நாட்டின் தலைநகரான டெல்லியிலும் கொரோனாவின் தாண்டவத்தினால் பல ஆயிரம் மக்கள் அனுதினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கையில் அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி அரசு முழு லாக்டவுனை சில வாரங்களாகவே அமல்படுத்தி வருகின்றது.
ஒரு புறம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற பயம். மறுபுறம் இதனை சமாளிக்க முடியாமல் தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள். குறிப்பாக வேலையினை இழந்து, வருமானத்தினை இழந்து, அடிப்படை வாழ்வாதரத்திற்கே தவித்தும் வந்தனர்.
கடந்த ஆண்டு நிகழ்வு இன்னும் மக்கள் மத்தியில் மறையவில்லை என்றே கூறலாம். இந்த பயத்தினால் நடப்பு ஆண்டில் முன்னெச்சரிக்கையாக மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
துயரமான சம்பவம்
ஏனெனில் கடந்த ஆண்டில் கொரோனாவால் இறந்தவர்களை காட்டிலும், கொரோனா பயத்தாலும், சரியான போக்குவரத்து வசதிகள் கிடைக்காததாலும், நடந்தே லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். இதில் சிலர் போகும் வழியிலேயே இறந்தது தான் அதனினும் துயரமான சம்பவம். இன்னும் சிலர் சரியான உணவு கிடைக்காமல், பயணக் களைப்பில் தண்டாவளத்தில் படுத்து உறங்கியபோது ரயில் அடிபட்டு இறந்தனர். இப்படி மறக்கமுடியா சம்பவங்கள் ஏராளம்.
தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பும் மக்கள்
இதன் காரணமாக தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இது டெல்லி மட்டும் அல்ல, சென்னை போன்ற பெரு நகரங்களில் இருந்தும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் தலை நகர்டெல்லியில் இருந்து மட்டும் 8 லட்சத்தக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் டெல்லியில் இருந்து வெளியேற்றியுள்ளதாக போக்குவரத்து துறை தகவல்கள் கூறுகின்றன.
தொடர்ந்து நீடித்து வரும் லாக்டவுன்
கடந்த மாதம் 19ம் தேதி முழு லாக்டவுனை அமல்படுத்திய பின்னர் , தற்போது வரையில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகின்றது. இது இன்னும் நீட்டிக்கப்படலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதனால் தங்கள் வாழ்வாதரத்தினை இழந்த புலம் பெயர் தொழிலாளர்கள், டெல்லியில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.
தொடர்ந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்?
குறிப்பாக ஏப்ரல் 19 முதல் மே 14ம் தேதி வரையில் 8,07,032 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இதில் குறிப்பாக முதல் வாரத்தில் 3,79,604 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதே இரண்டாவது வாரத்தில் 2,12,448 பேரும், மூன்றாவது வாரத்தில் 1,22,490 பேரும், நான்காவது வாரத்தில் 92,490 பேரும் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.
புலம் பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கம்
தொழிலாளர்கள் வீடு திரும்பிய இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 21,879 முறை பேருந்து இயக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இது அண்டை மாநிலங்களாக உத்திரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தகுந்த ஒத்துழைப்பு அளித்த காரணத்தால், லாக்டவுன் காலகட்டத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்கு பயணித்ததாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.