இந்தியாவில் லட்சக்கணக்கான கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் அதிகம் எதிர்பார்த்து இருந்த மத்திய அரசின் கிரிப்டோ மசோதா நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என அரசு உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டம்
மத்திய அரசு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் மிக முக்கியமான மசோதாவாக இருந்த கிரிப்டோகரன்சி மசோதா மறு ஆய்வு செய்யப்பட்டுப் பல முக்கிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக நிதியமைச்சர் திரும்பப் பெற்று விரைவில் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார்.
மத்திய நிதியமைச்சகம்
அந்த அறிவிப்புக்குப் பின் மத்திய நிதியமைச்சகம் பல முக்கியமான ஆலோசனைகளைச் செய்தது மட்டும் அல்லாமல் மொத்த கிரிப்டோ சந்தையையும் ஒழுங்கு முறைப்படுத்தச் செபி மற்றும் ரிசர்வ் வங்கியுடன் இணைந்து செயல்படத் துவங்கியது.
ஏமாற்றம்
இந்தச் சூழ்நிலையில் கிரிப்டோ வல்லுனர்களும், கிரிப்டோ முதலீட்டாளர்களும் விரைவில் கிரிப்டோ மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு பலரை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. குறிப்பாக ரீடைல் கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் மீண்டும் கிரிப்டோகரன்சி முதலீடு தடை செய்யப்படுமா என்ற பயத்தையும் உருவாக்கியுள்ளது.
இரு டிஜிட்டல் கரன்சி
மேலும் ரிசர்வ் வங்கி இரு டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு வரும் நிலையில் கிரிப்டோ மசோதாவில் இருந்து தனியாக டிஜிட்டல் கரன்சியைப் பிரிக்க வேண்டுமா என்பது குறித்தும் மத்திய அரசு ஆர்பிஐ-யிடம் விசாரணை செய்து வருகிறது.
கிரிப்டோ மசோதா
மேலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டும் கிரிப்டோ மசோதா எந்த விதத்திலும் உலக நாடுகளின் கிரிப்டோ ப்ரேம்வொர்க்-க்கு குறைவாக இருக்கக் கூடாது என்பதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மேலும் தற்போது செய்யப்படும் மாற்றங்கள் அனைத்தும் நுகர்வோர் முதலீட்டைக் காப்பாற்றவும், இதேவேளையில் பாதுகாப்பான முதலீட்டுத் தளத்தை ஏற்படுத்தவும் தான் என அரசு உயர் அதிகாரி ஒருவர் வர்த்தகப் பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி சமுக வலைத்தளம் மற்றும் கிரிப்டோகரன்சி துறையைச் சர்வதேச நாடுகளுக்கு இணையாக ஒழுங்கு முறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மத்திய நிதியமைச்சகம் கிரிப்டோகரன்சி பெயரில் நடத்தப்படும் போலி முதலீட்டுத் திட்டங்கள், MLM திட்டங்கள், சிட் பண்ட் திட்டங்களை மொத்தமாகத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.