்கிழமை ஃபிக்கி கூட்டத்தில் இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ண மூர்த்தி சுப்ரமணியன் பேசினார். "கடந்த சில ஆண்டுகளில், வங்கி உயர் அதிகாரிகள் எடுத்த தவறான முடிவுகளால் இன்று, இந்திய பொருளாதாரம் ஒரு சக்ர வியூகத்தில் சிக்கி இருக்கிறது" எனப் பேசி இருக்கிறார்.
மேலும் பேசியவர் "இந்தியாவின் பொருளாதார மந்த நிலைக்கு பெரிய காரணம் வங்கித் துறை தான். வங்கிகளில் இருக்கும் செயல்படாத கடன்கள் (NPA) பிரச்சனை, வங்கிகள் துணிந்து கடன் கொடுக்காமல் இருந்தது, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடன் கொடுக்காமல் இருந்தது போன்றவைகளால் முதலீடுகள் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முதலீடுகள் போதிய அளவுக்கு வரவில்லை என்பதால், பொருளாதார வளர்ச்சியிலும் எதிரொலித்து இருக்கிறது. ஒட்டு மொத்த பொருளாதாரமும் வளர்ச்சி பெரிதாக இல்லை என்பதால் நுகர்வு சரிந்து இருக்கிறது. நுகர்வு சரிவதால், முதலீடுகளும் சரிந்து இருக்கிறது" எனச் சொல்லி இருக்கிறார் கிருஷ்ண மூர்த்தி சுப்ரமணியன்
"நாம் இந்திய வங்கிகளை பெரிதாக வளர்த்து எடுக்க வேண்டும். இன்று உலகின் டாப் 100 வங்கிகளைப் பட்டியல் போட்டால் அதில் ஒரே ஒரு இந்திய வங்கி தான் இடம் பிடித்து இருக்கிறது. ஆனால் 18 சீன வங்கிகள் டாப் 100-ல் இடம் பிடித்து இருக்கின்றன. 12 அமெரிக்க வங்கிகள் இந்த பட்டியலில் இடம் பிடித்து இருக்கின்றன. அவ்வளவு ஏன் சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், சிங்கப்பூர் போன்ற குட்டி நாடுகளின் வங்கிகள் கூட நல்ல இடத்தில் இருக்கின்றன" எனச் சொல்லி இருக்கிறார்.
ஒரு நாட்டின் வங்கித் துறையில், பெரிய வங்கிகள் இருந்தால் தான், எந்த ஒரு பெரிய பொருளாதாரத்தையும் கட்டமைக்க முடியும். இந்த விஷயத்தில் இந்தியா பின் தங்கி இருக்கிறது. அதோடு இந்த விஷயத்தில் நாம் நிறைய வேலை செய்ய வேண்டி இருக்கிறது" எனச் சொல்லி இருக்கிறார் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ண மூர்த்தி சுப்ரமணியன்.
இந்திய வங்கிகள் பெரிய வங்கிகளாக உருவாக முடியாமல் தடுக்கும் விஷயம் என்ன? "வங்கித் துறை, நிறைய வியாபாரம் செய்வதிலும் (Scale) அல்லது தரமாக வியாபாரம் (Quality) செய்வதில் அடி வாங்குகிறது. நிறைய வியாபாரம் செய்ய வேண்டும் எனும் போது சரியாக கடன் கொடுப்பதில்லை. நிறைய வியாபாரம் செய்ய வேண்டும், அதே நேரத்தில் தரமாகவும் வியாபாரம் செய்ய வேண்டும்" எனச் சொல்லி இருக்கிறார்.