உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 14 மாடல் போன்களை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்தது.
ஆனால் ஐபோன் 14 வெளியிடப்பட்ட சில நாட்களில் இந்தியாவில் அடுத்த வருடம் தான் தயாரிப்பு பணிகளைத் துவங்கும் எனச் செய்திகள் வெளியான சில நாட்களிலேயே ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து பெரும் பகுதி உற்பத்தியை திடீரென இந்தியாவுக்கு மாற்றியது.
இந்த நிலையில் சீனாவில் ஆப்பிள் உற்பத்தி தொழிற்சாலை இருக்கும் பக்கத்து ஊரில் கொரோனா தொற்றுக் காரணமாக மொத்த ஊருக்கும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர்.
ஐபோன் உற்பத்தி
ஐபோன் உற்பத்தி தளம் அமைந்திருக்கும் பகுதிக்கு அருகில் இருக்கும் Zhengzhou என்னும் நகரத்தை மொத்தமாக லாக்டவுன் செய்யப்பட்டு அத்தியாவசியமான வர்த்தகம் மட்டுமே செய்ய அனுமதிக்கப்பட்டு, மற்ற அனைத்து சேவைகளும், வர்த்தகமும் முடக்கப்பட்டு உள்ளது. மக்களுக்குக் கொரோனா தொற்றுப் பரிசோதனை செய்ய மட்டுமே வெளியில் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
Zhengzhou பகுதி
அக்டோபர் 9ஆம் தேதி 40 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 6 பேருக்குப் புதிதாக Zhengzhou பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் வாயிலாகத் திங்கட்கிழமை முதல் Zhengzhou பகுதி முழுவதும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுச் சுமார் 10 லட்சம் குடும்பங்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளது.
ஜீரோ கோவிட் கொள்கை
உலக நாடுகள் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருக்கும் வேளையில், சீனா மட்டும் தொடர்ந்து ஜீரோ கோவிட் கொள்கையைக் கடுமையாகக் கடைப்பிடித்து வருகிறது. இதனால் சீனா மட்டும் அல்லாமல் சீனா-வை நம்பியிருக்கும் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டது.
சீனா கொரோனா
அக்டோபர் மாத துவக்கத்தில் சீனாவில் நீண்ட விடுமுறைக்குப் பின்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாகச் சீனாவின் மேற்கு பதியில் இருக்கும் Fenyang நகரத்தில் தொற்று அதிகரித்த நிலையில், அப்பகுதியில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் சோதனை செய்ய அரசு உத்தரவிடப்பட்டது.
மங்கோலியா
இதேபோல் மங்கோலியாவின் உள் பகுதியில் இருக்கும் Hohhot பகுதியில் இருந்து வாகனங்களும், மக்களும் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. Hohhot பகுதியில் சுமார் 2000த்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
ஐபோன் உற்பத்தி
ஐபோன் உற்பத்தி தளம் Zhengzhou பகுதியில் இல்லை என்றாலும் பெரும் பகுதியை ஊழியர்கள், வர்த்தகம், போக்குவரத்து ஆகியவை Zhengzhou பகுதியைச் சார்ந்து உள்ளது. இதனால் ஐபோன் உற்பத்தி கட்டாயம் பாதிக்கும், இந்த நிலையை முன்கூட்டியே உணர்ந்து தான் ஐபோன் திடீரென இதன் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றியது.