இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது, குறிப்பாகச் சரக்குப் போக்குவரத்தில் தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
பீட்சா டெலிவரி முதல் அமேசான் டெலிவரி வரையில் லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் இருக்கும் அனைத்து முன்னணி நிறுவனங்களும் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களை அதிகளவில் பயன்படுத்த முடிவு செய்துள்ளதால், இத்துறையில் அதிகப்படியான வர்த்தக வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
இந்தப் பெரும் வர்த்தக வாய்ப்பை உணர்ந்த தமிழ்நாட்டின் பழம்பெரும் வர்த்தகக் குழுமமாக விளங்கும் முருகப்பா குரூப் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பில் மாபெரும் திட்டத்தை அறிவித்துள்ளது.
முருகப்பா குரூப்
இந்தியா முழுவதும் விற்பனை செய்யும் திட்டத்துடன் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் முருகப்பா குரூப் 3 சக்கர வாகனங்களைத் தனது Montra பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளது.
200 கோடி ரூபாய்
செப்டம்பர் மாதம் புதிய வாகனத்தை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ள முருகப்பா குரூப் 3 சக்கர எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையை அமைக்கச் சுமார் 200 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளது.
TI கிளீன் மொபிலிட்டி
முருகப்பா குரூப் கீழ் இருக்கும் டியூப் இண்வெஸ்ட்மென்ட்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் தான் BSA மற்றும் hercules போன்ற பிராண்டுகளில் சைக்கிள்களைத் தயாரிக்கிறது. இந்நிலையில் டியூப் இண்வெஸ்ட்மென்ட்ஸ் ஆப் இந்தியா (TII) நிறுவனத்தின் கீழ் கிளை நிறுவனமாக TI கிளீன் மொபிலிட்டி (TCM) உருவாக்கியுள்ளது, இப்புதிய நிறுவனத்தின் கீழ் தான் 3 சக்கர எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட உள்ளது.
எலக்ட்ரிக் டிராக்டர்கள்
TI கிளீன் மொபிலிட்டி இந்த வருடம் எலக்ட்ரிக் டிராக்டர்களை Cellestial E-Mobility நிறுவனத்தின் வாயிலாகத் தயாரித்துச் சந்தைப்படுத்த உள்ளது. Cellestial E-Mobility நிறுவனத்தில் முருகப்பா குரூப் சுமார் 70 சதவீத பங்குகளை 161 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
3 சக்கர எலக்ட்ரிக் வாகனம்
இதேபோல் TI கிளீன் மொபிலிட்டி Montra பிராண்டில் அறிமுகம் செய்யும் 3 சக்கர எலக்ட்ரிக் வாகனங்கள் சரக்கு போக்குவரத்திற்கும், மக்கள் பயணிக்கவும் பயன்படுத்த முடியும் என டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிர்வாகத் தலைவர் அருண் முருகப்பா தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் அறிமுகம்
இந்த 3 சக்கர எலக்ட்ரிக் வாகனங்கள் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டு 200 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளார் அருண் முருகப்பா. 2025ஆம் ஆண்டுக்குள் 3 சக்கர எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை 1.7 பில்லியன் டாலர் வரையில் உயரும் எனவும் கணித்துள்ளதாக அருண் முருகப்பா கூறியுள்ளார்.
சென்னை
முருகப்பா குரூப் இப்புதிய 3 சக்கர எலக்ட்ரிக் வாகனங்களைச் சென்னை அம்பத்தூர் பகுதியில் இருக்கும் தொழிற்சாலையிலும், எலக்ட்ரிக் டிராக்டர்களைச் சென்னைக்கு வெளியிலும் உற்பத்தி செய்யத் துவங்கியுள்ளது. வருடம் 75000, 3 சக்கர எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்ய 40 இடங்களில் டிஸ்ட்ரிபியூஷன் அமைப்பை முருகப்பா குரூப் உருவாக்கியுள்ளது.