டெல்லி: உலகையே தனது கட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் கொரோனா அச்சத்தால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி போய் இருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதற்கிடையில் இந்தியாவில் தற்போது வரை 518 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 பேர் பலியாகியுள்ளனர். அதிலும் தமிழ் நாட்டில் முதல் மரணம் கொரோனாவால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆக பொருளாதாரம் வீழ்ச்சி கண்டாலும் பரவாயில்லை. மக்கள் தயவு செய்து வீடுகளுக்குள்ளே இருங்கள் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இன்றிலிருந்து அடுத்த 21 நாட்களுக்கும் ஒட்டுமொத்த இந்தியாவும் முடக்கப்பட்டுள்ளது.
ஆட்டோமொபைல் துறைக்கு இழப்பு
இதன் எதிரொலியாக அத்தியாவசியமான தேவையுள்ள பொருட்களை தயாரிக்கும் தொழில்சாலைகள் தவிர மற்றவைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக முதலில் அதிகளவில் முடங்கியிருப்பது ஆட்டோமொபைல் துறை தான். ஏனெனில் இந்தியாவின் மொத்த ஜிடிபி விகிதத்தில் கணிசமான அளவினைக் கொண்டு இருக்கும் ஆட்டோமொபைல் துறை இந்த கொரோனாவால் பெரும் இழப்பினை சந்தித்து வருகிறது என கூறலாம்.
உற்பத்தி நிறுத்தம்
ஏனெனில் கொரோனா தொற்று பரவாமல் இருக்கும் பொருட்டு ஏற்கனவே லாக்டவுன் அமலுக்கு வரும் முன்பே பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தனது உற்பத்தியை நிறுத்தி வைத்தன. பல ஆலைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் தற்போது அமலுக்கு வந்துள்ள 21 நாள் லாக்டவுன் பிரச்சனையால் ஆட்டோமொபைல் துறைக்கு தினசரி 2,300 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்று ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் சியாம் தெரிவித்துள்ளது.
இவ்வளவு நஷ்டமாகுமா?
இது குறித்து வெளியான அறிவிப்பில், நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தாக்கத்தினால் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆட்டோமொபைல் துறைக்கு நாள் ஒன்றுக்கு 2,300 கோடி ரூபாய் இழப்புக்கு வழிவகுக்கும் என்றும் சியாமின் தலைவர் ராஜன் வதேரா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் திங்கட்கிழமையன்று காலையில் இருந்தே உற்பத்தியை நிறுத்தி விட்டன.
இதுவரையில் பெரிய இழப்பு
மேலும் இந்த நிறுவனங்கள் மார்ச் இறுதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவித்திருந்தன. இதே மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த சனிக்கிழமையிலிருந்தே புனேவில் உள்ள ஆலையை மூடின. ஆக இந்த தொழில் துறையின் பணி நிறுத்தம் காரணமாக, இதுவரையில் மொத்த வருவாய் இழப்பு சுமார் 20,000 கோடி வரையில் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வளவு பாதிப்பு
120 பில்லியன் டாலர் மதிப்பிலான உள்நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5%மும், இதே உற்பத்தி துறையில் 49% பங்கும், ஜிஎஸ்டி வசூலில் 15%மும், பங்கு வகித்து வருகிறது, இந்த துறையானது நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 30 மில்லியன் மக்களை பாதிக்கலாம் என்றும் ராஜன் கூறியுள்ளார்.
எப்படி எனினும் பணம் போனால் சம்பாதித்து கொள்ள முடியும். மக்களின் உயிர் தானே தற்போதைக்கு முக்கியம். ஆக நிச்சயம் அரசு இந்த நடவடிக்கைக்கு நாமும் உறுதுணையாக இருப்போம்.