டெல்லி: வளர்ந்து வரும் தொழில்நுட்பம் என்பது நமக்கு வளர்ச்சிக்கான முதுகெலும்பாகவும், முன்னேற்றத்தின் வரபிரசாதமாகவும் இருக்கிறது என்றால் அது மிகையல்ல. ஆனால் அதே சமயம் அதே தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆன்லைன் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.
இந்தியாவில் 10 நிமிடத்திற்கு ஏதேனும் ஒரு சைபர் குற்றங்கள் நடப்பதாக சில அறிக்கைகள் கூறுகின்றன. அதை உறுதிப்படுத்தும் விதமாகவே நாளுக்கு நாள் சைபர் குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
தென் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் சைபர் குற்றவாளிகளால் தான் 9 லட்சம் ரூபாயை இழந்துள்ளதாக, டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
ஜன் தன் கணக்கும் மூலம் மோசடி
காவல் துறையினர் எப்போதும் போல வழக்கமான சைபர் வழக்காகத் தான் இருக்கும் என்றும் நினைத்தனர். ஆனால் அவர்களுக்கு அங்கு காத்திருந்த ஆச்சரியம் என்னவெனில் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்த ஜன் தன் வங்கி கணக்குகள் மூலம் மோசடிகள் நடந்திருப்பது தான். ஜார்கண்டின் ஜம்தாரா மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்களின் பெயர்களில் திறக்கப்பட்ட நான்கு ஜன் தன் கணக்குகளின் மூலம் பண பரிமாற்றம் நடை பெற்றுள்ளது. அதிலும் அந்த நான்கு பேரின் கட்டை விரல்களை பயன்படுத்தி பணம் திரும்ப பெறப்பட்டுள்ளது தான் இதில் வேடிக்கையே.
மோசடியாளர்கள் ஆவணங்கள் பெறுகின்றனர்
அந்த ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் நான்கு பேரை தேடிப்பிடித்து விசாரித்த போது தான் தெரிய வந்துள்ளது உண்மை. அவர்களிடம் வங்கி அதிகாரி என மோசடி செய்து, ஆதார், ரேஷன் மற்றும் பிபிஎல் கார்டு, இது தவிர அவர்களின் கட்டைவிரல் பதிவையும் பெற்றுள்ளனர். மேலும் இந்த மோசடியாளர்கள், 2014ல் தொடங்கப்பட்ட அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற திட்டத்தை மேற்கோள் காட்டி, தங்களது மோசடியை அரகேற்றியுள்ளனர்.
வங்கி எண் மாற்றம்
பின்னர் அந்த நான்கு தொழிலாளர்களின் வங்கி பாஸ்புத்தகத்தை பெற்று தகவல்களை சரிபார்க்கப்பட்ட போது, எல்லா தகவல்களும் சரியானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இதில் வேடிக்கை என்னவெனில் அங்கு வங்கிக் கணக்கு எண் மற்றும் வங்கியின் பெயர் மட்டும் வேறுபட்டிருந்ததாகவும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.
பணம் பறிப்பு
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், இது ஒரு முறை இருமுறை அல்ல. டெல்லியில் பல தொழிலதிபர்களிடம் இருந்து, வங்கி மற்றும் மொபைல் வாலட் மூலம், சைபர் திருட்டு மூலம் பணம் பறிக்கப்படுகிறது. நாடு முழுவதும் வேகமாக விரிவடைந்து வரும் இந்த மோசடியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஒரு புறம் இருந்து வந்தாலும், ஏழை மக்களின் கணக்குகள் மூலம் திருடுவதும் தற்போது இது மிக வேகமாக பரவி வருகிறது.
கல்வியறிவு அற்றவர்களை குறிவைக்கும் மோசடியாளர்கள்
இதே போல மற்றொரு வழக்கில் தென் டெல்லியில் வசிக்கும் Hauz Khas என்பவர் 3.7 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். இந்த பணம் தொலைதூர பகுதிகளில் உள்ளவர்களின் வங்கிக் கணக்குகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பீகார் ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஏழை மற்றும் கல்வியறிவு அற்றவர்களுக்களை குறிவைத்து இது போன்ற மோசடி அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் அரசின் உதவியை பெறுவதற்காக மக்களுக்கு உதவுவதாக, மக்களையே ஏமாற்றுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
கட்டை விரல் பதிவு
இது குறித்த காவல் துறை விசாரணையில் வெற்று காகிதத்தில் எடுக்கப்பட்ட கட்டைவிரல் பதிவுகள் டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு பணத்தை மோசடி செய்ய நினைப்பவர்கள் பனத்தை திரும்ப பெறுவதற்காக, கட்டை விரலை போல பாலிமர் ரசாயன முத்திரை தயாரிக்கும் இயந்திரங்களை பயன்படுத்துகின்றனர் என்றும் கருதப்படுகிறது. மேலும் வங்கிக் கணக்கில் உள்ள புகைப் படங்களை அழிக்க போட்டோஷாப்களை உபயோகப்படுத்துகிறார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
பணம் பரிமாற்றம்
அதிலும் இதில் கண்டறியப்பட்ட மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவம் என்னவெனில், சில சந்தர்ப்பங்களில் கிராமவாசிகள் இணைய ஏமாற்றுகாரர்களுக்கு தங்கள் கணக்குகளை விற்பதாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் நகர்புறங்களில் வசிக்கும் பொதுமக்களின் பணத்தை சில நிமிடங்களில் முடக்கி, அடுத்த சில நிமிடங்களில் அதை கிராமப்புறங்களில் உள்ள வங்கி கணக்கிற்கு மாற்றும் செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறையின் டிசிபி அனிஷ் ராய் கூறியுள்ளார்.
மோசடிக்கு வழி வகுக்கும் சலுகைகள்
ஒரு தசாப்திற்கு முன்னர் ஒரு சேமிப்பு கணக்கை துவங்க இரண்டு உத்தரவாதங்கள் தேவை. ஆனால் இன்றளவில் வங்கியாளர்கள் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலையே அடைகிறார்கள். அங்கு தேவையான ஆவணங்கள் மற்றும் கையெப்பங்கள் மற்றும் கட்டை விரல் பதிவுகள் என அனைத்தையும் வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் இப்படியாக வாங்கப்படும் ஆவணங்கள் தவறாகப் பயன்படுத்தப்ப்டலாம் என்றும் மற்றொரு இணைய நிபுணர் அனுஜ் அகர்வால் தெரிவித்துளார்.
டெல்லியில் மாதம் 150 இணைய மோசடி வழக்குகள்
டெல்லியில் ஒவ்வொரு மாதமும் சுமார் 150 இணைய மோசடி வழக்குகள் பதியப்படுகின்றன. இதில் டெபிட்கார்டு மற்றும் கிரெடிட் கார்டு, இணைய வங்கி கணக்குகள் என வங்கி தொடர்பான பல மோசடிகள் நடக்கின்றன. இந்த நிலையில் ஆன்லைன் மோசடி மூலம் ஹரி நகர் குடியிருப்பாளர்களிடமிருந்து 9.5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நைஜீரியாவைச் சேர்ந்தவர், கடந்த டிசம்பர் 8ம் தேதி கைது செய்யப்பட்டார்ர். இதே கடந்த ஜூன் மாதம் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மக்களிடம் இருந்து ஏமாற்றியதற்காக மூன்று நைஜீரிய பிரஜைகளை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். .
கேஓய்சியால் பிரச்சனை
அதிலும் ரிசர்வ் வங்கி கேஒய்சி இணக்கத்தை பயன்படுத்தி, டிஜிட்டல் பணப்பைகள் மற்றும் நிதி நிறுவனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு சைபர் கிரைமினல்கள் மக்களை ஏமாற்ற ஒரு நெம்புகோலாகப் பயன்படுத்துகின்றனர். ஒரு கடினமான ஆவணப்படுத்தல் செயல்முறைக்குச் செல்வதற்குப் பதிலாக பயன்பாடுகளைப் பதிவிறக்குவது மற்றும் தகவல்களை வழங்குவது போன்ற குறுக்கு வழிகளை மக்கள் விரும்புகின்றனர். இது அவர்களை மோசடி என்னும் பாதாள சாக்கடைக்குள் தள்ளுகின்றன.
ஆக மக்கள் எங்கும் எதிலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற மோசடிகளை தவிர்க்க வங்கியை சென்று நேரடியாக அணுக வேண்டும். தாங்கள் வங்கி அதிகாரி என்று கூறி உங்களை தேடி வருபவர் உண்மையான வங்கி அதிகாரி என்றும் தெரியும் வரையில் எந்த ஆவணங்களையும் கொடுப்பதில் எச்சரிக்கையோடு இருங்கள்.