இந்தியா என்கிற நாட்டில், எந்த ஒரு பொருளையோ அல்லது சேவையையோ மிக எளிதில் விற்று விட முடியாது. அந்த ஆரம்ப கால சிக்கல்களை எல்லாம் தாண்டி வாடிக்கையாளர்கள் வாங்கத் தொடங்கிவிட்டால் அல்லது சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் அதன் பின், மக்கள் அதை எளிதில் விடமாட்டார்கள்.
டீமானிட்டைசேஷன் நினைவிருக்கிறதா? அதாங்க புது 2,000 ரூபாய் நோட்டுக்காக வரிசையில் நின்றோமே! அந்த கடுமையான நடவடிக்கையை எதற்கு எடுத்தார்கள்?
கருப்புப் பணம் ஒழிப்பு மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்டை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் கொண்டு வந்தார்கள். ஆனால் டீமானிட்டைசேஷன் நடவடிக்கையால் அதை முழுமையாகச் செய்ய முடியவில்லை.
கொஞ்சம் தான்
டிமானிட்டைசேஷன் காலத்தில், ரொக்கம் கைக்கு வரும் வரை டிஜிட்டல் பேமெண்ட்களை எல்லாம் மக்கள் கொஞ்சம் திரும்பிப் பார்த்தார்கள். டிமானிட்டைசேஷன் முடிந்து, ரூபாய் நோட்டுக்கள் சகஜமாகவும், எளிதாகவும் புழக்கத்துக்கு வந்த பின், மீண்டும் மக்கள் சகஜமாக ரூபாய் நோட்டுக்களையே பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
வைரஸ் பிரச்சனை
ஆனால் தற்போது இந்த கொரோனா வைரஸ் பிரச்சனையால், மக்கள் ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, டிஜிட்டல் பேமெண்ட்களை அதிகம் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்களாம். யூ பி ஐ பணப் பரிமாற்ற தொகையின் அளவு (Value of Transaction), கடந்த ஜூன் 2020-ல் வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டு இருக்கிறதாம். ஆக டிமானிட்டைசேஷனால் சாதிக்க முடியாததை இந்த வைரஸ் சாதித்துவிட்டது.
முதல் முறை யூசர்கள்
இதுவரை ஆன்லைனில் கட்டணங்களைச் செலுத்தாதவர்கள் கூட, தற்போது தங்கள் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்களாம். பல சரக்கு கடைகளில் கூட ஆன்லைனில் பேமெண்ட் செய்கிறார்களாம். 2021-க்குள் இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை இந்திய ஜிடிபியில் 15% அளவுக்கு அதிகரிக்க வேண்டும் எனச் சொன்னது ஆர்பிஐ. நாள் ஒன்றுக்கு 100 கோடி பணப் பரிவர்த்தனைகள் நடக்க வேண்டும் என அரசு எதிர்பார்க்கிறது.
போட்டியாளர்கள்
இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் வசதி 2023-ம் ஆண்டுக்குள் 1 ட்ரில்லியன் டாலரைத் தொடும் எனக் கணித்து இருக்கிறார்கள். எனவே அரசின் இந்த எதிர்பார்ப்புகளோடு அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்களும், இந்த 1 ட்ரில்லியன் டாலர் வியாபாரத்தில், ஒரு கணிசமான பகுதியைப் பிடிக்க பல பேமெண்ட் கம்பெனிகளோடு போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
ஃபேஸ்புக் சர்வே
இந்தியாவின் ஆன்லைன் பேமெண்ட் தொடர்பாக ஃபேஸ்புக் மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குழுமம் நடத்திய சர்வேயில், மார்ச் 2020-ல் இருந்து இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் அதிகரித்து வருவதாகச் சொல்கிறது. அதோடு இந்த டிஜிட்டல் பேமெண்ட் டிரெண்ட், அடுத்த 6 மாதங்களுக்கு மேல் நோக்கிப் போகவே அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறது. வாழ டிஜிட்டல் இந்தியா. ஒழிக கொரோனா.