பிரபலமான ஐடி நிறுவனமான சிடிஎஸ் எனப்படும் காக்னிசன்ட் (Cognizant) அடுத்த ஆண்டில் 23,000 புதியவர்களை பணியில் அமர்த்தலாம் என கூறியுள்ளது.
காக்னிசன்ட் நிறுவனம் அண்மையில் தான் அதன் இந்திய நடைமுறைகளுக்காக, புதிய தலைவராக ராஜேஷ் நம்பியாரை அமர்த்தியது. 23 வருடம் கழித்து ராம்குமார் ராமமூர்த்திக்கு பதிலாக ராஜேஷ் நம்பியார் நியமிக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராஜேஷ் தங்களது கவனம் மூன்று முக்கிய வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பெரிய சுற்றுசூழல் அமைப்பு ஆகியவற்றில் இருக்கும் என்றும் அதோடு எங்கள் வாடிக்கையாளர்களுடன் வைத்திருக்கும் வணிகத்தினை எப்படி தொடர்வது? மேலும் டிஜிட்டல் வளர்ச்சியினை எப்படி மேம்படுத்துவது என்பது எங்களின் முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஊழியர்கள் தான் முதுகெலும்பு
ஊழியர்கள் தான் எங்களின் முதுகெலும்பு என்றும் ராஜேஷ் கூறியுள்ளார். அவர் இந்தியாவில் உள்ள 2,00,000 திறமையான ஊழியர்களைக் குறிப்பிட்டு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. எங்களது திறமையான ஊழியர்கள் வளர்ச்சியினை புத்துயிர் பெறுவதில் முக்கிய பங்கு வகிப்பர். மேலும் இந்தியாவில் எங்களது நிலையை வலுப்படுத்த நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம்.
கவனம் செலுத்துவேன்
அதோடு, இந்திய அரசு, நாஸ்காம் மற்றும் பல்கலைகழகங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பலவற்றோடு, எங்கள் உறவுகளை மேம்படுத்துவதற்கு நான் தொடர்ந்து பணியாற்றுவேன். கல்வியாளர்களுடன் ஈடுபடுவேன். அவர்களுக்கும் காக்னிசன்ட்டிற்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவேன் என்றும் ராஜேஷ் நாயர் கூறியுள்ளார்.
இந்திய வர்த்தகத்தினை எப்படி மேம்படுத்துவது?
இந்தியா மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அதிக வளர்ச்சியடைந்த சந்தை. மற்ற சந்தைகளை போல இந்தியாவும் கவர்ச்சிகரமான ஒன்று. டிஜிட்டல் வளர்ச்சியினை மேம்படுத்த இந்திய நிறுவனங்களிடையே ஒரு தெளிவான முயற்சி உள்ளது. ஆக இந்தியாவில் விரைவில் டிஜிட்டல் புரட்சியை பாய்ச்ச முடியும். 2008 - 09ம் ஆண்டில் நாங்கள் எங்கள் இந்திய வணிகப் பிரிவை அமைத்ததிலிருந்து, வலுவான சந்தையை உருவாக்கியுள்ளோம்.
கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள்
குறிப்பாக இந்தியாவில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், சில்லறை விற்பனை, லைஃப் சயின்ஸ், இன்சூரன்ஸ் துறை, உற்பத்தி துறை மற்றும் கல்வித்துறையில் 90க்கும் மேற்பட்ட மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இந்திய வணிகம் சிறப்பாக மேம்பட்டு வருகின்றது. இங்கு பல வாய்ப்புகள் உள்ளன. நாங்கள் பல புதிய டீல்களில் வெற்றி பெற்றுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
இந்திய ஊழியர்கள் அதிகம்
இந்தியாவில் எங்கள் ஊழியர்கள் செய்யும் மிகப்பெரிய பணிகளால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மேலும் உலகளாவிய தொழிலாளர்களில் கிட்டதட்ட 70% பேர் இந்தியாவில் உள்ளனர். இந்தியா ஒரு மதிப்புமிக்க சொத்தாகவும், உலகளாவிய விநியோகம், கண்டுபிடிப்பு திறனின் முக்கிய மையமாகவும் உள்ளது. இதனால் தான் நாங்கள் இந்தியாவில் எங்களது செயல்பாடுகளை தொடர்ந்து செய்கிறோம்.
பணியமர்த்தல்
இந்தியாவில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் இருந்து தொடர்ந்து கேம்பஸ் மூலம் பணியமர்த்தலை தொடர்ந்து வருகிறோம். சொல்லப்போனால் தொடர்ந்து அதிக ஊழியர்களை தேர்வு செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. நடப்பு ஆண்டில் கேம்பஸ் மூலம் ஏறக்குறைய 17,000 பேரை பணியில் அமர்த்தியுள்ளோம். இது கடந்த 2016ல் இருந்து ஒப்பிடும்போது மிக அதிகம்
அடுத்த ஆண்டில் திட்டம்
அடுத்த ஆண்டில் இந்தியாவில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் 23,000 பேரை பணியமர்த்த எதிர்பார்க்கிறோம் என்றும் ராஜேஷ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். குறிப்பாக இந்த பணியமர்த்தல் நல்ல திறன் வாய்ந்த, டிஜிட்டல்,
கிளவுட் சேவை, டேட்டா, டிஜிட்டல் இன்ஜினியரிங், சைபர் செக்யூரிட்டி, சேல்ஸ்போர்ஸ், வணிக நவீனமயமாக்கல் உள்ளிட்டவைகள் முக்கிய பகுதிககளாக இருக்கும்.