இந்தியாவின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் சில முக்கிய தூண்களில் ஒன்று தான் நம் மத்திய ரிசர்வ் வங்கி. இந்த அமைப்புக்கும், இந்திய பொருளாதாரத்துக்கும், ஒரு நெருங்கிய உறவு உண்டு. எனவே, ஆர்பிஐ எடுக்கும் நடவடிக்கைகளுக்கு என்றுமே இந்தியாவில் ஒரு தனி கவனம் இருக்கும்.
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால், முதலில் இந்திய பொருளாதார நிலை எப்படி இருக்கிறது, நுகர்வோரின் மன நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தானே சரியாக திட்டம் வகுத்து மேம்படுத்த முடியும்.
எனவே ஆர்பிஐ ஒற்றைப் படை மாதங்களில் (ஜன, மார், மே, ஜூலை, செப், நவ) நுகர்வோர் நம்பிக்கை சர்வே (Consumer Confidence survey) எடுப்பார்கள்.
இந்த முறை ஜூலை 2020 மாதத்தில் எடுத்த நுகர்வோர் நம்பிக்கை சர்வே தொடர்பாக ஆர்பிஐ வெளியிட்ட தரவுகள் கொஞ்சம் நம்மை அதிர்ச்சி கொள்ளச் செய்கின்றன.
ஜூலை 2020 மாதத்துக்கான நுகர்வோர் நம்பிக்கை, 53.8 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது. கடந்த மார்ச் 2020 மாதத்தில், லாக் டவுன் அறிவித்ததில் இருந்தே, நுகர்வோர் நம்பிக்கை சர்வே தொடர்ந்து சரிந்து கொண்டே வருகின்றன. இப்படி நுகர்வோர் நம்பிக்கை சர்வே 53.8 புள்ளிகளைத் தொடுவது வரலாறு காணாத வீழ்ச்சியாம்.
பொதுவாக இந்த நுகர்வோர் நம்பிக்கை சர்வேயில் 100 புள்ளிகளுக்கு மேல் வருகிறது என்றால், நுகர்வோர்கள் நம்பிக்கையாக இருக்கிறார்கள் என்று பொருள் கொள்ளலாம். அதுவே 100 புள்ளிகளுக்கு கீழ் இருக்கிறது என்றால் பொருளாதாரத்தின் மீது நுகர்வோர்களுக்கு அதிக நம்பிக்கை இல்லை என்று சொல்லலாம்.
மக்கள் தங்களின் வேலை வாய்ப்புகள், சம்பளம் அல்லது வருமானம், தற்போதைய பொருளாதார சூழ்நிலை, அவர்கள் செலவு செய்வது போன்றவைகளைக் குறித்து பயத்தோடு இருக்கிறார்கள் என்கிறது மத்திய ரிசர்வ் வங்கியின் நுகர்வோர் நம்பிக்கை சர்வே. குறிப்பாக கடந்த மே 2020 நுகர்வோர் நம்பிக்கை சர்வேயில் சொல்லி இருந்ததை விட அதிகம் நெகட்டிவ் கண்ணோட்டத்தோடு இருக்கிறார்களாம்.
மிக முக்கியமாக, மக்கள் தங்களுக்கு மிகவும் அத்தியாவசியாமாக இருக்கும் செலவுகளை மட்டுமே செய்கிறார்களாம். தேவை இல்லாத செலவுகளை செய்யப் போவதில்லை எனவும் சொல்லி இருக்கிறார்களாம்.