புதுச்சேரி: கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரியில் சீனப் பொருட்களை நம்பியுள்ள தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் சீனப் பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் சீன நாட்டில் மட்டும் இதுவரை 1700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 70 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் இந்த வைரஸிக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் சோகமான விஷயம். மேலும் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்காக, சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய பல்வேறு நாடுகளும் தடை விதித்துள்ளது. இந்தியாவிலும் சீனப்பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சில்லரை வர்த்தகம் மற்றும் உற்பத்தி துறையினர் சீன இறக்குமதியையே பெரிதும் நம்பியுள்ளனர்.
இந்நிலையில் சீனாவின் ரசாயன மூலப்பொருட்களை கொண்டே புதுச்சேரியில் பல மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இறக்குமதி தடையால் புதுச்சேரியில் மருந்து உற்பத்தி தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சீனாவில் இருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்டு வந்த டைல்ஸ்களின் இறக்குமதி ரத்தானதால் கட்டுமானத் தொழில்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்.இ.டி பல்ப் மற்றும் மின்சாதனப் பொருட்களின் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இறக்குமதி ரத்து செய்யப்பட்டுள்ளதால் குழந்தைகள் விளையாடும் சீன பொம்மைகள், உணவிற்காக பயன்படுத்தப்படும் டுமோட்டா சார்ஸ், சில்லி சார்ஸ், அஜினமோட்டோ உள்ளிட்டவற்றின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. சீனப் பொருட்களின் இறக்குமதிக்கான தடை ஒருபுறம் இருந்தாலும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி மத்திய அரசு உள்நாட்டு உற்பத்தியை பெருக்க வேண்டுமென தொழில் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.