இந்திய முதலீட்டு சந்தையைப் புரட்டிப்போட்ட என்எஸ்ஈ முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் இமயமலை சாமியார் என அழைக்கப்படும் என்எஸ்ஈ முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ஆனந்த் சுப்பிரமணியன் வழக்கில் சனிக்கிழமை விசாரணையில் டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் செபி அமைப்பிடம் நீதிபதி கடுமையான கேள்வியைக் கேட்டதால், சிபிஐ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சித்ரா ராமகிருஷ்ணா
என்எஸ்ஈ இணை இருப்பிட ஊழலில் நடந்து வரும் விசாரணையில் தேசிய பங்குச் சந்தையின் (NSE) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணாவை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) ஞாயிற்றுக்கிழமை மாலை அதிரடியாகக் கைது செய்தது.
ஆனந்த் சுப்பிரமணியன்
இந்த வழக்கில் தொடர்புடைய மற்றும் முக்கியமான குற்றவாளியாகக் கருதப்படும் என்எஸ்ஈ முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ஆனந்த் சுப்பிரமணியன் ஏற்கனவே சிபிஐ சென்னையில் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது சித்ரா ராமகிருஷ்ணா கைது செய்யப்பட்டு உள்ளார்.
சிபிஐ விசாரணை
டெல்லியில் கைது செய்யப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணா, திங்கட்கிழமை அதாவது இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். மேலும் சிபிஐ அமைப்பு நீதிமன்றத்தில் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றுள்ளது. சனிக்கிழமை வழக்கு விசாரணைக்குப் பின்பு சிபிஐ அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
நீதிபதி நருக் கேள்வி
சித்ரா ராமகிருஷ்ணா-வுக்கு, என்எஸ்இ இணை இருப்பிட வழக்கில் டெல்லி நீதிமன்றம் சனிக்கிழமை முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால் சிபிஐ இந்த வழக்கு விசாரணையில் மிகவும் மெத்தனமாக (lackadaisical) நடந்து கொண்டது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறினார்.
செபி மீது குற்றச்சாட்டு
கடந்த நான்கு ஆண்டுகளாக முக்கிய ஊழல் குற்றத்தில் தொடர்புடையவர்கள் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், செபி சித்ரா மற்றும் ஆனந்த் மீது "மிகவும் அன்பாகவும் மென்மையாகவும்" நடந்து கொண்டதாகக் கூறி விமர்சனம் செய்தார் நீதிபதி சஞ்சீவ் அகர்வால்.
இமயமலை சாமியார்
சிபிஐ விசாரணையில் ஆனந்த் சுப்ரமணியனின் rigyajursama@outlook.com என்ற ஈமெயில் முகவரியை உருவாக்கி, சித்ரா ராமகிருஷ்ணா-வின் பர்சனல் ஈமெயில் முகவரியான rchitra@icloud.com மூலம் என்எஸ்ஈ குறித்துப் பல முக்கியத் தரவுகளைப் பெற்றுள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.
இருவரும் கைது
இதன் மூலம் சித்ரா ராமகிருஷ்ணா மின்னஞ்சல் மூலம் பேசி வந்த முகம் தெரியாத இமயமலை சாமியாராக அறியப்படுவது ஆனந்த் சுப்ரமணியன் தான் எனச் சிஎன்பிசி தெரிவித்துள்ளது. இதைச் சித்ரா தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் தற்போது சிபிஐ சித்ரா-வை கைது செய்ததன் மூலம் பல உண்மைகள் வெளியாகும் எனத் தெரிகிறது.