கொரோனா வைரஸினால் இதுவரை 283 பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் பலியாகியுள்ளனர். இது ஒரு புறம் எனில் மறுபுறம் தொழில் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதிலும் தற்போது வரையில் உலகளவில் மொத்தம் கொரோனாவின் கொடூர தாக்கத்திற்கு 2,83,268 பேர் தாக்கம் அடைந்துள்ளனர். இதில் 11,829 பேர் பலியாகியுள்ளனர்.
இப்படி ஒரு நிலையில் சர்வதேச அளவில் வணிகம் மொத்தமாக முடங்கியுள்ளது என்றே கூறலாம். இது வளர்ந்து வரும் இந்தியாவில் இன்னும் தாக்கத்தினை கூடுதலாகவே காட்டியுள்ளது எனலாம். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்திய வணிகங்களில் சுமார் 53% பாதிக்கப்பட்டுள்ளது என ஒரு கணிப்பில் தெரிய வந்துள்ளது.
வணிகம் பாதிப்பு
இது குறித்து வெளியான FICCI சர்வே அறிக்கையில், இந்திய வணிகங்களில் சுமார் 53% கொரோனா வைரஸ் தொற்று நோய் ஆரம்ப கட்டத்தில் இருந்தே பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன, மேலும் கிட்டதட்ட 4ல் மூன்று பங்கு வணிகங்களில் ஆர்டர்கள் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பல நிறுவனங்களிடம் சர்வே
இந்த கணிப்பானது மொத்தம் 317 நிறுவனங்களில் மார்ச் 15- 17 வரை FICCI உறுப்பு நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவற்றில் பதில் அளித்தவர்காளில் 35% பேர் தங்களின் சரக்கு இருப்பினை அதிகரித்துள்ளதாகவும், மேலும் 50% பேர் தங்கள் சரக்கு இருப்பினை 15% அதிகரித்துள்ளதாகவும், அதற்கு மேல் உயர்த்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பாதிப்பு எப்படி? எந்தளவு?
எப்படி எனினும் ஒட்டுமொத்தத்தில் 20% பேர் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 33% மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 33% நிறுவனங்கள் மிதமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சர்வேயில் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தவிர இந்த கொடிய வைரஸால் நிறுவனங்களின் பணப்புழக்கமும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பணப்புழக்கம் குறைவு
கிட்டதட்ட 80% நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் பணப்புழக்கம் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளன. இதில் பணப்புழக்கத்தில் 20% அல்லது அதற்கு மேற்பட்ட வீழ்ச்சி 40% நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனராம். சுமார் 63% பேர் தங்களது விநியோக சங்கிலிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மேலும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
நிலைமை மோசமடையலாம்
மேலும் தொற்று நோயின் தாக்கம் மேலும் அதிகரித்து வரும் நிலையில், நிலைமை இன்னும் மிக மோசமடையும் என்று தொழில் துறையினர் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பலர் தங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் தாமதமாகி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் உற்பத்தியும் பாதிக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
விரைவில் கட்டுக்குள் வரும்
ஏறக்குறைய 40% நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களுக்கு நுழைவது மற்றும் கிருமி நீக்கம் செய்வது குறித்த கடுமையான சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் இந்த சர்வே கூறியுள்ளது. இதே ஏறக்குறைய 30% நிறுவனங்காள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணி புரிய அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளன. பதில் அளித்தவர்களில் 5ல் 4 பேர் நிலைமை அடுத்த ஆறு மாதத்திற்குள் கட்டுக்குள் வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.