இன்று நாணயம், பணம், கிரிப்டோகரன்சி, NFT, டிஜிட்டல் பேமெண்ட் எனப் பல இருந்தாலும், சீன மக்கள் கொரோனா தொற்றின் காரணமாகப் பல ஆயிரம் வருடங்கள் முன் நாணயங்கள் அறிமுகம் செய்யப்படும் முன்பு நடைமுறையில் இருந்த பண்டமாற்று முறைக்குச் சீனா மக்கள் தற்போது தள்ளப்பட்டு உள்ளனர்.
ஏன் இந்த நிலை..? சீனாவில் டிஜிட்டல் சேவைகள் சிறந்து விளங்கும் நிலையில் பண்டமாற்று முறைக்குச் சீனா மக்கள் தள்ளப்பட்டது ஏன்..?
கொரோனா தொற்று
உலக நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில் சீனாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாகச் சீன அரசு தனது ஆஸ்தான வழக்கத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் உடன் முக்கியமான நகரங்கள் அனைத்திலும் லாக்டவுன் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதில் முக்கிய வர்த்கக நகரமான ஷாங்காய்-ம் ஒன்று.
ஷாங்காய்
ஷாங்காய் நகரத்தில் இருக்கும் 2.5 கோடி மக்கள் தற்போது கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடு காரணமாக வீட்டில் முடங்கியுள்ளனர். இதனால் மக்கள் தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் அடிப்படைத் தேவையான பொருட்களைப் பெறுவதில் பெரும் பிரச்சனையாக உள்ளது.
பண்டமாற்று முறை
ஒருபக்கம் தேவையான நேரத்தில் வெளியில் செல்ல முடியாத நிலையில், மறுபக்கம் முக்கிய வர்த்தகப் பகுதிகளில் லாக்டவுன் நடைமுறையில் இருக்கும் காரணத்தால் தேவையான பொருட்கள் சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வந்த நிலையில் தற்போது மக்கள் பண்டமாற்று முறைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
சப்ளை செயின்
சீன உள்நாட்டுச் சந்தையில் சப்ளை செயின் பாதிக்கப்பட்டு உள்ள காரணத்தால், மக்கள் தற்போது தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பண்டமாற்று முறை மூலம் சரி செய்து வருகின்றனர். உதாரணமாக ஐஸ்கிரீம்-க்கு பதிலாகக் காய்கறி, வைன்-க்கு பதிலாகக் கேக் என மக்கள் தங்களது தேவைக்கு ஏற்ப பொருட்களை மாற்றிக்கொள்கின்றனர்.
சீன சமூகவலைத்தளம்
மேலும் இத்தகைய செயல் தற்போது சீன சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சந்தையிலும், கடைகளிலும் போதுமான பொருட்கள் இல்லாத காரணத்தால் மக்கள் பணத்திற்குப் பதிலாகவும், பொருட்களைச் சண்டைபோட்டுக் கொண்டு வாங்குவதைக் காட்டிலும் பண்டமாற்று முறையில் தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பெறுவதை இது ஆரோக்கியமானதாக உள்ளது எனச் சீன மக்கள் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
நீங்க என்ன சொல்றீங்க..?