உலகமே எதிர் பார்த்து வந்த அலிபாபாவின் நிதியியல் சேவை பிரிவு ஆன்ட் குரூப்-ன் 35 பில்லியன் டாலர் வரலாற்று ஐபிஓ திடீரெனச் சீன அரசு முடக்கிப் பல கோடி முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
ஆன்ட் குரூப் 35 பில்லியன் டாலர் ஐபிஓ திட்டத்திற்குச் சுமார் 3 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ஐபிஓ கோரிக்கை வந்த நிலையில் சீனா, ஹாங்காங் சந்தை முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் அனைத்து முதலீட்டாளர்களும் கவனத்தை ஈர்த்தது.
அலிபாபா குழுமத்தின் முன்னாள் தலைவர் ஜாக் மா சீன வங்கித் துறையைப் பற்றிக் கூறிய சில கருத்துக்களால் சீன அரசு கடைசி நேரத்தில் திட்டமிட்டு ஐபிஓ-வை முடக்கியுள்ளது. இந்நிறுவனத்தின் மதிப்பையும், வாய்ப்புகளையும் வேண்டுமென்ற திட்டமிட்டுப் பாதிப்படையச் செய்துள்ளது.
ஒரு சீன நிறுவனத்தின் வளர்ச்சியைச் சீன அரசே முடக்க என்ன காரணம்..? ஜாக் மா பேசியது மட்டும் தான் காரணமாக..? வாங்க உண்மையைத் தெரிந்துகொள்வோம்.
ஜாக் மா பேச்சு
சீனாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான அலிபாபா குழுமத்தின் தலைவர் ஜாக் மா சீன தலைநகர் ஷாங்காய்-ல் நடந்த ஒரு மிகப்பெரிய பின்டெக் மாநாட்டில் சீனாவில் பைனான்சியல் எகோசிஸ்டம்-ஏ இல்லை என்றும், சீனா வங்கிகள் ஒரு அடகுக் கடை போல் இயங்குகிறது எனப் பல கருத்துக்களை முன்வைத்து சீன அரசை மறைமுகமாகத் தாக்கி பேசினார்.
சீன அரசின் அதிரடி நடவடிக்கை
ஜாக் மா-வின் பேச்சில் கடுப்பான சீன அரசு அதிகாரிகள் அலிபாபாவின் ஆன்ட் குரூப் ஐபிஓ-வை திட்டமிட்டுத் தடுக்க வேண்டும் என முடிவு செய்து, சீனாவின் ஆன்லைன் மைக்ரோ கடன் சேவை நிறுவனங்கள் மற்றும் இத்துறை வர்த்தகம் மீது கடுமையான மூலதனம் மற்றும் இயக்க விதிமுறைகளை விதித்தனர். இந்த விதிமுறைகளை உடனடியாக அமலாக்கம் செய்யச் சீன அரசும் உத்தரவிட்டது.
ஐபிஓ-விற்குத் தடை
சீன அரசும் புதிய விதிமுறை அமலாக்கம் செய்ய உத்தரவிட்ட நிலையில் ஆன்ட் குரூப் வர்த்தகத்தைப் புதிய விதிமுறையின் கீழ் ஆய்வு செய்ய வேண்டும் அதன் பின்னரே ஐபிஓவிற்கு ஒப்புதல் கொடுக்க முடியும் எனப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையங்கள் தெரிவித்துவிட்டது.
இதனால் ஆன்ட் குரூப்-ன் ஐபிஓ சீனாவில் மட்டும் அல்லாமல் ஹாங்காங்-லும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொறாமை
சினாவில் அலிபாபாவின் வளர்ச்சி யாராலும் தடுக்க முடியாத அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. வர்த்தகம், தொழில்நுட்பம், டேட்டா, நிதியியல் சேவை என அனைத்து துறையிலும் தவிர்க்க முடியாத நிறுவனமாக உள்ளது.
இந்நிலையில் சீனாவின் அடிப்படையைத் தனது நிதி சேவை மூலம் கட்டமைத்துள்ள உள்ள காரணத்தால் ஆன்ட் குரூப் ஐபிஓ மூலம் வெற்றி அடைந்தால் சீன வங்கிகளின் ஆதிக்கம் பெரிய அளவில் குறையும் என்று திட்டமிட்டு சீன அரசு ஐபிஓ-வை முடக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆன்ட் குருப்
அலிபாபா முதலில் டிஜிட்டல் பேமெண்ட் சேவை அலிபே செயலி மூலம் மக்களுக்கு அறிமுகம் செய்தார். சில வருடங்களில் சீனா ரீடைல் சந்தை முழுவதையும் அலிபே பயன்படுத்தும் அளவிற்கு அலிபாபா வளர்ந்துவிட்டது.
இந்த அலிபே சேவை மூலம் அலிபாபா தனது ஈகாமர்ஸ் வர்த்தகத்தைப் பல மடங்கு உயர்த்தியது மட்டும் அல்லாமல் பல கோடி வாடிக்கையாளர்கள் புதிதாகப் பெற்றது.
அலிபே 2.0
இதன் பின் அலிபே டிஜிட்டல் பேமெண்ட் மட்டும் அல்லாமல் தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மைக்ரோ லோன் எனப்படும் சிறிய தொகை அளவிலான கடன் சேவை வழங்க துவங்கினார் ஜாக் மா. இது மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பை அடைந்தது.
இதுமட்டும் அல்லாமல் முதலீடு, கிரெடிட் கார்டு, இன்சூரன்ஸ், சிறிய நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் சிறிய தொகையில் வர்த்தகக் கடன் என மிகப்பெரிய ரீடைல் வர்த்தகத்தைக் கைப்பற்றினார் ஜாக் மா.
சீனா வங்கியில் பிரச்சனை
பொதுவாகச் சீன வங்கிகள் சிறிய அளவிலான தொகையைக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்த்து வருகிறது. பெரிய தொகை, பெரும் நிறுவனங்களுக்கு மட்டுமே கடனை வாரி வழங்குகிறது. இதனால் சிறு வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் வங்கியில் கடன் பெறுவது சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது.
சாமானியர்கள் வர்த்தகத்தைத் துவங்க வேண்டும் என்றாலோ, வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றாலும் சீன வங்கியில் கடன் பெறுவதும் மிகவும் கடனம்.
சீன அரசு
சீன மக்கள் மற்றும் ரீடைல் வங்கி சேவையில் சீன வங்கிகளின் ஆதிக்கம் குறைந்து விடுமோ என்ற பயத்தாலும், சீன அரசை விடவும் யாரும் பெரிய அளவில் வளர்ந்து விடக் கூடாது என்பதற்காகவே சீன அரசு கடைசி நேரத்தில் புதிய சட்டங்கள், கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகக் கருத்து நிலவுகிறது.
கட்டுப்பாடுகள் அவசியம்
இந்தப் புதிய கட்டுப்பாடுகள் மூலம் தனியார் வங்கி சேவைத் துறையில் அலிபாபாவின் ஆதிக்கத்தைக் குறைக்க முடியும், அதேபோல் இத்தகைய கட்டுப்பாடுகள் மிகவும் அவசியம் என Central China Securities அதிகாரி Zhang Gang தெரிவித்துள்ளார்.