சீனா அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு அந்நாட்டு வர்த்தகச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் அனைத்து நிறுவனங்களையும் கட்டம் கட்டி தூக்கி வரும் நிலையில், எதிர்பாராத விதமாகச் சிக்கிக் கொண்ட துறை தான் ரியல் எஸ்டேட்.
சீனா-வின் மிகவும் தளர்வான ரியல் எஸ்டேட் கொள்கை, குறைந்த வட்டியில் கிடைக்கும் வீட்டுக் கடன் மற்றும் கட்டுமான கடன் மூலம் அந்நாட்டு ரியல் எஸ்டேட் துறை பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்தது.
ஆனால் கடந்த ஆண்டுச் சீனா செய்த சிறு கொள்கை மாற்றத்தால் எவர்கிராண்டே நிறுவனமும் சரி, அதன் உரிமையாளர் மற்றும் நிறுவனர் ஹுய் கா யான்-ம் சரி மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
ரியல் எஸ்டேட் துறை
சீனா தனது ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக ரியல் எஸ்டேட் துறைக்குப் பல தளர்வுகளை அளித்தது. இதில் முக்கியமானது குறைவான வட்டியில் அதிகப்படியான கடன், இந்தப் பெரும் வாய்ப்பை நழுவ விட யாருக்கு தான் மனசு வரும்.
எவர்கிராண்டே கடன்
அப்படித் தான் எவர்கிராண்டே உட்பட அனைத்து ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் அதிகப்படியான கடன்களை வாங்கிக் குவித்தது, இதன் மூலம் எவர்கிராண்டே வாங்கிய கடன் மட்டும் 300 பில்லியன் டாலர்.
சீன அரசு கட்டுப்பாடு
இந்த நிலையில் ரியல் எஸ்டேட் கடன் அளவு எல்லை மீறி சென்றதை சுதாரித்துக்கொண்ட சீன அரசு கடந்த வருடம் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கடன் அளவை சீர்ப்படுத்த வேண்டும் என்பதற்காகப் புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது. இதனால் எவகர்கிராண்டே உட்பட அனைத்து ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் புதிய கடன் வழங்குவது மறைமுகமாகக் குறைக்கப்பட்டது.
எவர்கிராண்டே நிதி நெருக்கடி
சீன அரசின் கட்டுப்பாட்டின் எதிரொலியாக எவர்கிராண்டே தனது வர்த்தகத்தை நடத்த கையிருப்பில் இருக்கும் வீடுகளையும், புதிய வீடுகளையும் விரைவாக விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காகக் குறைவான விலைக்கு விற்பனை செய்யத் துவங்கியது. இது சில வாரங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது, காரணம் எவர்கிராண்டே நிறுவனத்திடம் சுமார் 1300 ரியல் எஸ்டேட் திட்டங்கள் உள்ளது.
சிக்கிக் கொண்டது எவர்கிராண்டே
இதனால் சில மாதங்களிலேயே நிதிநெருக்கடியில் சிக்கிய எவர்கிராண்டே கட்டுமானத்தையும் துவங்க முடியாமலும், வாங்கிய கடனுக்கான வட்டி , தவணைகளையும் செலுத்த முடியாமல் சிக்கிக் கொண்டது, அன்று முதல் எவர்கிராண்டே நிறுவனத்தின் சரிவு துவங்கியது.
எவர்கிராண்டே ஹுய் கா யான்
2021ல் எவர்கிராண்டே ஹுய் கா யான் மட்டும் அல்லாமல் அனைத்து ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் தலைவர்கள் சொத்து மதிப்பு பெரிய அளவில் குறைந்தது. இதன் படி எவர்கிராண்டே ஹுய் கா யான் சொத்து மதிப்பு 2021ல் மட்டும் 17 பில்வியன் டாலரை இழந்தார், ஒரு காலத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருந்த எவர்கிராண்டே ஹுய் கா யான் சொத்து மதிப்புத் தற்போது வெறும் 6.1 பில்லியன் டாலர் மட்டுமே.
ஹுய் கா யான்
ஹுய் கா யான் 1996ல் Hengda Group என்ற பெயரியல் ரியல் எஸ்டேட் நிறுவனம் துவங்கப்பட்டுப் பின்னாளில் எவர்கிராண்டே எனப் பெயர் மாற்றம்பெற்றது. எவர்கிராண்டே சீனாவில் சுமார் 280 நகரங்களில் 1,300 திட்டங்களை வைத்துள்ளது.
8 ரியல் எஸ்டேட் தலைவர்கள்
எவர்கிராண்டே ரியல் எஸ்டேட் நிறுவனம் மட்டும் அல்லாமல் வெல்த் மேனேஜ்மென்ட், எலக்ட்ரிக் கார் தயாரிப்பு, உணவு மற்றும் குளிர்பானம் உற்பத்தி, புட்பால் அணி எனப் பல வர்த்தகத்தில் உள்ளது.
2021ல் சீனாவின் 8 ரியல் எஸ்டேட் தலைவர்கள் சுமார் 46 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்துள்ளனர்.