வால்மார்ட் இந்தியாவில் வருவதை, இந்தியாவில் உள்ள சில்லறை வணிகர்கள் எல்லாம் கடுமையாக எதிர்த்த காலம் ஒன்று உண்டு. அந்த காலகட்டத்தில் எல்லாம் இ-காமர்ஸை நாம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
ஆனால் கடந்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் இ-காமர்ஸ் கம்பெனிகள் விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து கொண்டு இருக்கின்றன.
காலங்காலமாக உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்த பில் கேட்ஸையே பின்னுக்குத் தள்ளிவிட்டு ஜெஃப் பிசாஸ் தற்போது 178 பில்லியன் டாலருடன் உலக மிகப் பெரிய பணக்காரராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
நுகர்வோர் சட்டம்
இந்தியாவின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 -ஐ கடந்த திங்கள் கிழமை முதல் அமல்படுத்தி இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. இந்த புதிய விதிகள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு வியாபாரம் செய்யும் அனைத்து உள்நாடு & வெளி நாட்டு எலெக்ட்ரானிக் ரீடெயிலர்களுக்கும் பொருந்தும் என்றார்கள்.
நோட்டிஃபை செய்வோம்
மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், இந்த நுகர்வோர் பாதுகாப்பு (இ காமர்ஸ்) விதிகள் 2020-ஐ அடுத்த சில நாட்களில் நோட்டிஃபை செய்வோம் எனச் சொல்லி இருந்தார். நேற்று 24 ஜூலை 2020, புதிய நுகர்வோர் பாதுகாப்பு (இ காமர்ஸ்) விதிகள் 2020-ஐ, அரசு நோட்டிஃபை செய்து இருப்பதாக எகமானிக் டைம்ஸ் குறிப்பிட்டு இருக்கிறது.
தண்டனை
இந்த விதிகளை மீறினால் அல்லது சொன்ன சட்ட திட்டங்களை முழுமையாக கடை பிடிக்கவிலை என்றால், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் படி, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமாம். எனவே இ காமர்ஸ் நிறுவனங்கள், அரசு சொல்லி இருக்கும் புதிய விதிகளை உடனடியாக தங்கள் வலைதளங்களில் நடைமுறைக்கு கொண்டு வரும் வேலையில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.
விதிகள் சுருக்கம்
இந்த புதிய நுகர்வோர் (இ காமர்ஸ்) பாதுகாப்புச் சட்டத்தில் சொல்லி இருக்கும் முக்கியமான விஷயங்களை மட்டும் தற்போது பார்ப்போம். ரீஃபண்ட் , ரிட்டன், வாரண்டி, கேரண்டி, டெலிவரி, ஷிப்மெண்ட், பேமெண்ட் முறைகள், பேமெண்ட் பாதுகாப்பு, புகார் முறைகள் என பலவற்றைப் பற்றிப் பேசி இருக்கிறார்கள்.
எந்த நாடு
Country of origin (COO) என்பார்கள். இந்தியாவில், ஒரு பொருள் அல்லது சேவையை இறக்குமதி செய்து, இ காமர்ஸ் கம்பெனிகள் வழியாக விற்கிறார்கள் என்றால், அந்த பொருள் அல்லது சேவையை எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்து இருக்கிறார்கள். யார் இறக்குமதி செய்தார்கள், யார் விற்கிறார்கள் போன்ற விவரங்களைச் சொல்ல வேண்டும் என்கிறது புதிய விதிகள்.
புகார் பதிவு
வாடிக்கையாளர்கள், இ காமர்ஸ் வலைதளத்தில் புகார் செய்தால், அந்த புகாரை அடுத்த 48 மணி நேரத்துக்குள் பெற்று, அதற்கு அத்தாட்சி கொடுக்க வேண்டும். அந்த புகாரை அடுத்த ஒரு மாத காலத்துக்குள் தீர்க்க வேண்டும். வாடிக்கையாளர்கள் புகார்களைத் தீர்க்க ஒரு வாடிக்கையாளர் குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும் சொல்கிறது புதிய நுகர்வோர் பாதுகாப்பு (இ காமர்ஸ்) விதிகள்.
ரிட்டன் மறுக்கக் கூடாது
புதிய நுகர்வோர் (இ காமர்ஸ்) பாதுகாப்பு விதிகள் படி, இ காமர்ஸ் கம்பெனி வழியாக பொருட்களை விற்கும் விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு விற்ற பொருட்களில் ஏதாவது பிரச்சனை இருக்கிறது என்றாலோ, தாமதமாக டெலிவரி செய்யப்பட்டது என்றாலே, இ காமர்ஸ் வலைதளத்தில் சொல்லப்பட்டது போல இல்லை என்றாலோ, ரிட்டன் வாங்கிக் கொள்ளமாட்டேன் என மறுக்க முடியாது. அதே போல ரீஃபண்ட் கொடுக்கமாட்டேன் எனவும் சொல்ல முடியாதாம்.
காலாவதி தேதி & ரிட்டன் விவரங்கள்
இ காமர்ஸ் வலைதளத்தில், ஒரு பொருளின் காலாவதி தேதியை கட்டாயம் குறிப்பிட வேண்டும். அதோடு ரிட்டன் பாலிசிகள், ரீஃபண்ட், எக்ஸ்சேஞ்ச், வாரண்டி கேரண்டி, டெலிவரி & ஷிப்மெண்ட், பேமெண்ட் முறைகள் & அவைகளின் பாதுகாப்பு, வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய மற்ற கட்டணங்கள், பேமெண்ட் சேவை வழங்குபவரின் விவரங்கள் போன்ற அனைத்து அத்தியாவசிய விவரங்களையும் குறிப்பிட வேண்டுமாம்.
விலை ஏற்றம்
புதிய விதிகள் படி, இ காமர்ஸ் கம்பெனிகள், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை தங்கள் இஷ்டத்துக்கு நிர்ணயிக்க முடியாதாம். அதே போல ஒரு பொருளின் விலை என்ன என்பதையும், அதற்கு வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணங்களையும் முறையாக பிரேக் அப் கொடுக்க வேண்டும் என்கிறது புதிய நுகர்வோர் இ காமர்ஸ் பாதுகாப்பு விதிகள்.
கேன்சலேஷன் கட்டணம்
இ காமர்ஸ் கம்பெனிகள் பொருட்கள் அல்லது சேவைகளை வாங்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்த ஒரு கேன்சலேஷன் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது. ஒருவேளை பொருட்கள் அல்லது சேவைகளை விற்பனை செய்யும் விற்பனையாளர், தன் தரப்பில் இருந்து ஆர்டர்களைச் கேன்சல் செய்தால், கேன்சலேஷன் கட்டணத்தை செலுத்தத் தயாராக இருக்கிறார் என்றால் வாடிக்கையாளர்களிடம் கேன்சலேஷன் கட்டணத்தை வசூலிக்கலாமாம்.
பல விதிகள்
இப்படி பல கடுமையான, வாடிக்கையாளர்களுக்கு சாதகமான பல விதிகளை, மத்திய நுகர்வோர் இ காமர்ஸ் பாதுகாப்பு விதிகள் வழியாகக் கொண்டு வந்து இருக்கிறார்களாம். இனியாவது இ காமர்ஸில் பர்சேஸ் செய்யும் வாடிக்கையாளர்கள் தரப்பில் எழும் புகார்கள் மற்றும் பிரச்சனைகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என எதிர்பார்ப்போம்.