கொரோனா வைரஸ், ஒட்டு மொத்த உலகத்தையும் ஒரு விதமாக அடித்து நொறுக்கிக் கொண்டு இருக்கிறது.
கம்பெனிகளில் வேலை செய்யலாம், ஆனால் முழுமையாக வேலை செய்ய முடியாது. சம்பளம் வரும், ஆனால் முழுமையாக வருமா தெரியாது... என ஒரு விதமான பயத்திலேயே பயணித்துக் கொண்டு இருக்கிறது.
இந்த காலத்தில், இந்தியாவின் பெரிய ஐடி கம்பெனிகள், ஒரு விஷயத்தை செய்ய இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இருப்பு
பொதுவாக பெரிய பெரிய கம்பெனிகள், தங்களுக்கு வரும் லாபத்தில் ஒரு பகுதியை, ரிசர்வ்களாக எடுத்து வைத்துக் கொள்வார்கள். அந்த பணத்தை அவசர காலத்தில் செலவழித்துக் கொள்வார்கள். இப்போது டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களிடம் மட்டும் சுமாராக 13 பில்லியன் டாலர் பணம் இருக்கிறதாம்.
குட்டி கம்பெனிகள் மதிப்பு
இந்த கொரோனா லாக் டவுனால், குட்டி குட்டி ஐடி கம்பெனிகள் & புதிதாக ஆரம்பித்து நன்றாக செயல்பட்டுக் கொண்டு இருக்கும் ஐடி கம்பெனிகளின் மதிப்பு கணிசமாக குறைந்து இருக்கும். எனவே இந்த கொரோனா காலத்தைப் பயன்படுத்தி பெரிய ஐடி கம்பெனிகள், இந்த குட்டி கம்பெனிகளை குறைந்த விலைக்கு வாங்க வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
எந்த மாதிரி கம்பெனிகள்
சும்மா வந்து போன மேனிக்கு இருக்கும் கம்பெனிகளை எல்லாம் வாங்காமல், cognitive and self healing IT platforms, cloud-based cyber security products போல, டிமாண்டில் இருக்கும் ஐடி வேலைகளைச் செய்யும் கம்பெனிகளை வாங்க வாய்ப்பு இருக்கிறதாம். அதெல்லாம் இருக்கட்டும். ஐடி கம்பெனிகள் இந்த நேரத்தில் துணிந்து வாங்குவார்களா? அதறு டிசிஎஸ் CEO-வே பதில் சொல்லி இருக்கிறார்
டிசிஎஸ் சிஇஓ
"எங்களின் மிகப் பெரிய Merger & Acquisition எல்லாமே, உலகமே நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த போது தான் நடந்து இருக்கின்றன. யாருமே கம்பெனிகளை வாங்க தயாராக இல்லாத போது, கம்பெனிகளை வாங்குவது தான் சரியான நேரம் என நாங்கள் நம்புகிறோம்" என டிசிஎஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதனே சமீபத்தில் சொல்லி இருக்கிறார்.
வாங்கி இருக்கிறார்கள்
2008 - 09 உலக நிதி நெருக்கடி காலத்தில் தான், டாடா கன்சல்டன்சி நிறுவனம், இந்தியாவில் இருந்த, சிட்டி குரூப்பின் பிசினஸ் பிராசஸ் செண்டரை சுமார் 505 மில்லியன் டாலருக்கு வாங்கியது. இந்த பிசினஸ் பிராசஸ் செண்டரை வைத்து, அந்த வங்கியின் 2.5 பில்லியன் டாலர் வியாபார ஒப்பந்தத்தை போட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற கம்பெனிகளும் சமீபத்தில் கம்பெனிகளை வாங்கி இருக்கிறார்கள்.
வாங்க வாய்ப்பு இருக்கு
ஆக இந்த கொரோனா வைரஸ் லாக் டவுன் பிரச்சனையைப் பயன்படுத்தி பெரிய ஐடி தாதாக்கள், தரமான, டிமாண்ட் இருக்கக் கூடிய வேலைகளைச் செய்யும் குட்டி குட்டி ஐடி கம்பெனிகளை விலைக்கு வாங்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. இந்த வாய்ப்புகளை பெரிய ஐடி கம்பெனிகள் பயன்படுத்திக் கொள்ளுமா? அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.