இந்திய பொருளாதாரம் 2020 கொரோனா தொற்று, லாக்டவுன் அறிவிப்புகள் மூலம் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில், இந்த சரிவில் இருந்து மீண்டு வர மத்திய அரசு பல வளர்ச்சி திட்டங்களையும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பல துறையில் முக்கியமான அறிவிப்புகளை அறிவித்தது.
மத்திய அரசு அறிவித்த வளர்ச்சி திட்டங்கள் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பப் போதாது என விவாதம் செய்து வரும் நிலையில், 2வது கொரோனா அலை இந்திய மக்களையும், இந்திய பொருளாதாரத்தைத் தாக்கியுள்ளது. நாட்டின் பல முக்கிய மாநிலங்கள், நகரங்களில் மக்களுக்குப் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமல் இருக்கும் காரணத்தால் சாமானிய மக்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியா முழுவதும் 2வது கொரோனா அலை தொற்றுக் காரணமாக அறிவிக்கப்பட்டு உள்ள லாக்டவுன் கட்டுப்பாடுகள் மூலம் இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு வாரத்திற்கு 1.25 பில்லியன் டாலர் அளவிலான நஷ்டம் ஏற்படும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
கொரோனாவின் 2வது அலை
கொரோனாவின் 2வது அலை தொற்றைக் கட்டுப்படுத்த வர்த்தகம், போக்குவரத்து எனப் பல லாக்டவுன் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதித்து வருகிறது. 2020ஐ போல் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்படாமல் லோக்கல் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ள இந்த நிலையிலும், நாட்டின் வர்த்தகச் சந்தையும் பொருளாதாரமும் பெரிய அளவில் பாதிக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
லாக்டவுன் பாதிப்பு
தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள லாக்டவுன் மூலம் இந்திய பொருளாதாரம் வாரத்திற்கு 1.25 பில்லியன் டாலர் அளவிலான இழப்பைச் சந்திக்க நேரிடும். இதேபோல் 2021-22ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய GDP 1.40 சதவீதம் வரையில் பாதிக்கப்படும் என Barclays. லாக்டவுன் கட்டுப்பாடுகளை மத்திய அரசு மாநில அரசுகளின் கையில் கொடுத்துள்ளது.
0.5 பில்லியன் டாலர் பொருளாதாரம் பாதிப்பு
மாநில அரசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள லாக்டவுன் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஏப்ரல் மாதம் இறுதி வரையில் மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மே மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டாலோ அல்லது புதிய கட்டுப்பாடுகள் உடன் மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டால் இந்திய பொருளாதாரத்திற்கு 10.5 பில்லியன் டாலரும், ஆண்டு ஜிடிபியில் 0.34 சதவீதமும் பாதிக்கும் எனப் பிரிட்டன் ப்ரோகரேஜ் நிறுவனமான Barclays கணித்துள்ளது.
இந்தியா படு மோசம்
இந்தியாவில் தற்போது அமெரிக்கா, பிரேசில் நாடுகளை விடவும் அதிகளவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகி வருகிறது. செவ்வாய்க்கிழமையின் படி இந்தியாவில் 1.62 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுமட்டும் அல்லாமல் சுமார் 879 பேர் கொரோனா தொற்றுக் காரணமாக மரணம் அடைந்துள்ளனர்.
டாப் 10 மாநிலங்கள்
மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகக் கொரோனா தொற்று உடன் மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் மூலம் இந்தியாவில் அதிகக் கொரோனா பாதிப்பு கொண்ட மாநிலங்களாக இந்த 10 மாநிலங்கள் உள்ளது.