மும்பை: இந்தியாவில் பொருளாதார மந்தநிலை கடந்த பல மாதங்களாக இருந்து வருவதை நாம் பட்டவர்த்தனமாக அறிவோம்.
இப்போது இந்த பொருளாதார மந்த நிலையால் இந்தியாவின் முன்னணி அறிவியல் கல்லூரிகளில் ஒன்றான, ஐஐடி கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கே வேலை கொடுக்க கம்பெனிகள் தயங்கிக் கொண்டிருக்கிறது.
என்ன ஐஐடியில் படித்த மாணவர்களுக்கு வேலை கொடுக்க நிறுவனங்கள் தயங்குகிறார்களா..? என்று கேட்டால்... விடை ஆம். வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.
பிளேஸ்மென்ட்
ஒவ்வொரு கல்வி ஆண்டின் போதும் டிசம்பர் மாதத்தில் இருந்தே ஐஐடி பட்டதாரிகளுக்கான கேம்பஸ் பிளேஸ்மென்ட் நேர்காணல்கள் எல்லாம் தொடங்கிவிடும். எப்படியும் ஐஐடி கல்லூரியில் தங்கள் படிப்பை முடிப்பதற்கு முன்பே கையில் ஒரு பணி நியமன ஆணையை வைத்திருப்பார்கள், ஐஐடியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள்.
இந்த முறை
ஆனால் இந்த 2019 ஆம் ஆண்டில் நிலைமை ஐஐடி கல்லூரியிலேயே கொஞ்சம் தலை கீழாக தான் இருக்கிறது. பொதுவாக ஐஐடி கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்துவதற்கு அனுமதி கிடைத்த முதல் சில நாட்களிலேயே வந்து, தங்களுக்குத் தேவையான சிறந்த மாணவர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்து வேலைக்கு எடுத்துக் கொள்ளும் பல நிறுவனங்களே கூட தற்போது ஐஐடி கல்லூரிக்கு நேர்காணல் நடத்த கூட வரவில்லையாம்
உறுதி செய்யவில்லை
அவ்வளவு ஏன், ஐஐடி கல்லூரியில் இந்த தேதிகளில் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ நடத்த இருக்கிறோம் என, ஐஐடி கல்லூரி பிளேஸ்மென்ட் செல்லில் இருந்து நிறுவனங்களுக்கு தெரிவிப்பார்களாம். இப்படி தெரியப்படுத்திய பின்பு கூட கேம்பஸ் இன்டர்வியூ நடத்த இந்த தேதியில் வருகிறோம் அல்லது இந்த ஆண்டு வருவதாக இல்லை என பதிலே சொல்லாமல் பல நிறுவனங்கள் அமைதியாக இருக்கிறார்களாம்.
உதாரணம்
வேர்ல்ட் க்வாண்ட் (World Quant) என்கிற ஒரு பெரிய முதலீட்டு நிறுவனம் வழக்கமாக மும்பையில் இருக்கும் ஐஐடி கல்லூரிக்கு வந்து தங்களுக்குத் தேவையான மாணவர்களை தேர்ந்தெடுத்துச் செல்வார்களாம். இந்த நிறுவனம் ஐஐடி மாணவர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கொடுத்து எடுக்க தயாராக இருக்கும் நிறுவனம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த நிறுவனமே கூட இந்த ஆண்டு ஐஐடி கல்லூரியில் ஆட்களை எடுப்பது குறித்து இன்னும் வாய் திறக்கவில்லையாம்.
மற்ற உதாரணங்கள்
வேர்ல்ட் க்வாண்ட் நிறுவனத்தைப் போல டவர் ரீசர்ச் மற்றும் க்ராவிட்டா ரிசர்ச் போன்ற பல நிறுவனங்களும் இந்த அளவுக்கு அதிக சம்பளத்தை கொடுத்து ஐஐடி கல்லூரி மாணவர்களை வேலைக்கு எடுப்பவர்கள் தானாம். இவர்களும் இதுவரை ஐஐடி மாணவர்களை வேலைக்கு எடுப்பது குறித்து வாய் திறக்கவே இல்லை.
வெளிநாட்டு வேலை
உள்நாட்டில் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்து ஐஐடி கல்லூரி மாணவர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களும், இதே போல மௌனம் காத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஐஐடி போன்ற பெரிய கல்லூரிகளில் படித்த மாணவர்களையே கேம்பஸ் இண்டர்வியூவில் வேலைக்கு எடுப்பது குறைந்தால் மற்ற சாதாரண கல்லூரிகளின் நிலை என்ன ஆகுமோ தெரியவில்லை.
கூடுதல் முயற்சி
வழக்கமாக ஐஐடி கல்லூரிகளுக்கு வந்து ஆட்களை அள்ளிச் செல்லும் நிறுவனங்கள் கூட இந்த முறை வேலைக்கு எடுப்பதில் தயக்கம் காட்டுவதைப் பார்த்து கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் ஐஐடி நிர்வாக தரப்பினர்கள். இருப்பினும் ஐஐடி கல்லூரி மாணவர்களின் கேம்பஸ் பிளேஸ்மென்ட்களை உறுதி செய்ய பயங்கரமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களாம். வழக்கத்தைவிட கூடுதலாக பல புதிய நிறுவனங்களை கேம்பஸ் பிளேஸ்மென்ட்-க்கு அழைத்து வர இருக்கிறார்கள்.
ஐஐடி மாணவர்
மேற்கு வங்கத்தில் இருக்கும் ஐஐடி கரக்பூரில் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் இதை உறுதி செய்திருக்கிறார். வழக்கமாக ஐஐடி கல்லூரி மாணவர்களுக்கு நல்ல சம்பளத்தை கொடுத்து வேலைக்கு எடுக்கும் சில நிறுவனங்கள் இந்த முறை நேர்காணல் செய்யக் கூட வரவில்லை என்பது உண்மை தான். அந்த நிறுவனங்களுக்கு பதிலாக பல புதிய நிறுவனங்களிடம் பேசி கேம்பஸ் பிளேஸ்மென்ட் செய்ய அழைத்து இருக்கிறார்கள் எனச் சொல்லி இருக்கிறார் இந்த மாணவர்.
பிபிஓ
ஐஐடி மாணவர்களை வழக்கமாக வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களின் எண்ணிக்க இந்த முறை குறைந்து இருக்கும் இதே நேரத்தில், பல மானவர்கள் பிபிஓ என்று சொல்லப்படும் ப்ரீ பிளேஸ்மென்ட் ஆஃபர்களில் அதிகம் தேர்வு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. உதாரணமாக ஹைதராபாத்தில் இருக்கும் ஐஐடி கல்லூரியில் இந்தப் ஃப்ரீ பிளேஸ்மென்ட் ஃபர்கள் அதிகரித்து இருக்கிறது. சுருக்கமாக இந்த பொருளாதார மந்த நிலை, இப்போது ஐஐடி கல்லூரி மாணவர்களையும் நேரடியாக பாதித்து இருக்கிறது. விரைவில் இந்த பொருளாதார மந்த நிலை சரியாகும் என்று நம்புவோம்.