கொரோனா பாதிப்பில் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பு மூலம் சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரையில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மார்ச் கடையில் துவங்கி ஊரடங்கு காலத்தில் பெரிய நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாமல் இருந்த நிலையில், மே மாதம் துவக்கத்தில் இருந்து பணம் பலம் நிறைந்த பல நிறுவனங்களும் தற்போது ஊழியர்களைக் கொத்துக்கொத்தாகப் பணிநீக்கம் செய்து வருகிறது.
புதன்கிழமை மட்டும் ஆன்லைன் டாக்ஸி சேவை அளிக்கும் ஓலா 1,400 ஊழியர்களையும், ஷேர்சாட் 101 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்வதாக அறிவித்து ஊழியர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒருபக்கம் இருந்தாலும், பெரு நிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள் வரையில் 3 தரப்பு நிறுவனங்கள் மூலம் பல ஆயிரம் பேரை கான்டிராக்ட் ஊழியர்களாகப் பணியில் அமர்த்தியுள்ளது. தற்போது நடந்து வரும் பணிநீக்கம் நடவடிக்கைகளில் அதிகம் பாதிக்கப்படுவது இந்தக் கான்டிராக்ட் ஊழியர்கள் தான்.
முக்கியத் துறைகள்
கொரோனா-வால் அதிகம் பாதிக்கப்பட்ட முக்கியமான துறைகளில் நிதியியல், இன்சூரன்ஸ், சில்லறை வணிகம், ஈகாமர்ஸ், ஆன்லைன் சேவைகள், FMCG நிறுவனங்கள் தான் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டது. இதன் வாயிலாக வர்த்தகத்தை இழந்து நிற்கும் இத்துறை சார்ந்த அனைத்து நிறுவனங்களும் முதல் செய்தது செலவுகளைக் குறைக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது தான்.
ஈஸி டார்கெட்
இப்படிப் பணிநீக்கம் செய்யப்படும் போது பெரும் நிறுவனங்களுக்கும் சரி, சிறிய நிறுவனங்களுக்கும் சரி ஈஸி டார்கெட் என்பது கான்டிராக்ட் ஊழியர்கள் தான். பொதுவாகக் கான்டிராக்ட ஊழியர்கள் 3ஆம் தரப்பு நிறுவனத்தின் பெயரில் வேறு நிறுவனங்களுக்குப் பணியாற்றுவார்கள். இதேபோல் பெரும் நிறுவனங்கள் ஆப்ரேஷன்ஸ், வாடிக்கையாளர் சேவை, இதர பணிகளைச் செய்ய 3வது தரப்பு நிறுவனங்களை முழுமையாகப் பயன்படுத்துவது இயல்பு.
செலவுகளைக் குறைக்கப் பணிநீக்கம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்ட நிறுவனங்கள் முதலில் கைவைப்பது இந்தக் கான்டிராக்ட் ஊழியர்களும், 3ஆம் தரப்பு நிறுவனங்கள் தான்.
இதேபோன்ற நிகழ்வு தான் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் நடந்துள்ளது.
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் இந்தியாவில் பல்வேறு நிதி சேவைகளை அளித்து வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா காரணமாக யாரையும் பணிநீக்கம் செய்யவில்லை என அறிவித்துள்ள நிலையில், இந்நிறுவனத்திற்காகப் பணியாற்றும் 3ஆம் தரப்பு நிறுவனமான Teleperformance சிலரை கடந்த வாரம் பணிநீக்கம் செய்துள்ளது.
இதுகுறித்து Teleperformance HR பிரிவு பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியரிடம் கொரோனா பாதிப்புக் காரணமாக நிறுவனத்திற்கு யாரும் வர்த்தகம் கொடுப்பது இல்லை. இந்நிலையில் ஊழியர்களுக்குத் தொடர்ந்து சம்பளம் கொடுப்பது சாத்தியம் இல்லை எனக் கூறியுள்ளனர்.
அடுத்தடுத்த பணிநீக்கம்
B2B ஈகாமர்ஸ் வர்த்தக நிறுவனமான உதான் 10 முதல் 15 சதவீத கான்டிராக்ட் ஊழியர்களைக் கடந்த மாதம் நீக்கம் செய்தது. இதன் மூலம் சுமார் 3000 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.
தங்க கடன் சேவை அளிக்கும் Rupeek, Aasaanjobs நிறுவனத்துடன் வைத்திருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் 600 பேர் வேலையை இழந்துள்ளனர்.
இதோடு பெரு நிறுவனங்களான சோமேட்டோ, ஸ்விக்கி, ஷேர்சாட், ஓலா ஆகிய நிறுவனங்கள் செய்த பணிநீக்கத்தில் கண்டிப்பாகக் கான்டிராக்ட் ஊழியர்களும், 3ஆம் தரப்பு ஊழியர்களும் இருப்பார்கள்.