உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக விளங்கும் சீனா பல ஆண்டுகள் முயற்சிக்குப் பின்பு டிஜிட்டல் கரன்சியை மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. உலக நாடுகளை விடவும் சீனா டிஜிட்டல் நிதியியல் சேவையில் முன்னோடியாக உள்ளது.
சொல்லப்போனால் தற்போது சீனாவில் இருக்கும் அலிபே, டென்சென்ட்பே சேவைகளை விடவும் சீனா அரசின் இந்த டிஜிட்டல் கரன்சி மற்றும் பேமென்ட் சேவை சிறப்பாக உள்ளதாகப் பலராலும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான ஜேடி.காம் நிர்வாகம் சில முக்கியமான ஊழியர்களுக்குச் சம்பளத்தையே டிஜிட்டல் கரன்சி வாயிலாக அளிக்க முடிவு செய்துள்ளது.
டிஜிட்டல் கரன்சி திட்டம்
சீனாவின் மிகப்பெரிய வங்கியாகவும், பொதுத்துறை வங்கியாகவும் இருக்கும் பீப்பள் பேங்க் ஆப் சீனா 2014ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் கரன்சி மற்றும் எலக்ட்ரானிக் பேமெண்ட் திட்டத்தை உருவாக்கி வருகிறது. இத்திட்டம் தனியார் பேமெண்ட் நிறுவனங்களின் ஆதிக்கம் குறைப்பது மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் அனைவரும் பயன்படுத்தும் ஒரு டிஜிட்டல் தளமாக இருக்கிறது.
சீனா அரசின் திட்டம்
சீனா அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ள டிஜிட்டல் யுவான் அல்லது e-CNY மூலம் தற்போது சீனாவில் பயன்பாட்டில் இருக்கும் நாணயம், மற்றும் காகித பணத்தைப் புழக்கத்தில் இருந்து நீக்கி டிஜிட்டல் கரன்சியை முதன்மை பரிமாற்ற நாணயமாக மாற்றும் முயற்சியாக உள்ளது. மேலும் இதைச் சீனாவில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பீப்பள் பேங்க் ஆப் சீனா அறிமுகம்
பீப்பள் பேங்க் ஆப் சீனா அதிகாரப்பூர்வமாக டிஜிட்டல் யுவான் அல்லது e-CNY அறிமுகம் செய்தாலும், நாடு முழுவதும் இதைப் பயன்படுத்த இன்னும் அனுமதி வழங்கவில்லை, இதற்கு முன்பு இவ்வங்கி சீனாவின் பெரு நகரங்களில் சோதனை ஓட்டம் செய்து வருகிறது.
சீன அரசு ஆய்வு
இதன் மூலம் இந்த நாணயம் மக்களால் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதை அரசு ஆய்வு செய்ய உள்ளது. இந்தச் சோதனை ஓட்டத்தில் தான் ஜேடி.காம் இணைந்துள்ளது. இதன் வாயிலாகவே Jd.com பீப்பள் பேங்க் ஆப் சீனா அனுமதி உடன் ஜனவரி மாதம் சில ஊழியர்களுக்குச் சம்பளத்தை முழுமையாக டிஜிட்டல் கரன்சி வாயிலாகக் கொடுத்துள்ளது.
கிரிப்டோகரன்சி இல்லை
சீனாவின் இந்த டிஜிட்டல் கரன்சி, கிரிப்டோகரன்சி இல்லை என்று பீப்பள் பேங்க் ஆப் சீனா தெளிவுபடுத்தியுள்ளது. உலகில் பல நாடுகள் இதுபோன்ற டிஜிட்டல் கரன்சி திட்டத்தைக் கையாண்டு வரும் நிலையில் சீனா ஒரு படி முன்னேறிப் பிற நாடுகளுக்கு முன்பாகப் புழக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
டிஜிட்டல் கரன்சி பயன்பாடு விரிவாக்கம்
பீப்பள் பேங்க் ஆப் சீனா-வின் துறை கவர்னப் லீ போ, டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாகவும், 2022ஆம் ஆண்டுச் சீனாவில் நடக்கும் பெய்ஜிங் வின்டர் ஒலிம்பிக் போட்டியின் போது வெளிநாட்டு மக்களுக்கும், விளையாட்டு வீரர்களும் இந்த டிஜிட்டல் கரன்சியைப் பயன்படுத்த ஏதுவான சூழ்நிலையை உருவாக்க இலக்க நிர்ணயம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications