சீனா தைவான் நாட்டைத் தனது சொந்த நாடாகக் கூறி வரும் நிலையில், தைவான் நாட்டிற்கு ஆதாரவாகப் பல வெளிநாட்டுத் தலைவர்கள் அந்நாட்டிற்கு வருகின்றனர். இதற்கிடையில் சீனா தனது முப்படைகளையும் வைத்து தைவான் எல்லை பகுதியில் மிகப்பெரிய அளவில் ராணுவ ஒத்திகை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் சீனா தைவான் நாட்டைத் தேர்ந்த 7 பேர் மீது தடை விதித்துள்ளது. இதில் அமெரிக்காவுக்கான தைவான் நாட்டின் பிரதிநிதி உட்படத் தைவான் நாட்டின் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் அடக்கம்.
இந்தத் தடைகளைச் சீனா அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கத் தலைவர்கள்
ஆகஸ்ட் தொடக்கத்தில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, திங்களன்று அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் செனட்டர் எட் மார்கி தலைமையிலான அமெரிக்கக் காங்கிரஸின் பிரதிநிதிகள் ஆகியோர் தைவான் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்து அந்நாட்டிற்கு வந்தனர்.
ஐரோப்பா
கடந்த வாரம், லிதுவேனியாவின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு துணை அமைச்சர் Agne Vaicukeviciute தைவான் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்துச் சீனாவின் ராணுவ ஒத்திகைகளைத் தாண்டி பயணம் செய்தார். லிதுவேனியா என்பது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஒரு பகுதியாகும்.
7 பேர் மீது தடை
இதன் மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா தைவானின் சுதந்திரத்திற்கு ஆதரவாக இருப்பதைக் காட்டுகிறது. திங்களன்று அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் செனட்டர் எட் மார்கி தலைமையிலான அமெரிக்க அரசு அதிகாரிகளின் திங்கட்கிழமை தைவான் பயணத்திற்குப் பின்பு சீனாவின் 7 பேர் மீதான தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொருளாதாரத் தடை
சீனா ஏற்கனவே பெலோசி மற்றும் ஆக்னே-வுக்கு ஆகியோரின் வருகைக்கு எதிராகத் தைவான் நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. தற்போது கூடுதலாக 7 முக்கிய அதிகாரிகள் மற்றும் தலைவர் மீது சீனா தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த 7 பேரும் தைவான் நாட்டின் சுதந்திரத்தை ஆதரிப்பவர்கள்.
சீனா, ஹாங்காங் அல்லது மக்காவ்
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தைவான் விவகார அலுவலகம் செவ்வாயன்று வெளியிட்ட அறிவிப்பில் தடை விதிக்கப்பட்ட 7 பேர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சீனா, ஹாங்காங் அல்லது மக்காவ் பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள், மேலும் அவர்கள் சீன நிறுவனங்களிடம் வணிகம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது.
வாழ்நாள் முழுவதும் தடை
மேலும் இந்த 7 பேர் தொடர்புடைய அமைப்புகள், நிறுவனங்கள், முதலீடுகள் முடக்கப்படுவது மட்டும் அல்லாமல் இந்தத் தடை வாழ்நாள் முழுவதும் இருக்கும்படி உறுதி செய்ய உள்ளதாகச் சீன அரசு தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனமான Xinhua தெரிவித்துள்ளது.
சீனா நிலைப்பாடு என்ன
சீன ராணுவங்களின் ஒத்திகை தொடர்ந்து இருக்கும் நிலையில் சீனா எப்போது வேண்டுமானாலும் தைவான் நாட்டைத் தாக்கலாம் என்ற பதற்றமான சூழ்நிலை இருக்கும் வேளையில், தைவான் நாட்டிற்கு அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளின் ஆதரவு அதிகரித்து வருகிறது. இதனால் சீனா நிதானமாகத் தான் முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.