இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 50000த்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நவம்பர் 6, 2020க்குப் பின் அதீத பாதிப்பை இந்தியா எதிர்கொண்டு வருகிறது.
2வது கொரோனா தொற்று அலையில் தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் 2வது கொரோனா தொற்று அலை குறித்து எஸ்பிஐ வங்கி ஒரு முக்கியமான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
எஸ்பிஐ ஆய்வறிக்கை..
'The second wave of infections: The beginning of the end? என்ற தலைப்பில் வெளியான அறிக்கையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் டாக்டர் சௌமியா கன்டி கோஷ் உலகளவில் கொரோனா தொற்றின் வீரியம் முதல் அலையை விடவும் 2வது அலையில் அதிகமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது கொரொனா வைரஸ்-ஐ தடுக்கத் தடுப்பு மருந்து இருக்கும் காரணத்தால் இதை மிகவும் சிறப்பான முறையில் கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
2வது அலை.. ஏப்ரல் மாதம் உச்சம்
இதேபோல் இந்த அறிக்கையில் இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை பிப்ரவரி மாதம் துவங்கிய நிலையில் ஏப்ரல் 2021 பிற்பகுதியில் உச்ச நிலையை அடையும். இதன் பின்பு தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறையும், இதன் அலை மே 26, 2021 வரையில் நீட்டிக்கும் எனவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து
இந்தியாவில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து ஜனவரி 16, 2021 முதல் மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையில் மார்ச் 24 வரையில் சுமார் 5.31 கோடி மக்கள் தடுப்பு மருந்தைப் பெற்றுள்ளனர். குறிப்பாக ராஜஸ்தான், குஜராத், உத்தரகண்ட், ஹரியானா ஆகிய மாநிலத்தில் 20 சதவீத வயதானவர்கள் தடுப்பு மருந்தைப் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு வேகம் தேவை
இதேவேளையில் பஞ்சாப், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தடுப்பு மருந்து பெறுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதை வேகப்படுத்த வேண்டும் என எஸ்பிஐ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
4 மாதத்தில் சூப்பர் ரிசல்ட்
இந்தியாவில் தினமும் 40 முதல் 45 லட்சம் மக்களுக்குக் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டால் அடுத்த 4 மாதத்தில் 45 வயதிற்கு அதிகமானவர்களுக்கு முழுமையாகத் தடுப்பு மருந்து அளிக்க முடியும். ஆனால் கடந்த 24 மணிநேரத்தில் 23 லட்சம் பேர் தான் தடுப்பு மருந்தை பெற்றுள்ளனர்.
மீண்டும் லாக்டவுனா..?!
இந்தியாவில் 2வது கொரோனா தொற்று அலையில் அதிகமானோர் பாதிப்பு அடைந்து வரும் நிலையில், மக்கள் மத்தியிலும், நிறுவனங்கள் மத்தியிலும் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்படவில்லை என்றாலும் பாதிப்பு நிறைந்த பகுதிகளில் கட்டாயம் லாக்டவுன் இருக்கும் என எஸ்பிஐ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
லாக்டவுன் உதவாது.. ஆனால் வேக்சின் உதவும்
இதேவேளையில் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த லாக்டவுன் பெரிய அளவில் உதவாது, ஆனால் அனைவருக்கும் விரைவில் தடுப்பு மருந்து அளிப்பது மூலம் கட்டாயம் கொரோனா தொற்றைப் பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியும் என டாக்டர் கோஷ் தெரிவித்துள்ளார்.