சீனா தனது கடன் வலையில் பல நாடுகளைச் சிக்க வைத்து வரும் நிலையில், தற்போது மிகப்பெரிய திட்டத்தைக் கம்போடியா-வில் பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளது சீன நிறுவனம்.
சீனா பல ஆப்பிரிக்க மற்றும் தென் கிழக்கு நாடுகளில் தனது வர்த்தகத்தையும் ஆதிக்கத்தையும் நிலைநாட்டப் பெரிய திட்டங்களுக்கு நிதி உதவி செய்வதை வழக்கமாகக் கொண்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் அத்தகைய பெரு முதலீட்டில் செய்யும் திட்டத்தைப் பெரும்பாலும் சீன நிறுவனங்களால் கட்டமைக்கப்படும் வழக்கத்தையும் கொண்டு உள்ளது.
இப்படிச் சீனா முதலீடு செய்த பெரும்பாலான நாடுகள் நிதி நிலையில் வலிமை மிக்க நாடுகளாக இருக்காது, இதுதான் சீனா முதலீடு செய்ய அடிப்படை காரணியாக வைத்துள்ளது.
கம்போடியா
கம்போடியா நாட்டில் மிகப்பெரிய விமான நிலையத்தைக் கட்ட சீனா நிதியுதவி உடன் சீன நிறுவனம் ஒப்பந்தத்தைப் பெற்றது. இந்த விமான நிலையத்தைக் கட்ட தற்போது போதுமான நிதி இல்லாத காரணத்தால் பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளது சீன நிறுவனம்.
விமான நிலையம்
சுமார் 300 ஹெக்டர் நிலத்தில் அமைய உள்ள கம்போடியா நாட்டு விமான நிலையத்தைக் கட்ட சுமார் 80 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா நேரத்தில் இந்தச் சீன நிறுவனம் பெரிய அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்ட காரணத்தால் இத்திட்டத்தைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
மக்கள்தொகை
கம்போடியா நாட்டின் மொண்டுல்கிரி (Mondulkiri) மாகாணத்தில் விமான நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு சீன நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. Mondulkiri நிலப்பரப்பில் மிகப்பெரியதாக இருந்தாலும், அந்நாட்டிலேயே மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாகாணம் இது.
பெல்ட் அண்ட் ரோடு திட்டம்
சீனா-வின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவுக்கு முக்கியத் தூண் ஆக விளங்குவது கம்போடியா. 2010 முதல் சீனா கம்போடியா மத்தியில் பல ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது. 2016ல் BRI திட்டம், 2020ல் ப்ரீ டிரேட் ஒப்பந்தம் ஆகியவையும் அடங்கும்.
50 சதவீதம் சீனா
இது மட்டும் அல்லாமல் கம்போடியா நாட்டின் மொத்த நேரடி அன்னிய முதலீட்டில் 50 சதவீதம் சீனா நாட்டுடையது. 2021ல் நிரந்தரச் சொத்து முதலீட்டுப் பிரிவில் சீனாவின் 2.32 பில்லியன் டாலர் முதலீட்டுக்கு கம்போடியாவின் வளர்ச்சி அமைப்பு ஒப்புதல் அளித்தது. இதேபோல் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகம் 2021ல் 38 சதவீத வளர்ச்சியில் 11.2 பில்லியன் டாலராக உள்ளது.
4.05 பில்லியன் டாலர் கடன்
மேலும் கம்போடியாவின் வெளிநாட்டுக் கடன் பட்டியலில் டிசம்பர் 31, 2021 நிலவரப்படி சீனா தான் அதிகப்படியான கடனை கொடுத்துள்ளது. சீனா மட்டும் கம்போடியாவுக்கு சுமார் 4.05 பில்லியன் டாலர் அளவிலான தொகையை 33 நிதியுதவி, 66 குறைவான வட்டியில் கடன், 2 நிலையான வட்டியில் கடனாக அளித்துள்ளது.
இலங்கை
வருமானம் ஈட்ட முடியாத பெரிய உள்கட்டமைப்புத் திட்டம், அளவுக்கு அதிகமான கடன் இது எல்லாம் எங்கேயோ கேட்ட விஷயமாக உங்களுக்குத் தோன்றினால் இது வேறு எங்கும் இல்லை, இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் தான்.. வருமானம் ஈட்ட முடியாத துறைமுகம், அளவுக்கு அதிகமான கடன், உரிய நேரத்தில் கடன் கொடுக்காத சீனா அவை அனைத்தும் இலங்கையில் நடந்தது..