மும்பை: கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டின் இறுதியில் தான் தலைதூக்கினாலும், கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக பல துறைகளும் பெரும் சவால்களை சந்தித்து வந்தன.
இதற்கிடையில், தகவல் தொழில் நுட்ப துறையினை சேர்ந்த மூத்த அதிகாரிகளுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதில் டிசிஎஸ் நிறுவனம் மட்டும் மூத்த அதிகாரிகளுக்கு சம்பள அதிகரிப்பு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
சம்பளம் அதிகரிப்பு
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான சலீல் பரேக் கடந்த நிதியாண்டில் 40 கோடி ரூபாய் சம்பள தொகுப்பினை ஈட்டியுள்ளாராம். இது கடந்த ஆண்டை விட 27 சதவீதம் அதிகமாகும். எனினும் இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நீல்கனி தன்னுடைய சேவைகளுக்கு எந்தவிதமான ஊதியத்தினையும் வேண்டாம் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. .
இவங்களுக்கு எவ்வளவு சம்பளம்?
இதே சி.ஓ.ஓ பிரவீன் ராவ் காம்பென்சேட் (compensation) ஆக 2.2 மில்லியன் டாலரினை பெற்றுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 29 சதவீதம் அதிகமாகும். இதே மற்ற இரண்டு தலைவர்கள் ரவிக்குமார் மற்றும் மோஹித் ஜோஷி சம்பளம் 3 மில்லியன் டாலர் மற்றும் 3.2 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது முறையே 25% மற்றும் 24.6% ஆகும்.
விப்ரோவில் எவ்வளவு அதிகரிப்பு?
இதே விப்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி அபுதாலி நிமூச்வாலாவின் சம்பள தொகுப்பு 12 சதவீதம் அதிகரித்து, கிட்டதட்ட 31 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஒழுங்குமுறை தாக்கல் ஒன்றில் கூறப்பட்டது. இந்த நிலையில் ஜூன் 1 முதல் காப்ஜெமினியின் சிஓஓ தியரி டெலாபோர்டு, விப்ரோவின் சி இஓ ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் சம்பள விவரங்கள் இனி தான் தெரிய வரும்.
கொஞ்சம் சம்பளம் குறைப்பு
கொரோனா காரணமாக நிலவி வரும் நிச்சயமற்ற தன்மை அடுத்த சில மாதங்களுக்கு நீடிக்கும் என்று கூறப்படும் நிலையில், ஐடி துறையில் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. டிசிஎஸ்-ஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவர் ராஜேஷ் கோபிநாதனின் ஆண்டு ஊதியம் 2019 - 2020ல் 16.5 சதவீதம் குறைந்து, 13.3 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களுக்கும் சம்பளம் குறைவு
இதே டிசிஎஸ்ஸின் சிஓஓ மற்றும் நிர்வாக இயக்குனரான என் கணபதி சுப்பிரமணியம் சம்பளம் 13 சதவீதம் குறைந்துள்ளதாகவும், சிஎஃப்ஓவி ராமகிருஷ்ணனுக்கு 3.5% சம்பளமும் குறைந்துள்ளதாகவும் லைவ் மிண்ட் செய்திகள் கூறுகின்றது. இதே நிர்வாக ஊதியம் 15 சதவீதம் குறைந்துள்ளதாகவும் டிசிஎஸ் தெரிவித்துள்ளது.
இனி தான் தாக்கம் அதிகரிக்கும்
கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் வருவாயை சற்று தாக்கம் இருந்தாலும், கொரோனாவால் முதல் காலாண்டு மற்றும் இரண்டாவது காலாண்டில் சற்று கடுமையான தாக்கதினை காணும் என்றும் ஐடி நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. இப்போதே இப்படி எனில், நடப்பு ஆண்டில் இது எந்த அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரியவில்லை.ஆக இது ஐடி நிறுவனங்களுக்கு கவலையளிக்கும் ஒரு விஷயம் தான்.