சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று உலக நாடுகளைப் பயமுறுத்தி வரும் நிலையில் சீன அரசை பயமுறுத்தும் வகையில் முக்கியமான பிரச்சனை வெடித்துள்ளது.
கொரோனா தொற்றுக்காகச் சீன அரசு தொடர்ந்து லாக்டவுன் அறிவித்து வந்த நிலையில் பெரும் மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து சீன அரசு லாக்டவுன் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வந்தது.
இந்தத் தளர்வு மூலம் சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து, தினமும் பல மரணங்களை எதிர்கொண்டு வருகிறது. இதற்கிடையில் சீனாவின் முக்கிய நகரத்தில் கொரோனா தொற்றுத் தாண்டவம் ஆடி வருகிறது.
சீனா
சீனாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மூன்றாவது மாகாணமான ஹெனான் பகுதியில் கிட்டத்தட்ட 90 சதவீத மக்கள் இப்போது கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை உயர் அதிகாரி திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று
கொரோனா தொற்று பரவல் சீனாவில் துவங்கினாலும் கடந்த 2 அலையில் பார்த்திடாத வகையில் சீன வேகமான தொற்று பரவலை எதிர்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் ஹெனான் மாகாணத்தில் 90 சதவீத மக்களுக்குக் கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
ஹெனான் மாகாணம்
திங்கட்கிழமை காலையில் மத்திய ஹெனான் மாகாணத்தின் சுகாதார ஆணையத்தின் இயக்குனர் கான் குவான்செங் செய்தியாளர் கூட்டத்தில், ஜனவரி 6, 2023 நிலவரப்படி ஹெனான் மாகாணத்தின் கோவிட் தொற்று விகிதம் 89.0 சதவீதமாக உள்ளது எனக் கூறினார்.
மக்கள்தொகை
99.4 மில்லியன் மக்கள்தொகையுடன் சீனாவின் 3வது பெரிய மாகாணமாக இருக்கும் நிலையில், ஹெனானில் சுமார் 88.5 மில்லியன் மக்கள் இப்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சீன அரசு
தற்போது பாதிக்கப்பட்டு உள்ள 88.5 மில்லியன் மக்களின் நிலை மோசமானால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வாய்ப்புகள் இல்லை என்பதால் சீன அரசு தற்போது அச்சத்தில் மூழ்கியுள்ளது.
அச்சம்
ஏற்கனவே சீனாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப் போதுமான இட வசதிகள் இல்லாமல் இருக்கும் நிலையில் ஹெனான் மாகாணம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதனால் சீனாவில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
ஜீரோ கோவிட் பாலிசி
சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி மூலம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த லாக்டவுன், தனிமைப்படுத்தல்கள் மற்றும் வெகுஜன சோதனைகளை மக்கள் போராட்டத்திற்குப் பின்பு நீக்க கடந்த மாதம் முடிவை எடுத்தது.
சீன பொருளாதாரம்
சீன பொருளாதாரம், உற்பத்தி, வர்த்தகம், ஏற்றுமதி ஆகிய அனைத்தும் இந்த ஜீரோ கோவிட் பாலிசியால் பாதிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் நாடு தழுவிய மக்கள் எதிர்ப்பும், அடிப்படை தேவைகள் கிடைக்காத காரணத்தால் இத்திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்புகளைப் போராட்டம் வாயிலாகத் தெரிவித்தனர்.
லூனார் நியூ இயர்
இதை விட முக்கியமாகச் சீனாவில் இந்த மாதம் லூனார் நியூ இயர் கொண்டாட உள்ளது, இது அந்நாட்டு மக்களுக்கு வருடத்தின் முக்கியப் பண்டிகையாக இருக்கும் நிலையில் பெரு நகரங்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊருக்குச் செல்வார்கள்.
விடுமுறை
இதனால் விடுமுறைக்குப் பின்பு சீனாவின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தொற்று உச்சத்தைத் தொடும் எனக் கணிக்கப்படுகிறது. இந்தப் பண்டிகைக்காகச் சீனாவில் சனிக்கிழமை மட்டும் சுமார் 34.7 மில்லியன் மக்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குப் பயணம் செய்துள்ளனர்.