அமெரிக்கப் பங்குச்சந்தையில் சில நாட்களுக்கு முன்பு பட்டியலிடப்பட்ட சீனாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான DiDi உட்பட 4 நிறுவனத்தின் மீது சீன அரசு தகவல் பாதுகாப்பு மற்றும் தகவல் திருட்டு போன்ற முக்கியமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது.
இதன் மூலம் DiDi நிறுவனத்தின் செயலியை சீனா ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கியது மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் மீது வர்த்தகத் தடை விதித்தது.
DiDi நிறுவனம்
சீன சைபர் செக்யூரிட்டி அமைப்பு செய்த ஆய்வின் அடிப்படையில், DiDi நிறுவனம் விதிமுறைகளை மீறி வாடிக்கையாளர்களின் பர்சனல் தரவுகளை அதிகளவில் திரட்டி வந்துள்ளதாகச் சீன அரசு அறிவித்துள்ளது. DiDi நிறுவனத்திற்குச் சொந்தமான 25 செயலிகளை மொத்தமாகச் சீன ஆப் ஸ்டோரில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளது.
நியூயார்க் பங்குச்சந்தை
சீன பங்குச்சந்தையில் டெக் நிறுவனங்கள் பட்டியலிட கடந்த சில வருடங்களாகவே அதிகளவிலான எதிர்ப்புகள் நிலவி வந்த நிலையிலும், அமெரிக்கப் பங்குச்சந்தையில் கட்டுப்பாடுகள் குறைந்த காரணத்தால் ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான DiDi, டிரக் லாஜிஸ்டிக்ஸ் தளமான Huochebang மற்றும் Yunmanman, ஆன்லைன் வேலைவாய்ப்பு தளமான Boss Zhipin ஆகிய நிறுவனங்கள் நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.
DiDi வர்த்தக விரிவாக்கம்
சீனாவில் உபர் நிறுவனத்துடன் கடுமையாகப் போட்டிப்போட்டு தனது வர்த்தகத்தை மேம்படுத்திய ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான DiDi, சில வருடங்களுக்கு முன் சீனாவின் உபர் வர்த்தகத்தையும் கைப்பற்றியது.
DiDi போக்குவரத்துத் தளம்
தற்போது DiDi நிறுவனம் டாக்ஸி சேவை மட்டும் அல்லாமல் தனியார் கார்கள், பஸ் ஆகியவற்றையும் தனது போக்குவரத்து சேவை தளத்திற்கு இணைந்துள்ளது. இதோடு எலக்ட்ரிக் கார், செயற்கை நுண்ணறிவு மற்றும் இன்னும் பல புதிய தொழில்நுட்பத்தில் பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது.
சீன அரசு
இப்படிப் படிப்படியாக ஆன்லைன் டாக்ஸி வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி DiDi நிறுவனத்தைத் தற்போது மொத்தமாக முடக்கியுள்ளது சீன அரசு. ஜி ஜின்பிங் சமீப காலமாகவே டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கு அதிகளவிலான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
தகவல் திருட்டு மற்றும் பாதுகாப்பு
இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் பட்டியலிடப்பட்டு உள்ள சீன நிறுவனங்களை ஆய்வு செய்யும் பணிகள் துவங்கியுள்ளது, இதோடு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக டேட்டா பாதுகாப்பு, வெளிநாடுகளுக்கு மத்தியிலான தரவு பரிமாற்றம், முக்கியமான தரவுகளை நிர்வாகம் செய்யும் முறை ஆகியவற்றை மேம்படுத்த இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மோனோபோலி ஒழிப்பு
சீன அரசு தற்போது தனியார் நிறுவனங்கள் பல துறையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செய்து வருவதும், இதன் மூலம் அரசு நிறுவனங்களும், அரசும் வலிமை இழந்து வருவதையும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளது. இதனால் மோனோபோலி ஒழிப்புப் பெயரில் தனியார் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.