சென்னை: பின்ச் குரூப்-ன் கிளை நிறுவனமான CreditSights அதானி குழுமத்தின் நிர்வாகத்துடனான உரையாடலைத் தொடர்ந்து, இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான கௌதம் அதானியின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பவர் மற்றும் டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களின் சமீபத்திய கடன் அறிக்கையில் கணக்கீடு பிழைகள் இருப்பதைக் கண்டுபிடித்ததாக்கத் தெரிவித்துள்ளது.
CreditSights இன் கடந்த மாத இறுதியில் அதானி குழுமத்தை "deeply overleveraged" என்று வகைப்படுத்தியது மட்டும் அல்லாமல் கடன் மற்றும் பிற அபாயங்கள் உள்ளதாக அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் சரிவை சந்தித்தது.
இதைத் தொடர்ந்து அதானி குழுமம் CreditSights நிறுவனத்திற்குச் சில விளக்கம் கொடுத்த நிலையில் தற்போது அதானி குழுமத்தின் கடன் அறிக்கையில் கணக்கீடு பிழைகள் இருப்பதைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்துள்ளது.
CreditSights அறிக்கை
கடன் ஆய்வு நிறுவனமான CreditSights செப்டம்பர் 7 தேதியன்று வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமத்தின் நிதி மற்றும் பிற நிர்வாகிகளுடன் பேசி அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி பவர் தொடர்பான சில புள்ளிவிவரங்களைச் சமரசம் செய்ததாகக் கூறியது.
அதானி குழுமம்
அதானி குழுமத்தின் வெளிநாட்டுக் கடன் நிர்வகிக்கக்கூடிய மட்டத்தில் இருப்பதாகவும், அதன் விரிவாக்கத் திட்டங்கள் முக்கியமாகக் கடன்கள் மூலம் நிதியளிக்கப்படவில்லை என்றும் இக்குழும நிர்வாகக் கருத்துத் தெரிவித்துள்ளதாக CreditSights தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடன் பத்திரங்கள்
இந்த ஆண்டு மட்டும் அதானி குழுமம் தனது விரிவாக்கத் திட்டங்களுக்கான பில்லியன் டாலர் கணக்கான டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களை அறிவித்துள்ளது என்றும் CreditSights கூறியுள்ளது.
அதானி டிரான்ஸ்மிஷன், அதானி பவர்
இந்நிலையில் தனது கணக்கீட்டில் அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் EBITDA அளவை 42 பில்லியன் ரூபாயில் இருந்து 52 பில்லியன் ரூபாயாக மதிப்பிட்டுள்ளது. இதேபோல் அதானி பவர் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதன் மொத்தக் கடன் மதிப்பீட்டை 582 பில்லியன் ரூபாயில் இருந்து 489 பில்லியன் ரூபாயாகக் குறைத்து மதிப்பிட்டுத் திருத்தம் செய்துள்ளதாக CreditSights தெரிவித்துள்ளது.
கிரெடிட்சைட்ஸ்
"இந்தத் திருத்தங்கள் எங்கள் முதலீட்டு பரிந்துரைகளை மாற்றவில்லை," என்று கிரெடிட்சைட்ஸ் கூறியது, இருப்பினும், அதானி பவர் மற்றும் டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களில் மீதான தனிப்பட்ட பரிந்துரைகள் இதுவரையில் அளிக்கப்படவில்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளது.