டெல்லி: நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில், ஏற்கனவே பிறக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவானது மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டும் அல்ல இன்று மக்களின் முன்பு நேரடியாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இன்னும் 19 நாட்களுக்கு ஊரடங்கினை நீட்டித்தார்.
மேலும் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், உங்களுடைய மிகப்பெரிய ஒத்துழைப்பு தான் கொரோனாவினை பெரிதும் கட்டுப்படுத்த உதவி வருகிறது.
பெரும் சேதம் தவிர்ப்பு
ஆக நீங்களும் ராணுவ வீரர்களைப் போல நாட்டுக்காக செயல்பட்டு வருகிறீர்கள். மேலும் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கினால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனாவினை தவிர்க்க தொடர்ந்து அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
சிரமம் தான்
நாட்டில் நிலவி வரும் பொருளாதாரத்தை விட இந்திய மக்களின் உயிர் மிகவும் முக்கியமானது. பொருளாதாரத்தினை விட மிக விலைமதிப்பற்றது. ஆக மே 3-ஆம் தேதி வரை நாடு முழுவதிலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்றும் தெரிவித்து இருந்தார். ஊரடங்கினால் மக்களுக்கு ஏற்படும் எண்ணற்ற சிரமங்களை நான் நன்கு அறிந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் உள்ளது
கொரோனா வைரஸ் தொற்று பரவல் மற்ற நாடுகள் பலவற்றை காட்டிலும் இந்தியாவில் கட்டுக்குள் உள்ளதாகவும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத நிலையில், கோவிட் 19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதிக்கப்பட்டனர் எனவும் கூறியுள்ளார்.
தீவிர நடவடிக்கை
அதுமட்டும் அல்ல பிரச்னை தீவிரமடையும் வரை இந்தியா காத்திருக்கவில்லை. கொரோனா வைரஸ் தொற்று பிரச்னை தொடங்கியவுடனே இந்தியா விரைந்து நடவடிக்கைகளை எடுத்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ எட்டும் முன்பே, வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்ற கூறினோம்.
பணி நீக்கம் வேண்டாம்
மேலும் உங்கள் நிறுவனத்தில் பணிபுரிவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள். அதோடு உங்கள் பணியார்களை பணி நீக்கம் செய்யாதீர்கள். அதுமட்டும் அல்லாது ஊரடங்கு நீட்டிப்பு குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் நாளை வெளியிடப்படும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு தளர்த்தப்படுமா?
மேலும் நாட்டில் ஏப்ரல் 20 வரை நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்படும். அங்கு எந்த அளவுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன என்பதை கண்காணிக்கப்படும். கொரோனா தொற்று ஹாட்ஸ்பாட்கள் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும் இடங்களில், மாநிலங்களில் சில முக்கிய நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கும் என்றும் கூறியுள்ளார்.