சீனா. அடுத்த சில வருடங்களில் உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக வலம் வரக் கூடிய திறன் படைத்த நாடு. இப்போதே அமெரிக்காவையும், இந்தியாவையும் ஒரே நேரத்தில் நேரடியாக ஒரண்டைக்கும் இழுக்கும் நாடு.
அப்பேற்பட்ட பெரிய நாட்டுக்கு, இந்தியா ஒரு மிகப் பெரிய வர்த்தகப் பங்காளி. இந்த இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தில், இந்தியாவுக்கு வேலை முடிகிறது என்றால், சீனாவுக்கு வியாபாரம் கிடைக்கிறது எனலாம்.
அதெல்லாம் சரி, உண்மையாகவே அந்த அளவுக்கு சீனா இந்தியாவில் வியாபாரம் பார்க்கிறதா? என்ன ஆதாரம்?
இந்தியா சீனா பொருளாதாரம்
சீனா இந்தியாவுக்கு செய்யும் ஏற்றுமதி,
சீன ஸ்மார்ட்ஃபோன் கம்பெனிகளான சியாமி, விவோ, ஒன் ப்ளஸ் போன்ற கம்பெனிளுக்கு இந்தியாவில் இருக்கும் சந்தை,
இந்திய ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் சீனாவுக்கு இருக்கும் ஆதிக்கம்,
சீனாவை அதிகம் நம்பி இருக்கும் இந்திய பார்மா துறை என பலவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.
இந்தியா ப்ராஜெக்ட்
ஆக, இந்தியாவும் சீனாவும் ஒருவரை ஒருவர் வெறுத்தால் இரு தரப்பிலும் நஷ்டம் ஏற்படும் தான். ஆனால் சீனாவுக்கு கொஞ்சம் அதிகமாகவே அடி விழும் வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் ஏகப்பட்ட கட்டுமான திட்டங்கள் சீனாவுக்கு கொடுத்து இருக்கிறது மத்திய அரசு மற்றும் பல மாநில அரசுகள். அதில் பலதும் தற்போது சீனாவால் செயல்படுத்த முடியுமா முடியாதா என்கிற கேள்விக்குள் சிக்கி இருக்கிறது. அப்படி ஒரு ரயில்வே ப்ராஜெக்டில் தான் தற்போது பஞ்சாயத்து வந்து இருக்கிறது.
என்ன திட்டம்
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் DFCCIL (Dedicated Freight Corridor Corporation of India) Limited என்கிற கம்பெனி, சீனாவின் Beijing National Railway Research & Design Institute of Signal & Communication என்கிற கம்பெனிக்கு, 2016-ம் ஆண்டில், ஒரு சிக்னலிங் மற்றும் டெலிகம்யூனிகேஷன் திட்டத்தைக் கொடுத்தார்கள்.
திட்ட விவரங்கள்
இந்தியாவின் கிழக்கு பகுதியில், உத்திரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் கான்பூர் மற்றும் முகல்சராய் (Mughalsarai) ஆகிய இரண்டு நகரங்களுக்கு இடையிலான 417 கிலோ மீட்டர் நீளத்துக்கு சிக்னலிங் மற்றும் டெலிகம்யூனிகேஷன் வேலைகளைச் செய்வது தான் திட்டமாம். இந்த திட்டத்தின் மதிப்பு 471 கோடி ரூபாய். இதை கிழக்கு டி எஃப் சி என்கிறார்கள். Eastern Dedicated Freight Corridor (DFC).
சீன கம்பெனி உடனான ஒப்பந்தம் ரத்து
கடந்த 17 ஜூலை 2020, வெள்ளிக் கிழமை அன்று, DFCCIL அரசு நிறுவனம், சீனாவுக்கு வழங்கிய கிழக்கு டி எஃப் சி சிக்னல் மற்றும் டெலிகம்யூனிகேஷன் திட்டத்தை ரத்து செய்து இருக்கிறார்கள்.ஏன் இப்படி திடீரென ஒப்பந்தத்தை ரத்து செய்விட்டார்கள் எனக் கேட்டால் "வேலை குறித்த காலத்துக்குள் முடிக்கவில்லை" எனச் சொல்கிறார்கள்.
அரசு நிறுவனம்
"சீனாவின் பெய்ஜிங் நேஷனல் ரயில் ரிசர்ச் & டிசைன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சிக்னல் & கம்யூனிகேஷன் கம்பெனிக்கு 14 நாட்கள் நோட்டிஸ் காலம் கொடுத்த பின் தான், திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யும் டெர்மினேஷன் லெட்டரை அனுப்பி இருக்கிறோம்" என்ச் சொல்கிறார் DFCCIL அரசு கம்பெனியின் நிர்வாக இயக்குநர் அனுராக் சசன் (Anurag Sachan).
நீதிமன்றம்
இந்த ரயில்வே திட்ட ஒப்பந்த ரத்தை எதிர்த்து, சீனாவின் Beijing National Railway Research & Design Institute of Signal & Communication கம்பெனி நீதிமன்றத்தை நாடி இருக்கிறதாம். தற்போது இந்திய ரயில்வே நிர்வாகத்தை நீதிமன்றத்துக்கு இழுத்து இருக்கிறது எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
20 % தான் வேலை நிறைவு
கடந்த ஜனவரி 2019 கால கட்டத்திலேயே சீன கம்பெனியை நீக்க இருந்ததாக ரயில்வே அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்கள். அப்போதும், குறித்த நேரத்துக்குள் வேலையை முடிக்கவில்லை என்பது தான் குற்றச்சாட்டு. சீன கம்பெனிகள் அந்த கல கட்டத்தில் கூட வெறும் 20 % வேலைகளை மட்டுமே முடித்ததாகச் சொல்கிறார்கள்.
உலக வங்கி
இந்தியாவின் இந்த டி எஃப் சி திட்டத்தை, உலக வங்கியின் நிதி உதவியில் தான் தொடங்கி இருக்கிறது இந்திய ரயில்வே. எனவே ஏப்ரல் 2020 கால கட்டத்தில், சீனா உடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்வது தொடர்பாக தெரிவித்தார்களாம்.
பதில் இல்லை
இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இருக்கும் DFCCIL நிறுவனம், சீனாவின் ஒப்பந்தத்தை ரத்து செய்வது தொடர்பாக சொன்னதற்கு, இது வரை உலக வங்கியில் இருந்து NOC அல்லது எந்த ஒரு பதிலும் வரவில்லையாம். அதோடு இந்த டி எஃப் சி திட்டத்தை உலக வங்கியின் நிதி இல்லாமல், இந்திய அரசே பணத்தை செலவழித்து நிறைவு கொள்ளும் எனவும் உலக வங்கியிடம் சொல்லி இருக்கிறார்களாம்.