இந்தியர்களின் இன்றைய மிகப்பெரிய கவலையே வேலையின்மை தான் என்று கூறலாம். ஒரு புறம் வாட்டி வதைக்கும் பொருளாதாரம், மறுபுறம் வேலையின்மை என சுற்றி சுற்றி இந்திய மக்கள் அடி வாங்கி கொண்டிருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.
இதை நீருபிக்கும் விதமாக சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான இப்சோஸ் பொது விவகாரங்கள் (ipsos public affair) அண்மையில் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின் படி, இந்தியர்களின் முதல் ஐந்து பிரச்சனைகளில் வேலையின்மையே முதலிடத்திலும், இந்தியா மட்டும் அல்ல, சர்வதேச அளவிலும், மக்களின் பெரும்பான்மையான கவலை வேலையின்மையே உள்ளது என்றும் கூறப்பட்டது.
உண்மையில் இதை நிரூபிக்கும் விதமாகத் தான் தற்போது CMIE அறிக்கை வெளிவந்துள்ளது.
நகர்புறங்களில் வேலையின்மை அதிகரிப்பு
நாட்டில் நிலவி வரும் மிக மோசமான பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் வேலையின்மையும் அதிகரித்துள்ளது. சொல்லப்போனால் நகர்புறங்களில் வேலையின்மை விகிதம் 9.7% சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த டிசம்பர் 2019ல் 9% ஆக இருந்தது. இதே கடந்த ஆண்டு ஆகஸ்டில் 9.71% ஆக இந்த விகிதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே ஜனவரி 2020வுடன் முடிவடைந்த 12 மாதங்களில் சராசரி வேலையின்மை விகிதம் 7.4% ஆக உள்ளது.
ஒட்டுமொத்த வேலையின்மை
நகர்புறத்தில் வேலையின்மை அதிகரித்துள்ள அதே வேளையில், ஒட்டுமொத்த வேலையின்மை விகிதமும் சற்று அதிகரித்துள்ளது. இது நகர்புறத்தினை போல் அல்லாமல் சற்று ஆறுதல் தரும் விதமாக உள்ளது. இது ஜனவரியில் வேலையின்மை விகிதம் 7.16% ஆக சற்று அதிகரித்துள்ளது. இது டிசம்பர் 2019ல் 7.6% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கிராமப்புற வேலையின்மை குறைந்துள்ளது
எப்படி எனினும் இதில் சந்தோஷப்படக்கூடிய ஒரு விஷயம் என்னவெனில் கிராமப்புறங்களில் இந்த வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது தான். இது கடந்த அக்டோபரில் 8% ஆக இருந்த நிலையில், டிசம்பரில் 6.9% ஆகவும், இதே ஜனவரியில் 6% ஆகவும் குறைந்துள்ளது.
கணிசமான அளவு அதிகம் தான்
இது குறித்து CMIEயில் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் வியாஸ் ஆங்கில நாளிதழ்களுக்கு அளித்த அறிக்கையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் வேலையின்மை விகிதம் 8% தாண்டியது. ஆக தற்போதைய எண்ணுடன் ஒப்பிடும்போது, 8% குறைந்ததாகத் தான் தெரிகிறது. ஆனால் 7% மேலாகத் தான் உள்ளது. சொல்லப்போனால் கடந்த 12 மாதத்திற்கு மேலாக இந்த விகிதமான சுமார் 7.4 ஆக உயர்ந்திருந்தாலும், இது கணிசமான அளவு உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.