காஷ்மீர் எப்போது பிரச்சனைகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்டு போராடும் ஒரு மாநிலமாகவே இருக்கிறது, இப்படியிருக்கையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஜம்மு மற்றும் காஷ்மீர்-க்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கிவிட்டு யூனியன் பிரதேசமாக அறிவித்தது.
இந்நிலையில் காஷ்மீரில் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்ட மத்திய அரசு தற்போது 6000 ஏக்கர் நிலத்தை வர்த்தகச் செய்யத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
வர்த்தக மாநாடு
காஷ்மீர் மாநிலத்தைப் பிற இந்திய மாநிலங்களைப் போலவே மாற்ற வேண்டும் என்ற நோக்கில் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கி வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வர்த்தக மாநாடு நடத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
6000 ஏக்கர் நிலம்
இந்த வர்த்தக மாநாட்டில் இந்தியாவில் இருக்கும் அனைத்து தொழிலதிபர்களுக்கும் வர்த்தகம் செய்ய அழைப்பு விடுக்கும் வகையில், காஷ்மீரில் புதிய வர்த்தகம் துவங்க 6000 ஏக்கர் நிலம் தயாராக இருப்பதாக அறிவிக்க உள்ளது. இதன் மூலம் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தைக் காஷ்மீரில் விரிவாக்கம் செய்யும் எனத் தெரிகிறது.
வரி தள்ளுபடி
காஷ்மீரில் புதிய வர்த்தகம் துவங்குவோருக்கு நிலம் மட்டும் அல்லாமல் வரிச் சலுகை, இன்சூரன்ஸ் ஆகியவற்றைக் கொடுக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளதாகத் தொழில்துறை மற்றும் வர்த்தகப் பிரிவின் பிராந்திய செயலாளர் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர்
இந்தியாவிலேயே மிகவும் குறைவான தொழிற்துறை இருக்கும் பகுதி என்றால் அது ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகள் தான், 2016-17 நிதியாண்டு கணக்கீடு படி இப்பகுதி மக்களின் தனிநபர் வருமானம் 62,145 ரூபாயாக உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த சராசரி அளவான 82,229 ரூபாய் அளவை விடவும் இது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைவாய்ப்பு
மத்திய அரசு திட்டமிட்டபடி அனைத்தும் சிறப்பாக நடந்தால் காஷ்மீரில் அடுத்த சில மாதங்களில் குறைந்த பட்சம் 10000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிகிறது.