டெல்லி: வெங்காயம்.. என்று பெரியாரே வந்தாலும் அப்படிக் கூப்பிட முடியாது.. என்று கமல்ஹாசன் சொன்னது வாஸ்தவம்தான். அந்த அளவுக்கு வெங்காய விலை தாறுமாறாக உயர்ந்து பெண்களையும், சமையல் செய்யும் ஆண்களையும் கண்ணீர் விட வைத்துள்ளது.
பெரும்பாலான இடங்களில் கிலோ பெரிய வெங்காயம் ரூ. 100 ஐத் தாண்டி போய்க் கொண்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். இப்படித்தான் முன்பு சின்ன வெங்காயம் அல்லது சாம்பார் வெங்காயத்தின் விலையும் ரொம்ப மோசமாக இருந்து பின்னர் மீண்டது.
இந்த நிலையில் தற்போது பெரிய வெங்காயத்தின் விலை தாறுமாறாகியுள்ளது. வெங்காயத்தை பதுக்கி வைத்து விற்பவர்களால்தான் இந்த நிலை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து விலையைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுக்க ஆரம்பித்துள்ளது.
இவ்வளவுதான் ஸ்டாக் வைக்கலாம்
வெங்காய வியாபாரிகள் எந்த அளவுக்கு வெங்காயத்தை ஸ்டாக் வைத்துக் கொள்ளலாம் என்பது தொடர்பாக புதிய உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. சில்லறை வியாபாரிகள் மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு எந்த அளவுக்கு ஸ்டாக் வைத்துக் கொள்ள அனுமதி உண்டு என்ற அளவையும் திருத்தியமைத்துள்ளது மத்திய அரசு. இதுதொடர்பான விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.
2 டன் முதல் 25 டன் வரை
இந்த திருத்தியமைக்கப்பட்ட அளவானது அக்டோபர் 31ம் தேதி வரை அமலில் இருக்கும். நேற்று முதல் இது அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சில்லறை வியாபாரியாக இருந்தால் அதிபகபட்சம் 2 டன் வரை அதாவது 20 குவின்டால் அளவுக்கு வெங்காயத்தை ஸ்டாக் வைத்துக் கொள்ளலாம். அதுவே மொத்த வியாபாரியாக இருந்தால் 25 டன் வரை அதாவது 250 குவின்டால் வெங்காயம் வரை ஸ்டாக் வைக்கலாம்.
மத்திய அரசு நடவடிக்கை
இதுதொடர்பாக நுகர்பொருள்துறை செயலாளர் லீனா நந்தன் கூறுகையில், அத்தியாவசிய பொருள்கள் திருத்த சட்டத்தை அரசு பிரயோகித்து அதன் மூலம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த சட்டத்தின் மூலமாக அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும்சமயத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க முடியும். வெங்காய விளைச்சல் குறைவாக இருப்பதால்தான் விலையும் உயர்ந்துள்ளது.
வெங்காய விளைச்சல் குறைவு
நாம் இந்த ஆண்டு 43 லட்சம் டன் வெங்காயம் விளைச்சலாகும் என எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்ததை விட குறைந்த அளவிலேயே அதாவது 36 லட்சம் டன் வெங்காயம்தான் உற்பத்தியாகியுள்ளது. இதையடுத்தே வெங்காய விலை அதிகரிப்பைத் தடுக்க, ஸ்டாக் வைத்துக் கொள்வதற்கான அளவைக் குறைத்துள்ளோம் என்றார்.
விலை கிடுகிடு
தற்போது அரசின் புள்ளிவிவரப்படி சென்னையில் சில்லறை விற்பனைக் கடைகளில் வெங்காயம் கிலோ ரூ. 83க்கு விற்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் பெரும்பாலான இடங்களில் இது ரூ. 100 ஆக உள்ளது. மும்பையில் ரூ. 86, கொல்கத்தாவில் 70, டெல்லியில் 55 என விலைவாசி உள்ளது. பல மாநிலங்களில் அரசே விலை குறைத்து மக்களுக்கு விற்பனை செய்கிறது. ஆனால் போதுமான அளவில் அது இல்லாததால் மக்களுக்கு முழு பலன் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.
போண்டா கிடையாது போடா!
வெங்காய விலை அதிகரிப்பு காரணமாக வெங்காயத்தை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தங்களை பல ஹோட்டல்களில் நிறுத்தி விட்டனர். குறிப்பாக வெங்காயச் சட்னி, வெங்காய போண்டா உள்ளிட்டவை பல இடங்களில் விற்பனை இல்லை அல்லது விலை அதிகரித்துள்ளது. வீடுகளிலும் கூட பெரிய வெங்காயம் வாங்குவதை குறைக்க ஆரம்பித்து விட்டனர் மக்கள்.