ஒட்டுமொத்த உலக மக்களையும் திக்குமுக்காட வைத்திருக்கும் கொரோனா-வின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில் கொரோனாவின் தாண்டவம் மீண்டும் துவங்கியுள்ளது.
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்-ல் 4வது நாளாகக் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரித்துச் சீன அரசையும், மக்களையும் அச்சத்தில் மூழ்கடித்துள்ளது.
கொரோனா 2.0 சீனாவில் இந்த முறை பல மடங்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. என்ன காரணம் தெரியுமா...??
Xinfadi மார்கெட்
சீனா தலைநகரான பெய்ஜிங்-ல் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புகள் அனைத்தும், பெய்ஜிங்-ல் இருக்கும் Xinfadi மார்கெட்-ஐ தொடர்புடையதாக உள்ளது என்பதைச் சீன அரசு கண்டுபிடித்துள்ளது.
இந்த Xinfadi மார்கெட் ஆசியாவிலேயே மிகப்பெரியது. 80 சதவீத பெய்ஜிங் மக்களின் உணவு தேவையை இந்த மார்கெட்-ல் இருந்தது தான் விநியோகம் செய்யப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் விற்பனைக்காக வெளிநாடு மற்றும் உள்ளுர் விளைபொருட்கள் அனைத்தும் இந்த மார்கெட்-க்கு தான் வருகிறது.
உடனடி நடவடிக்கை
கொரோனா தொற்றுக்கான மையப்புள்ளி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சீன அரசு Xinfadi மார்கெட்-ஐ முழுவதுமாக மூடிவிட்டது. இதுமட்டும் அல்லாமல் மாக்கெட் சுற்றியுள்ள, மார்கெட்டுக்கு தொடர்புடைய 10000-க்கும் அதிகமாகக் குடும்பங்களைச் சீன பரிசோதனை செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இது மட்டும் அல்லாமல் பெய்ஜிங் நகரம் முழுவதும், இந்த மார்கெட்-க்கு வந்து சென்றவர்கள், அவர்கள் தொடர்புடையவர்கள் என அனைவரையும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
சீனாவில் தற்போது கொரோனா 2.0 துவங்கியுள்ளதாகக் கருதப்படும் நிலையில், சீன அரசு Xinfadi மார்கெட் அருகில் இருக்கும் பள்ளிகள் அனைத்தையும் முட உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் Xinfadi மார்கெட் தொடர்புடைய மாணவர்கள் மற்றும் கல்லூரிகளையும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது சீன அரசு.
பாதிப்பு அதிகம்
இதுகுறித்து பெய்ஜிங் நகரத்தின் அரசு செய்தி தொடர்பாளர் Xu Hejiang கூறுகையில், இந்த முறை கொரோனா தொற்றுகளின் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தொற்றுகளைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
வூஹான்
கடந்த முறை கொரோனா தொற்றுக்கு மையப்புள்ளியாகக் கருதப்பட்ட வூஹான் கடல் உணவு சந்தையை விட 20 மடங்கு பெரிய இந்த Xinfadi மார்கெட். இந்த மார்கெட்-ல் இருந்து தினமும் பல ஆயிரம் டன் காய்கறி, பழம், மாமிசம் பெய்ஜிங் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை
இதேபோன்று தான் சென்னை மக்களின் உணவு தேவையைத் தீர்க்கும் முக்கிய விற்பனை தளமாக இருந்த கோயம்பேடு மார்கெட் வாயிலாகச் சென்னை முழுவதும் கொரோனா பரவியது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் இன்றைய மோசமான நிலை தான் நாளை சீனாவின் தலைநகர் பெய்ஜிங் நிலை.
79 பேர் பாதிப்பு
ஜூன் 14ஆம் தேதி மட்டும் சுமார் 36 பேர் கொரோனாவால் பெய்ஜிங் நகரில் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அரசு தரப்பு தகவல் கூறுகிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 79 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 76,499 பேரிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 8,950 பேர் Xinfadi மார்கெடுக்குச் சென்றவர்கள். இதில் 6,075 பேருக்கு தொற்று Negative ஆக உள்ளது எனப் பெய்ஜிங் பொதுநல துறை செய்தி தொடர்பாளர் Gao Xiaojun தெரிவித்துள்ளார்.